Thursday, November 13, 2014

ராஜயோக தியானம் : தொடர்பினை ஏற்படுத்துதல்


பேச்சின் ஒலிவடிவம் மற்றும் கண்களின் பார்வை போன்ற பௌதீக சக்திகளினால் இருவர் தொடர்பினை ஏற்படுத்தும்போது அதன் அடிப்படையில் இருப்பது எண்ணங்கள் மூலமான தொடர்பேயாகும். அங்கே உண்மையில் அவர்களின் எண்ணங்களின் இசைவாக்க தொடர்பாடலே நிகழ்கிறது. இதேபோன்று நாம் பரமதந்தையுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கும் எமது எண்ணங்களையே உபயோகப்படுத்துகிறோம். 

இதனாலேயே கீதையில் 'மன்மனாபவ' என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் உங்களின் மனதினை என்மீது ஒருமுகப்படுத்துங்கள் என்பதாகும்.

ஒரு பக்கம் பார்த்தால் இது மிக இலகுவானதாக தோன்றும். கடுந்தவம் மற்றும் வழிபாடுகள் என்று எமது பௌதீக உடலுக்கு எவ்வித கஷ்டங்களும் கொடுக்கவேண்டியதில்லை. நாம் செய்யவேண்டியதேல்லாமே எமது எண்ணங்களினை, மனதினை இறைவனை நோக்கித் திருப்புவதேயாகும். இத்தகைய மிக இலகுவான செயலே எமக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில் எமது எண்ணங்களினை எங்கே ஒருமுகப்படுத்துவது என்று எமக்குத் தெரியாது. அவற்றினை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்றும் தெரியாது.

இதனாலேயே தான் ஞானம் தேவைப்படுகிறது. நான் யார் என்று அறிந்து கொள்வதன் மூலம் ஆத்மாவானது எவ்வாறு எண்ணங்களை உருவாக்குகிறது என்று தெரியவருகிறது. பரமாத்மாவினைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் அவர்மீது எமது எண்ணங்களை ஒருமுகப்படுத்த முடிகிறது. ஞானத்தினையும் அன்பினையும் பெற்றுக்கொண்ட பின்னர் எமது எண்ணங்கள் மிக இயல்பாகவே பிறதிசைகளிளிருந்து விலகி பரமாத்மாவின்மீது ஒருமுகப்படுகிறது. 

ராஜயோகத்தின் ஆரம்பநிலையில் மனமானது மிகவும் தீவிரமாக பயன்படுத்தப்படுகிறது. இதுவே நிச்சயமாக மிகச்சிறந்த, இலகுவான, இயல்பான வழிமுறையாகும். மனதின் தொழிட்பாட்டினை நிறுத்துவதென்பது மிகவும் கடினமான ஒரு வேலையாகும். அது தேவையுமற்றது. 

எமது மனமானது தொடந்து வேலைசெய்து கொண்டிருப்பதற்குப் பழக்கப்பட்டுவிட்டது. ஒரு வாகனமானது அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது நாம் திடீரென்று அதனை நிறுத்துவோமேயானால், அது நிற்கும். ஆனால் இத்தகைய செயல்பாட்டினால் பழுதுகள் உண்டாகிவிடுவதும் சாத்தியமே. அதேபோலவே, தொடந்து ஓடிக்கொண்டிருப்பதற்குப் பழக்கப்பட்டுவிட்ட மனத்தினை திடீரென்று நிறுத்துவோமேயானால், அது மிகவும் சிரமமானதாக இருக்கும் அல்லது அது மிகக் குறுகிய காலத்திற்கே வெற்றியை அளிக்கும். மனமானது மீண்டும் வேறொரு திசையில் சென்று பின்பு மொத்தமாகவே அதனது கட்டுப்பாட்டினை நாம் இழந்துவிடுகிறோம்.  

அனுபவநிலை 

தந்தை எமக்கு மிக அழகான ஒரு முறையினை சொல்லித்தருகிறார். அதாவது, மனதினை ஓடவிடுங்கள். வெறுமனே அது செல்லும் திசையினை கட்டுப்படுத்துங்கள். புத்தியானது ஞானத்தினைக் கொண்டிருக்கும்போது, எமது எண்ணங்களானது சாதாரண பௌதீக செயல்களிலிருந்து விலகி "நான் யார்? எனது ஆதி பண்புகள் என்ன? எனது வீடு எது? எனது தந்தை யார்? அவருடனான எனது உறவுமுறை என்ன? அவரது பண்புகள் யாவை? அவர் எங்கு இருக்கிறார்? அவர் என்ன செய்கிறார்?" போன்ற உயர்ந்த சுயதேடல்சார்ந்த எண்ணங்களைக் கொண்டிருக்கும். 

இவ்வனைத்து கேள்விகளுக்கான விடைகளும் ராஜயோகதியானத்தில் தரப்படுகிறது. ஆத்மாவானது இக்கேள்விகளை மிக ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்குகிறது. ஞானத்தினை நன்றாக கடைந்து இவற்றிற்கான விடைகளை ஆத்மாவானது தெளிவாகக் கண்டுகொள்ளும்போது, அது மிக இயல்பாகவே பௌதீக உலகிலிருந்து சூட்சும உலகிற்கு சென்றுவிடுகிறது. பின்பு தியானம் மிக இயல்பாகவே நடக்கும்.

பரமாத்மாமீதான முழுமுக ஒருமைப்பாட்டினை நாம் அடைந்து மிக மிக ஆழமாகச் செல்லும்போது அவரின் பண்புகளை கண்டறிந்து, அவருடன் எமக்குள்ள பலவிதமான உறவுமுறைகளையும் அனுபவம் செய்கிறோம். உணர்வு நிலையுடைய எண்ணங்கள் இன்னும் தொழிட்படினும் அவையனைத்தும் ஆத்மீக ஞானத்தின் வேறெந்தப் பகுதிகளிலுமல்லாமல் தந்தை ஒருவரிடமே ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும். 

தியான நிலையின்போது ஆத்மீக ஞானத்தின் பல்வேறு பகுதிகள் எடுத்துக்கொள்ளப்படினும், ஒருமுகப்படுத்தும் நிலையில் நாம் பரமாத்மாவுடன் மட்டுமே தொடர்பில் இருக்கிறோம். எமது எண்ணங்கள் ஓடுவதை நிறுத்தி அமைதியாகின்றன. மனமானது அசைவற்று இருக்கும்போது பரமாத்மா எம்மிடம் பேசுவது கேட்கத் தொடங்கும். ஒருமுகப்படுத்தலின் ஒருகட்டத்தில் பரமாத்மா உண்மையில் எவ்வாறு இருக்கிறாரோ அவ்வாறே எம்மால் அவரை முழுவதுமாக அனுபவம் செய்ய முடியும். 

இதன்போது பரமாத்மாவின் பண்புகளால் நாம் முழுதாக நிரப்பப்படுகிறோம். அவற்றை கிரகித்து நாம் மாற்றமடைகிறோம். பின்பு அவற்றினை அகிலத்திற்கு பரப்பத் தொடங்குகிறோம். 

இப்போது எந்த உணர்வுள்ள நினைவுகளும் எம்மிடம் காணப்படாது. முற்றிலும் அனுபவநிலை நிறைந்திருக்கும். இந்நிலையிலிருந்து மீண்டு வந்ததும் எம்மால் அதை வகைப்படுத்த முடியும். எண்ணங்கள் மீண்டும் ஆரம்பிக்கின்றன. ஆனால் அத்தகைய அனுபவ நிலையில் எவ்வித என்ணங்களுமே காணப்படாது.







  


Wednesday, November 12, 2014

ராஜயோக தியானம் : வளர்ச்சிப் படிநிலைகள்


ராஜயோகமானது சமாத்வ (மனஅமைதி அல்லது உள்முகச் சமநிலை) யோகமாகும். பரம தந்தையுடனான தொடர்பில் நாம் இருப்பதனால் ஏற்றத்தாழ்வுமிக்க புற உலகின் செல்வாக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். இந்த தூய்மையற்ற கலியுகத்தின் எதிர்மறையான தாக்கத்திலிருந்து விடுபடுகிறோம். எமது எண்ணங்கள், புத்தி மற்றும் சம்ஸ்காரங்கள் அனைத்துமே பரமாத்மாவின் பண்புகளின் செல்வாக்கின்கீழ் மட்டுமே இருப்பதனால் உள்முகச் சமநிலை ஏற்படுவதுடன் எமது இருப்பின் முழுமையும் அதனைப் பிரதிபலிக்கிறது.

இங்கே விவரிக்கப்பட்டவை தவிர இன்னும் பல யோகமுறைகள் காணப்படுகின்றன. இருப்பினும் அவை அனைத்துமே ராஜயோகத்தினுள் உள்ளடங்குகின்றன. எனவே இந்த அதிமேன்மையான யோகமே எம்மை முற்றுமுழுதாக விருத்தி செய்வதற்கான, ஆத்மாவுக்கான யோகமாகும்.
   
ராஜயோகத்தின் வளர்ச்சிப் படிநிலைகள் பிரதானமாக மூன்று வகைப்படும். 

முதல் நிலை : தியானம் 
ராஜயோகத்தினது அடிப்படையானது பல யோகமுறைகளிலிருந்தும் வேறுபட்டதாகும். இதனது ஆரம்ப நிலை தியானம் என்றழைக்கப்படுகிறது. ஆனால் இந்த தியானத்தில் எவ்வித மந்திர உச்சாடனங்களோ, ஒலிகளோ அல்லது பௌதீக வடிவங்களோ பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக ஞானமே உபயோகிக்கப்படுகிறது. 

தியானத்தின் ஆரம்ப நிலையானது, 'நான் ஓர் ஆத்மா' என்ற நினைவில் மனதை நிலைக்கச் செய்வதாகும். அப்போது புத்தியானது சம்ஸ்காரத்தினுள் ஆழமாகச் சென்று சக்தி வாய்ந்த அமைதி மற்றும் தூய்மையை வெளிக்கொண்டுவரும். இதற்க்கு புத்தி வலிமை பெறவேண்டும். ஞானம் மட்டுமே போதாது. 

இரண்டாவது நிலை : ஒருமுகப்படுத்துதல் 
ஒருமுகப்படுத்துதல் என்றால் மனதை ஒரு எண்ணத்தில் நிலைக்கச் செய்தல். அச்சமயம் மனமானது அத்தகைய எண்ணத்தின் வடிவத்தினைப் பெறுகிறது. தியானத்தின் மூலம் பல்வேறு திசைகளில் செல்லும் எண்ணங்களானது நிறுத்தப்பட்டு மனம் ஒருமுகப்படுகிறது. இதன்போது புத்தியானது கூர்மையாகிறது. ராஜயோகியானவர், பௌதீக வடிவத்தில் தனது மனதினை ஒருமுகப்படுத்துவதை விடுத்து, பௌதீக உருவமற்ற அசரீரியான பரமாத்மாவுடன் இணைப்பினை ஏற்படுத்துகிறார். 

ஆரம்பத்தில் மனதை சில விநாடிகளுக்குமேல் ஒருமுகப்படுத்துவது கடினமாக இருக்கலாம். எண்ணங்கள் இலகுவில் சிதறி பல திசைகளில் மீண்டும் சென்றுவிடும். எனினும் ஒருவினாடி மட்டுமே ஒருமுகப்படுத்த முடிந்தாலும் அது மிகப்பெரிய வெற்றியேயாகும். ஏனெனில் அந்த ஒருவினாடியே தொடர்ந்து ஒருமுகப்படுத்தவேண்டும் என்ற வேட்கையை உருவாக்குகிறது. இதனை சோதனைசெய்து பார்க்கும் காலகட்டமாக எடுத்துக்கொள்ளலாம். இதன்போது கடந்தகால சம்ஸ்காரங்கள், மற்றும் உடலைப்பற்றிய எண்ணங்களும் வந்து இடையூறு விளைவிக்கும். எனினும் நாம் இவற்றை சாதகமாக எடுத்துக்கொண்டு பாதகமான எண்ணங்களை ஞானக்கருத்துகளை மனதில் கொண்டுவருவதன் மூலம் அகற்றமுடியும். 

மூன்றாவது நிலை : உணர்தல் 
ராஜயோக தியானத்தின் முழு நோக்கமுமே பரமாத்மா மீதான முழுமுக ஒருமைப்பாடு அல்லது தொடர்பினை ஏற்படுத்துதல் ஆகும். கடவுளின் உருவம் மற்றும் குணங்களின் மீது ஒருமுகப்படுத்தும்போது தியானத்துக்குத் தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தியாகின்றன. இந்த முழுமுக ஒருமைப்பாடானது உணர்தல் என அழைக்கப்படுகிறது. 

வேறு சில யோகங்களை பயிற்சி செய்யும் யோகிகள் கட்டாயத்தின் அடிப்படையில் எதிர்மறையான எண்ணங்களை வெளியேற்றி மனதினை வெறுமையாக வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள். இத்தகைய முறையில் மனமானது தற்காலிகமாகவே காலியாக இருக்கும்.  அத்துடன் எதிர்மறையான எண்ணங்களுடன் சேர்த்து நல்ல எண்ணங்களும் வெளியேற்றப்படுகின்றன. தூய எண்ணங்கள் ஆத்மாவுக்கு ஊட்டச்சத்து போன்றவை. இவை ஞானத்தினை நடைமுறையில் உணர்த்துகின்றன. மனமானது தூய சக்திவாய்ந்த எண்ணங்களின் ஓட்டத்தினை அனுபவம் செய்யும்போது, ஆத்மாவானது தூய குணங்களின் அனுபவத்தில் இருப்பது சாத்தியமாகிறது. 

மந்திரம் அல்லது பொருளை உபயோகித்தல்
ஒரு மந்திரத்தையோ அல்லது பொருளினையோ பயன்படுத்தி தியானம் செய்யுமிடத்து எம்மால் அதிக பட்சமாக, அந்த மந்திரத்தின் மீதோ அல்லது பொருளின்மீதோ தான் மன ஒருமுகப்பாட்டை அடையமுடிகிறது. இதனால் நாம் மிக நிச்சயமாக பரமாத்மாவுடனான தொடர்பை அனுபவம் செய்வததிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். இத்தகைய முறைகள் மூலம் எமது எண்ணங்களானது, எமது பௌதீக இருப்பு சார்ந்த, எமக்கு இதுவரை காலமும் துன்பத்தை வழங்கிய அல்லது குற்ற உணர்வுகளை ஏற்படுத்திய எண்ணங்களிலிருந்து விலகிவிடுவதனால் நாம் ஓரளவு மன அமைதியை பெறமுடியும். இருப்பினும் எமது எண்ணங்கள் குறித்த மந்திரத்தை அல்லது பொருளை நோக்கி இருக்கும் வரையில் மட்டுமே எம்மால் தியானத்தினை செய்யமுடிகிறது. எனவே தியான காலம் முடிவடைந்த பின்னர் நாம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடுகிறோம்.

ராஜயோக தியானமானது வெறுமனே மன ஒருமைப்பாட்டிற்கான பயிற்சியாக அல்லாமல், இறைவனுடனான தொடர்பினை பெறுவதை பிரதான நோக்கமாகக் கொண்டது. இறைவனுடன் எவ்வாறு தொடர்பினை ஏற்படுத்துவது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.