Thursday, October 30, 2014

ராஜயோக தியானம் : Meditation - Supreme Communication

தியானத்தில் அமர்ந்திருக்கும்போது, கீழ்க்கண்ட எண்ணங்களை சிந்தனையில் கொண்டுவந்து, அவற்றிலிருந்து சக்தியை பெற்றுக்கொள்வதனை அனுபவம் செய்யவும்.

தியானத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட எண்ணங்கள்
நான் ஓர் ஆத்மா என்ற விழிப்புணர்வில் இருக்கிறேன்.. நான் புருவமத்தியில் இருக்கும் மிகச்சிறிய ஒளிநிறைந்த புள்ளியாவேன்.. எனது எண்ணங்கள் இந்த உடலுக்கு அப்பால்.. பௌதீக உலகத்துக்கும் அப்பால் சென்று.. மகத்தான ஒளிநிறைந்த பகுதியை அடைகிறது.. அங்கே முழுமையான அமைதியும்.. ஸ்திரத்தன்மையும் இருக்கிறது.. இதுவே எனது வீடாகும்.. 
நான் இப்போது சிவபாபாவின் முன்னால் இருப்பதை உணர்கிறேன்.. ஒளிநிறைந்த புள்ளி வடிவான பாபாவிலிருந்து ஒளியானது கடல் போல எங்கும் பரவுகின்றது.. நான் அந்த ஒளியை எனக்குள் உள்வாங்கிக் கொள்கிறேன்.. பாபா அமைதிக் கடலாவார்.. நான் அந்த அமைதியின் அலைகளை உணர்கிறேன்.. அவை இதமாக.. குளிர்மையாக.. ஆத்மாவை அமைதிப்படுத்துகிறது.. அந்த அமைதியே எனது இயல்பு நிலையாகும்..  
நான் ஆரம்பத்தில் இவ்வாறே இருந்தேன்.. இனிமேல் எப்போதும் இவ்வாறே இருப்பேன்..  
எல்லாம் வல்லவர் தனது சக்தியால் என்னை நிரப்புகிறார்.. பலகீனமான ஆத்மா இப்போது மாற்றமடைந்துவிட்டது.. இப்போது நான் வலிமை.. சக்தி.. அமைதி.. ஒளி.. வல்லமை.. தூய்மை.. பேரானந்தம்.. என்பவற்றின் சொரூபமாகிவிட்டேன்..  

பயனுள்ள முறை : இரவில் எமது கடைசி எண்ணங்களாக எது இருக்கிறதோ, அதுவே காலையில் எமது முதல் எண்ணங்களாகவும் இருக்கும். எனவே இரவு தூங்கப்போகுமுன்பு எமது எண்ணங்களை, தியானத்தின் மூலம் பரமாத்மாவுடன் இணைத்துவிட்டோமேயானால், தூக்கத்தில் அமைதி நிலைத்திருக்கும். 

அதேபோல், காலையில் எழுந்தவுடன் வரும் முதல் எண்ணங்களே அன்றைய நாளுக்கான அடித்தளத்தினை இடுகின்றன. எனவே வழமையாய் எழும்பும் நேரத்தை விட சில நிமிடங்கள் முன்பாக எழுந்து, தியானத்தின் மூலம் பரமாத்மாவிடமிருந்து சக்தியை பெற்றுக்கொண்டோமேயானால், ஆத்மாவினால் அன்றைய தினத்தினை இலகுவாகவும், அன்பு நிறைந்ததாகவும் கழிக்க முடியும். 

இதனை தினசரி சோதனை செய்து விளைவினை அறிந்து கொள்ளலாம்.

மீட்டல் : கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கு முன்னர், 'நான் யார்?' என்பதை நினைவுகூருவதன் மூலம் எமது புத்தியை தெளிவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் ஏற்படும் வித்தியாசத்தினை பலர் உணர்ந்துள்ளனர். 

வினாக்கள் 

1. பரமாத்மாவின் வடிவம் என்ன? சிவா என்ற பெயரின் பொருள் என்ன?
2. பரமாத்மாவுக்கும் ஆத்மாவுக்கும் இடையேயான வேறுபாட்டினை விளக்குக?
3. இறைவன் சர்வவியாபியாக இருக்க முடியாது என்பதற்கான காரணங்கள் சில?
4. மூவுலகம் என்பதன் பொருள் யாது?








Tuesday, October 28, 2014

ராஜயோக தியானம் : பரமாத்மா எங்கும் நிறைந்தவரா?

பரமாத்மாவினை சின்னஞ்ச் சிறிய புள்ளியாக, நிலையான வடிவம், இருப்பிடம் கொண்டவராக கருதுவதென்பது சற்றே அந்நியமாகத் தோன்றலாம். இறைவனானவர் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பவர், அதாவது சர்வவியாபி என்பது,  கிழக்கு மற்றும் மேற்கத்தைய நாடுகளில் பரவலாக இருக்கும் ஒரு வலுவான கொள்கையாகும். இதனோடு தொடர்புபட்ட சில கருத்துக்களை இப்போது ஆராய்வோம்.

பரமாத்மாவானவர் எங்கும் வியாபித்திருப்பவர் எனில் அவரது பண்புகளும் அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்க வேண்டுமல்லவா? அவ்வாறெனில் உயிருள்ளவற்றிட்கும் உயிரற்றவைக்கும் எவ்வித வித்தியாசமுமிருக்காது. ஏனெனில் அனைத்துமே நிச்சயமாக பரமாத்மாவின் பண்புகளை பிரதிபலிப்பனவாக இருக்கும். பாவச்செயல்கள், தூய்மையின்மை, அமைதியின்மை போன்றவை இல்லாமல் பரமாத்மாவின் பண்புகளான அன்பு, தூய்மை, ஞானம், அமைதி மற்றும் பேரானந்தம் போன்றவை மாத்திரமே வெளிப்படுத்தப்படும். 

ஆத்மாவானது அறியாமையினால் சூழப்பட்டதனால் தான் இறைவனது பண்புகளை கிரகிக்க முடியவில்லை எனில், எனக்குள் இறைவன் இருக்கிறார் எனும்போது அறியாமை எங்கிருந்து வரமுடியும்? என்ற கேள்வி எழுகிறது. பரமாத்மாவிடம் அறியாமை வந்துவிட்டது என்பதை நான் குறித்து நிற்கவில்லையா? 

பரமாத்மாவாவை எல்லையற்ற சமுத்திரம் எனவும் ஆத்மாக்களை அதன் துளிகள் எனவும், சமுத்திரம் பின்னர் அத்துளிகளை இணைத்துக்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது. எனில் சமுத்திரத்தினது துளிகள் அனைத்தும் சமுத்திரத்தின் அதே கூறுகளையும், பண்புகளையும் கொண்டிருக்கவேண்டியதும் அவசியமானதாகிறது. 

இப்போது பரமாத்மாவை ஒரு இடத்தில் இருப்பவராகவும், அவரது பண்புகள் அவ்விடத்திலிருந்து வெளிப்படுவதாகவும் கருதுவோம். நாம் இப்போது எவ்விடத்திலிருந்தாலும் எமது எண்ணங்களை அவரிடம் வழிப்படுத்தும்போது, அந்த அதிர்வலைகளை எம்மால் பெற்று, தொடர்பினை அனுபவம் செய்ய முடியும். ஒரு வானொலி நிலையத்திலிருந்து அனைத்து இடங்களுக்கும் வானலை பரவுகிறது. எங்கே ஒலிவாங்கி சரியான அலைநீளத்தில் அல்லது மீடிறன் ஒத்திசைவில் வைக்கப்பட்டிருக்கிறதோ அங்கே அந்த வானலைகளை பெறமுடிகிறது. எமது அன்றாட வாழ்வில் ஏன் இதுவரை எம்மால் பரமாத்மாவை அனுபவம் செய்ய முடியவில்லை என்பதற்கான சரியான விளக்கம் இதுவே. 

எமது மனமானது, எம்மைச் சுற்றியுள்ள பௌதீக பொருட்களின் மீதும் செயல்பாடுகளின் மீதும் ஒத்திசைவில் வைக்கப்பட்டுள்ளதால், எம்மால் பரமாத்மாவினது அதிர்வலைகளை பெற முடியவில்லை. நாம் வேறோர் அலைநீளத்தில் இருக்கிறோம். எமது எண்ணங்கள் பௌதீகத்திலிருந்து, ஆத்மவுணர்வு நிலைக்கு நகருமாயின், எம்மால் அந்த அதிர்வலைகளை பெறுவது இலகுவாகி, அவற்றின் மூலம் எமது தந்தையாகிய சிவபாபாவுடன் தொடர்பேற்படுத்தி அனுபவம் செய்ய முடியும். 












Monday, October 27, 2014

ராஜயோக தியானம் : பரமாத்மாவின் இருப்பிடம்


நாம் உறவுமுறை ஏற்படுத்திக்கொள்ளவிருக்கும் ஒருவரின் பெயரை அறிந்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அவர்கள் எங்கிருக்கிறார்கள்? வசிப்பிடம் என்ன? என்பவற்றை அறிந்திருப்பதும் அவசியமானதே. அதேபோல் இறைவனுடனான உறவுமுறையை ஏற்படுத்துவதற்கு, அவரது இருப்பிடம் பற்றி துல்லியமாக அறிந்திருப்பதன் மூலம் எமது மனதினை அவரின் பக்கம் திசை திருப்ப முடியும்.


மூவுலகம்

நாம் வசிக்கும் இந்த பௌதீக உலகமானது ஸ்தூல உலகம் எனப்படுகிறது. ஏனெனில் இங்கு வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஸ்தூல வடிவமுண்டு. வரலாறு, புவியியல் போன்ற சொற்பதங்கள் இந்தப் பௌதீக உலகத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆராய்ச்சி மூலம் பெறப்பட்ட விஞ்ஞான விதிகளும், சடப்பொருட்களின் பண்புகளும் இங்கேயே பொருந்தும்.

இந்த பௌதீக உலகமானது செயல்பாடுகளுக்கான இடமாகும். இது ஒரு சுழற்ச்சி முறையில் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகிறது. இங்கே மனிதர்கள் புறக் காரணிகளால் தூண்டப்பட்டு செயல்களை ஆற்றுவதன் மூலம் சந்தோசத்தினை அல்லது துக்கத்தினை அனுபவம் செய்கின்றனர். அதனாலேயே இவ்வுலகமானது, செயல்கள் எனும் விதைகள் விழுந்து பழம் (பலன்) கிடைக்கும் நிலத்திற்கு ஒப்பிடப்படுகிறது.

இந்த பௌதீக உலகத்தில் நடைபெறும் செயல்பாடுகளை நாடகமேடைக்கு ஒப்பிடுவது, கிழக்கில் மட்டுமல்ல மேற்கத்தைய நாடுகளிலும் காணப்படுகிறது. ஆத்மாவாகிய நடிகர், பௌதீக உடல் என்னும் ஆடையை எடுத்து, தனது கதாபாத்திரத்தினை உலக மேடையில் நடிக்கிறார். எல்லையற்ற இந்த நாடகத்தில் முடிவற்ற விதவிதமான கதாபாத்திரங்கள் நடிக்கின்றன. இதே உலகம் தான், பூரணத்துவம் மிக்க சொர்க்கம் என்றழைக்கப்படும் சத்திய மற்றும் திரேதா யுகங்களையும், ஒழுங்கின்மை மற்றும் சீரழிவு மிக்க நரகம் என்று கருதப்படும் துவாபர மற்றும் கலியுகங்களையும் கடந்து செல்கிறது. இவ்வுலகம் மொத்த பௌதீக வெளியின் மிகச் சிறிய பகுதியாகும்.

சடப் பொருள்களாலான, இந்த பௌதீக உலகத்தினைத் தாண்டி இருப்பது ஒளிநிறைந்த சூட்சும உலகம் ஆகும். படத்தில் காட்டப்பட்டது போல், நடுவே, குறிப்பாக மூன்று வேறான நிற ஒளிகளில் காணப்படுகிறது. இங்கே எண்ணம், அசைவு மற்றும் செயல்கள் உண்டு. ஆனால் ஒலி இல்லை.

இவையனைத்தையும் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது. நேரம், தூரம் போன்ற பௌதீக வரையறைகளை தாண்டி இருக்கும் இந்த உலகத்தினை, பௌதீகமல்லாத ஆத்மாவின் சக்திகளான மனம் மற்றும் புத்தியினால் மட்டுமே அனுபவம் செய்ய முடியும். பௌதீக கருவிகளின் துணைகொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளால் இந்த உலகத்தினை அடையாளம் காணமுடியாது. செம்பொன் நிறமான தெய்வீக ஒளிநிறைந்த, ஆறாவது தத்துவமாகிய பிரம்மம் என்றழைக்கப்படும் இடமாகும். இவ்வுலகத்தினது நிலை, ஒருபோதும் மாற்றத்திற்குள்ளாகாது. இங்கு அசைவுகளோ சத்தமோ இல்லை. இங்கே நிறைவான அமைதி, நிசப்தம், தூய்மை காணப்படுகிறது. ஆத்மாவானது இங்கு செயலற்ற நிலையில் இருக்கிறது. எண்ணங்கள் மற்றும் சுபாவங்கள் அனைத்தும் விதையினுள் அமிழ்த்தப்பட்டிருக்கும். இங்கே ஆத்மாவானது உடலிலிருந்து தொடர்பற்று, தனது மூல வடிவமாகிய ஒளிநிறைந்த ஆற்றலாக இருக்கும். இது செயலற்ற, புற தூண்டல்கள் எதுவுமற்ற, ஓய்வு நிலையிலுள்ள இன்னொரு தளமாகும். அனைத்து ஆத்மாக்களும் முக்தியடைந்தவுடன் இந்த இடத்தில் பரமாத்மாவுடன் சிலகாலம் தங்கியிருப்பர். இதுவே அனைத்து ஆத்மாக்களினதும் வீடாகும். இங்கிருந்தே அனைத்து ஆத்மாக்களும் வருகிறார்கள். இங்கேயே இறுதியில் அனைத்து ஆத்மாக்களும் செல்கின்றனர். இதுவே பரமாத்மாவாகிய சிவபாபாவினதும் இருப்பிடமாகும்.

ராஜயோகியானவர், தனது மனதினை இந்த பௌதீக உலகத்திலிருந்து திருப்பி தந்தையின் இருப்பிடமான பரந்தாமத்துக்கு வழிப்படுத்துவதன் மூலம் முழுமையான அமைதியை அனுபவம் செய்கிறார்.










Saturday, October 25, 2014

ராஜயோக தியானம் : பரமாத்மாவின் பண்புகள்


இந்த பூமியையே காகிதமாகவும், சமுத்திரத்தை மையாகவும், மரங்கள் அனைத்தையும் இறகாகவும் மாற்றினாலுமே இறைவனினது முழு பண்புகளையும், மகிமைகளையும் எழுதிமுடிப்பது சாத்தியமல்ல என்று சொல்லப்படுகிறது. எனினும் சில குறித்த சிறப்பியல்புகளை புரிந்து கொள்வதற்காக, அன்பு, அமைதி, தூய்மை, பேரானந்தம் மற்றும் சக்தி போன்ற குறிப்பிட்ட பண்புகளை எடுத்துக்கொள்வோம். தியானத்தில் எமது எண்ணங்களை பரமாத்மாவிடம் ஒருமுகப்படுத்தும்போது, ஆத்மாவானது பரமாத்மாவின் இந்த குணங்களால் நிரப்பப்டுவதை அனுபவம் செய்யமுடியும். ஆத்மாவானது அவற்றை தனக்குள் உள்வாங்கி இறுதில் முழுவதுமாக மாற்றமடைகிறது.

நாம் இறைவனை அனைத்து ஆத்மாக்களின் தந்தையாக ஏற்கனவே அடையாளம் கண்டுகொண்டோம். ஆனால் அனைத்து தகமைகளையும் தன்னகத்தே கொண்ட ஒளிப்புள்ளியாகிய பரமாத்மாவை தாயாகவும், தந்தையாகவும் அனுபவம் செய்வதும் சாத்தியமே. 'அவன்' என்ற வார்த்தை தந்தைக்குரிய பாத்திரத்தினை மிக அழுத்தமாக பதிந்தாலுமே, ஒரு தாய்க்குரிய அன்பினையும், கருணையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறார். தவிர, பரமாத்மாவிடம் அனைத்து தகமைகளும் காணப்படுவதனால், அவரை பலவிதமான பாத்திரங்களில், உறவுமுறைகளில் அனுபவம் செய்யமுடியும்.

இறைவனுடனான தொடர்பென்பது, அவர் மிகநுண்ணிய ஒளிப்புள்ளி என்ற விழிப்புணர்விலேயே சாத்தியமாகும். மனதை ஒரு பெரும்பரப்பில் ஒருமுகப்படுத்துவதென்பது சாத்தியமற்றது. முழு உருவத்தினையும் காணும்போது, மனமானது, கண் மற்றும் மூளையுடன் இணைந்து, முழு காட்சிகள் கொண்ட ஒரு படத்தொகுப்பையே உருவாக்கி விடுகின்றது. எனவே ஒரு பொருளின் மிகச்சிறிய பாகத்தில் தான் மனதை முழுதாக ஒருமுகப்படுத்த முடியும். பரமாத்மாவுடன் இணைப்பினை அனுபவம் செய்யவிரும்பும் ஓர் ஆத்மா, அவரை மிகச்சிறிய ஒளிப்புள்ளியாக காண்பதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்துவது சாத்தியமாவதுடன் அவருடன் இணைதலையும் அனுபவம்செய்ய முடிகிறது. இதன் மூலம் உறவுமுறை  கட்டியெழுப்பப்படுகிறது.

பரமாத்மாவின் பெயர்: மிக நெருங்கிய தொடர்பிலுள்ள ஒருவரின் பெயரை நாம் அறிந்துவைத்திருப்பது வழமையானதே. உலகத்தில் எத்தனை மொழிகளுண்டோ அத்தனை பெயர்களால் இறைவன் அழைக்கப்படுகிறார். அவை அனைத்தும் ஒரு சிறப்புப் பொருள்கொண்டதாகவோ பண்பை உணர்த்துவதாகவோ இருக்கிறது. ஆனாலுமே "சிவா" என்ற நாமமானது பலபொருள்  கொண்டதாகவும், உலகனைத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது. 'சிவா' (Shiva) என்ற சொல்லுக்கு நன்மையளிப்பவர், புள்ளி மற்றும் விதை என்று மூன்று பிரத்தியேக பொருளுண்டு. 

சிவா என்ற சொல்லிலேயே இறைவனது முக்கிய பண்புகளை எம்மால் காணமுடியும். அவர் நன்மையளிப்பவர், அன்பான தந்தை, மிகச்சிறிய ஒளிநிறைந்த புள்ளி வடிவானவரே விருட்சத்தினது விதையுமாவார். மனித விருட்சத்தினது முழு ஞானத்தினையும் தன்னகத்தே கொண்ட இவ்விதையே அவ்விருட்சத்தின் சிருஷ்டிகர்த்தா ஆகும். இப்பெயரானது கோட்பாடுகள் சார்ந்த விளக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. எனினும் நாம் தியானத்தின்போது 'பாபா' என்ற பெயரை உபயோகிக்கிறோம். இதன் அர்த்தம் தந்தை ஆகும். பாபா என்றவுடன் உடனடியாகவே எமது அன்பான தந்தையுடனான எமது மிக நெருங்கிய உறவுமுறை நினைவுக்குக் கொண்டுவரப்படுகிறது. அதனால் இவரே அசரீரியான, அதிமேலான பரமாத்மா, சிவபாபா.









  

Friday, October 24, 2014

ராஜயோக தியானம்: பரமாத்மாவின் வடிவம்

ஆத்மாவானது மிகச்சிறிய ஒளிப்புள்ளி, மிக நுண்ணிய ஆற்றல் என்பதனை அடையாளம் கண்டு கொண்ட பின்பு, எம்மால் மற்றையவர்களை சகோதரர்களாக பார்க்க முடிகிறது. ஒவ்வோர் ஆத்மாவும் தனித்துவமான அடையாளத்தினை தன்னகத்தே கொண்டது, ஒவ்வொன்றும் வெறுவேறான, வித்தியாசமான அனுபவங்களின் பதிவுகளைக் கொண்டுள்ளது. தனித்துவமான புத்தியையும், குறிப்பிட்ட அலைநீளத்தில் செயல்படும் மனத்தினையும் கொண்டுள்ளபோதிலும் ஒவ்வோர் ஆத்மாவும் ஒரே அளவு மற்றும் வடிவத்தினை கொண்ட மிகச்சிறிய ஒளிப்புள்ளிகளாகும். எனவே அனைத்து ஆத்மாக்களின் தந்தையும் இதே வடிவத்தினைக் கொண்டிருப்பதும் சாத்தியமே.  பரமாத்மாவும் கூட மனம், புத்தி, சம்ஸ்காரம் ஆகியவற்றினைக் கொண்டிருக்கக் கூடிய தனித்துவம் வாய்ந்த ஓர் மிக நுண்ணிய ஒளிப்புள்ளியான ஆத்மாவே.

இறைவன் என்பவர் சக்தியின் வடிவமாக பல இடங்களில் கருதப்பட்டு வந்தபோதிலும், எம்மால் உறவுமுறை வைத்திருக்கக் கூடிய தனித்தன்மை மிக்க ஒருவராக கருதுவது சற்றே விசித்திரமானதே. சம்ஸ்காரம் என்றால் என்ன? ஆளுமை என்றால் என்ன? அவை செயல்களின் பதிவாகும். இறைவனானவர் நன்மை பயக்கும் செயல்களை செய்பவர் என்று நினைவுகூரப்படுகிறார். எனவே பரமாத்மாவினது சம்ஸ்காரங்களில் நன்மை உள்ளது. அவர் மெய்ஞானக் கடல் என்றும் நினைவுகூரப்படுகிறார். அனைத்து ஞானமும் அவரது புத்தியிலே இருக்கிறது. பரமாத்மாவின் புத்தியானது எல்லையில்லாதது. முழுமையான விழிப்புணர்வையும், மெய்ஞானத்தினையும் கொண்டது. பராமாத்மாவுக்கு மனம் இருக்கிறது. அவரே எல்லையற்ற அன்பினையும், அமைதியையும், கருணையினையும் கொண்டவராக அறியப்படுகிறார்.

இறைவனானவர் மிகமிக நுண்ணிய ஒளிப்புள்ளி என்ற கருத்தானது, இதுவரை அவரைப்பற்றி இருந்த முடிவற்றவர், எல்லையற்றவர் என்ற  கருத்துக்களிலிருந்து சற்றே வேறுபட்டதாகும்.  அளவிடப்பட முடியாத மிகப்பெரிதையே 'எல்லையற்றது' என்று கருதப்படுவதாக நினைக்கின்றனர். இருந்தும்  பௌதீக, கேத்திரகணித அளவியல் முறைகளுக்கு அப்பாற்பட்ட மிகமிக நுண்ணிய, அளவிடப்பட முடியாத ஒன்றைக் கூட இவ்வாறு சொல்ல முடியும். எனவே பரமாத்மாவின் வடிவம், எல்லையற்ற மிகப்பெரியது என்பதைவிட, அளவிடப்பட முடியாத மிக நுண்ணியது என்பதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

இறைவனின் பண்புகள் எல்லையற்றவை என கேள்விப்பட்டிருக்கிறோம். அதனாலேயே அவரின் வடிவத்தினையுமே எல்லையற்ற மிகவும் பெரியவர் என தீர்மானித்துவிட்டோம். ஆனால் வடிவத்துக்கும், பண்புகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மனிதர்களின் உருவத்தினை வைத்து அவர்களின் பண்புகளை நாம் தீர்மானிப்பதில்லை. அதேபோல் ஆத்மாவினது சக்திக்கும், பௌதீக பரிமாணங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. நாம் ஆத்மாவை மிகச்சிறிய ஒளிப்புள்ளியாக ஏற்கனவே அடையாளம் கண்டுவிட்டோம். இப்போது பரமாத்மாவையும் மிகச்சிறிய ஒளிப்புள்ளியாக கருதியவாறே, அச்சிறிய புள்ளியிலிருந்து எல்லையற்ற அன்பு, அமைதி, தூய்மை, பேரானந்தம், சக்தி போன்ற எல்லையற்ற திவ்ய பண்புகள் கதிர்பரப்புவதை காணலாம்.


இச்சிறிய ஒளிப்புள்ளியிலிருந்து ஒளியானது, தீபங்களிலிருந்து உருவாகும் ஒளியினைப்போல் நீள்வட்டவடிவில் பரவுகிறது. உலகம் முழுவதிலும், இறைவனானவர் ஒளிவடிவமாக, பெரும்பாலும் இத்தகைய நீள்வட்ட வடிவத்தில் நினைவுகூரப்படுகிறார். இந்த உருவம் பிற்பாடு வழிபடும் பொருட்டு, கண்ணுக்குப் புலப்படக்கூடியவாறு பெரிதாக பொன்னாலும், வெள்ளியாலும், வைரத்தினாலும் ஏன் பனிக்கட்டியினாலும் கூட உருவாக்கப்பட்டுள்ளது. உருவ வழிபாடற்ற இஸ்லாத்திலும் கூட இதேபோன்ற நீள்வட்ட வடிவான கரியநிறக் கல்லொன்று மக்காவில் வைக்கப்பட்டுள்ளது. இது (al-Ḥajar al-Aswad) புனித கல் என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிலுள்ள பௌத்தத்தின் ஒருபிரிவினர், தியானத்தில் தமது எண்ணங்களை, அமைதியை அளிப்பவர் என்று அறியப்படும் ஒரு நீள்வட்ட வடிவ உருவத்தின்மீது குவியப்படுத்துகின்றனர்.  பர்சிகளின் தீர்கதரிசியான Zoroaster, நெருப்பினை இறைவனின், அதிமேன்மையான ஒளியின் ஞாபகார்த்தமாக வழிபட பரிந்துரைத்தார். யேசுவும் இறைவனை ஒளியாக குறிப்பிட்டுள்ளார். மோசஸ், பற்றை எரிவது போலவும், ஒளி தோன்றுவதாகவும் காட்சிகள் கண்டிருக்கிறார். சீக்கிய மதத்தின் ஸ்தாபகரான குரு நானக், இறைவன் ஒன்றே எனவும் அவரை உடலற்றவராக, மனித உருவமற்றவராக குறிப்பிட்டிருக்கிறார்.  எனவே நிச்சயமாக இந்த வடிவத்திலேயே இறைவனானவர் உலகனைத்திலும் நினைவுகூரப்பட்டிருக்கிறார். 







Tuesday, October 21, 2014

தீபாவளி

தீபாவளி: எனது சொந்த 'ஆத்மீக விழிப்புணர்வு' என்ற விளக்கினை ஏற்றுதல்.

தீயசக்திகளை அழித்து அமைதியினையும் சந்தோசத்தினையும் ஏற்படுத்துவதை விளக்கும் தீபத் திருநாட்கள் அனேகமாக அனைத்து சமூகங்களிலும் காணப்படுகின்றது. தீபாவளி என்றவுடன் உடனடியாகவே மனதில் தோன்றுவது, இனிப்புகள், புதிய ஆடைகள், கணக்குவழக்கு புத்தகங்கள், இலக்ஷ்மிதேவி, வானவேடிக்கை போன்றவைகளே.. மகாராஷ்ட்ராவில் இது ஐந்து நாட்கள் சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. என்னதான் பௌதீக சடங்குகள் அவசியமாக இருப்பினும், அவற்றையும் தாண்டி ஆழமான ஆன்மீக அர்த்தத்தினையும் அறிந்திருப்பது, அவற்றின் மீதான மதிப்பினை தக்கவைத்து அதன்படி வாழ வழிவகுக்கும். 

நாம் இத்தகைய மங்களகரமான நாட்களை கடந்த காலங்களைப் போலவே மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடுகின்ற போதிலும், எமது முன்னோர்களிடம் காணப்பட்ட தூய நம்பிக்கைகள் அதிக தெளிவூட்டுபவையாக இருந்தன. 

தீபாவளி என்பது தீய சக்திகள் மீதான வெற்றியை குறிக்கிறது. ஆனால் இதை மேலும் நன்கு ஆராய்ந்து பார்த்தோமானால், எந்த இருளினை அல்லது தீய சக்திகளை நாம் நீக்கப் போகிறோம்? உண்மையில் தீயசக்திகளுக்கோ அல்லது இருளுக்கோ என்று சொந்தமாக வடிவமோ அடையாளமோ இல்லை. மாறாக அவை, நற்குணங்கள் அல்லது ஒளியின் பற்றாக்குறையே ஆகும். 

முதல் நாள் (Dhanamyodashi) : இது தன்வந்திரியை வழிபடுவதில் தொடங்குகிறது. தன்வந்திரி என்பது அனைத்து நோயினையும் குணமாக்ககூடிய ஒருவித ஆயுள்வேத மூலிகையாகும். மனிதனுக்கு ஏற்படும் நோய்களில் 98% ஆனவை உளவியல் சம்பந்தப்பட்டவை, அதாவது பிரச்சினை மனதில் தான் என்று விஞ்ஞானம் கூட நிரூபித்திருக்கிறது. காலம் மற்றும் சந்தர்ப்பங்களால் மனிதன் தனது உள்ளார்ந்த சக்தியின் பெரும் பகுதியை இழந்துவிட்டான். இதன் காரணமாக காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் போன்ற விகாரங்களினால் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவன் ஆகிவிட்டான். பலவீனமுற்ற மனமானது, உடலையும் பாதித்துவிட்டது. தற்போது தன்வந்த்ரியாகிய இறைவனால் பரிந்துரைக்கப்பட்ட ஆத்மீக ஞானம் எனும் மாத்திரைகளை உட்கொள்வதனால், மனதையும் உடலையும் குணமாக்கிக்கொள்ள முடியும்.

இரண்டாவது நாள் (Narkchaturdashi) : தன்னைஉணர்தல் மற்றும் இறைவனை உணர்தல் பற்றிய ஆன்மீக அறிவானது இறைவனால் மட்டுமே கொடுக்கப்பட முடியும். தீபாவளியில் விளக்கேற்றும் பாரம்பரியமானது, இறைவன் எவ்வாறு வந்து எம்மிடம் நாங்கள் ஆத்மாக்கள் என்ற விழிப்புணர்வை பற்றவைக்கிறார் என்பதை குறிக்கிறது. இந்த ஞானத்தின் உதவிகொண்டு விகாரங்களை வெல்ல முடிகிறது. இதன் ஞாபகார்த்தமே, நரகாசுரவதம் அல்லது தீயசக்திகளை அழித்தல் ஆகும். 

மூன்றாவது நாள் : இந்நாள் இலட்சுமிதேவியை வரவழைப்பதில் செலவிடப்படுகிறது. தற்காலத்தில் நாம் இலஷ்மிதேவியின் நிலையை மிகவும் தாழ்த்தி ஒரு வங்கியாளராக ஆக்கிவிட்டோம். உண்மையில் அவரது பெயரில் 'லக்க்ஷ்' என்றால் இலக்கு ஆகும். எனவே அவரது நிலையே, நாம் அனைவரும் அடையவேண்டிய இறுதி இலக்காகிய பரிபூரண நிலையாகும். தெய்வீக ஞானமும், நற்குணங்களுமே அவர் வழங்கும் செல்வங்களாகும். நன்னடத்தையுடையவர் ஒருவரால் மட்டுமே செழிப்பினையும், அமைதியினையும் அடைய முடியும். இலஷ்மியின் வருகைக்காக வீடுகள் அனைத்தும் தூய்மையாக்கப்படுகின்றன. இருந்தும் மனதையும் புத்தியையும் தூய்மையாக வைத்திருத்தலே அவரை ஈர்க்கக்கூட்டிய இலகுவான வழி என்பதை நாம் மறந்துவிட்டோம். 

நான்காவது நாள் (Balipratipada) : பரமாத்மாவின் நினைவில் இருந்து செய்யும் ஒவ்வொரு செயலிலும் நாம் வெற்றி காண்போம். ஆத்மீகத்தில் இதுவே யோகம் அல்லது இணைப்பு என்பதை குறிக்கிறது. எம்மை ஒளிப்புள்ளியாக நினைத்து, எமது புத்தியையும் எண்ணங்களையும் பரம தந்தையான இறைவனிடம் வழிப்படுத்தும்போது அவரது அன்பினையும் சக்தியையும் அனுபவம் செய்ய முடியும். இச் சக்தி கொண்டு எமது பலவீனங்களை அழித்து  நற்குணங்களை பதியவைக்க முடியும். 

ஞானத்தினை பெறுதல் -> விகாரங்களிருந்து விடுபடுதல் -> புத்தியினை தூய்மையாக்குதல் -> பரமாத்மாவை நினைவில்கொள்ளுதல் என்ற இந்த அழகான படிமுறை ஐந்தாவது நாளை போற்றுவதற்கு வழிவகுக்கிறது. 

ஐந்தாவது நாள் (Bhaiyadooj) : ஆத்மாவைப்பற்றிய இந்த தனித்துவம் வாய்ந்த ஞானத்தின் மூலமாக, இதுவரை காலமும் கொண்டிருந்த இனம், மதம், நிறம், பால், வயது போன்ற பாரபட்சம் மிக்க குறுகிய எண்ணங்களிலிருந்து விடுபட முடிகிறது. இதனால் நாம் ஒவ்வொருவரையும் தனிப்பட்டவர்களாக, எமது ஆன்மீகக் குடும்பத்தில் இருக்கும், கடவுளின் குழந்தைகளாக பார்க்க முடிகிறது. இதுவே இறுதியான உண்மையாகும். 

இனிப்புகள் (அன்பான உறவுமுறைகளை பேணுதல்)
புதிய ஆடைகள் (பழையனவற்றை கைவிடுதல்)
புதிய கணக்கு புத்தகம் (கர்ம கணக்குகளை தீர்த்தல்)
வாணவேடிக்கை (தீய சக்திகளை எரித்தல்)
மற்றும் பிற சடங்குகள் பிறக்கவிருக்கும் புதிய ஆண்டை அல்லது யுகத்தினை வரவேற்பதாக அமைகிறது. அறியாமையின் இருளானது தொடர்ந்து இருக்க முடியாது. புதிய சந்தோஷ உலகத்தினை உருவாக்கும் அனைவரது மிக ஆழமான ஆசையும் நிஜமாகும்.

ஒரு தீபத்தினை (எமது ஆத்மீக விழிப்புணர்வு) ஒளியேற்றுவதன் மூலம், அதன் ஒளியினால் பிற தீபங்களையும் (பிறரையும்) இலகுவில் ஒளியேற்ற முடிகிறது. 












ராஜயோக தியானம்: பரமபிதா பரமாத்மா

நான் ஓர் அமைதியான ஆத்மா. பௌதீகமல்லாத, மிகச்சிறிய ஒளிப்புள்ளி. இந்த உணர்விலிருந்துகொண்டு பிறரையும் என்னால் இவ்வாறு பார்க்க முடிகிறது. இவ்வாறு நாம் பௌதீக அடையாளங்களைவிட்டு வெகு அப்பால் செல்லும்போது, உருவம், தொழில், பிறருடனான சரீர உறவுமுறைகள் போன்றவற்றை மறந்துவிட்டு அனைவரையும் சகோதரர்களாகவே காண்கிறோம். அனைத்து ஆத்மாக்களும் சகோதரர்கள், மிகச்சிறிய ஆற்றல். இவர்கள் உலக அரங்கில் நடைபெறும் இந்த உலக நாடகத்தில், வெவ்வேறு பௌதீக உடைகளில், வெவ்வேறு பாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர்.  

ஆயினும், பல கேள்விகள் இன்னும் தோன்றும். நாம் எல்லோருமே சகோதரர்கள் எனின், இந்த உலகமே ஒரு பெரிய குடும்பம் எனின், இந்த ஆத்மாக்கள் அனைவருக்குமே தாய் அல்லது தந்தை என்று யாராவது இருக்கிறார்களா? அதேபோல, நாம் எல்லோருமே, பல்வேறு உடைகளில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் என்றால், இத்தகைய பிரமாண்டமான நாடகத்திற்கு இயக்குனர் என்று யாராவது இருக்கிறார்களா? ஓர் அதிமேலான பரம்பொருள், சக்திகளின் ஆற்றல்களின் மெய்யறிவின் ஆதாரம், தந்தையாகவும் இயக்குனராகவும் தனது பாத்திரத்தினை நிறைவேற்றக்கூடிய ஒருவர் இருப்பது சாத்தியமா? 

முன்னர் கூறப்பட்டது போல், யோகம் என்றால் இணைப்பு. ராஜ என்றால் அரசன் அல்லது முதன்மையான குறிப்பாக அதிமேலான(supreme) என்று பொருள். எனவே ராஜயோகம் என்பது அதிமேலானவர், தந்தை, இயக்குனர், இறைவன் என நினைவு கூரப்படுபவருடனான இணைப்பு என்று அர்த்தம். 


எனினும் பரம்பொருளின் அடையாளத்தினை நாம் தேடிக்கொண்டு போகுமிடத்து, மிகவும் குழப்பமே உண்டாகுகிறது. ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் வெவ்வேறு பதில்களே கிடைக்கின்றன. ஏராளமான வேத சாஸ்திரங்களின் மூலம் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் எம்மீது திணிக்கப்படுகையில், நாம் ஒரு கட்டத்தில், இறைவன் என்பவர் உண்மையிலேயே இருக்கிறாரா? அல்லது மனித மனங்களின் கற்பனையா? என்று எண்ணும் நிலைக்குக் கூட வந்து விடுகிறோம். உண்மையாகவே அதிமேலானவர் ஒருவர் இருப்பாராயின், நிச்சயமாக எம்மால் அவரைப்பற்றிய முழு அறிமுகத்தினை, தகவலைகளை பெறுவதும் சாத்தியமே.

மனிதர்களின் ஆராய்ச்சிகள் ஒருபுறமிருக்க, பரமாத்மா மூலமாகவே அவரின் உருவம் மற்றும் அடையாளம் போன்றவற்றின் அறிவை பெறுவது முற்றிலும் வேறுபட்டதாகும். முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்களை இப்போது நாம் ராஜயோகத்தின் படி பரிசீலிக்கலாம். ஒருவேளை அவற்றை ஆராய்வதன் மூலம் பரம்பொருளினை அனுபவம் செய்ய முடியலாம். எது எப்படியிருந்தாலும் மெய்யறிவின் நோக்கம் அனுபவம் செய்தலாகும். உண்மையிலேயே நேரடித் தொடர்ப்பின்மூலம் பரமதந்தையுடனான உறவினை அனுபவம் செய்வது சாத்தியமா?




Monday, October 20, 2014

ராஜயோக தியானம்: Meditation - Tuning of the Intellect


சிறிது நேரம் அமைதியாகவிருந்து, எமது எண்ணங்களை புருவ மத்தியில், சூட்சுமமான மிகச் சிறிய ஒளிப் புள்ளியான ஆத்மா மீது குவியப்படுத்தும் போது, அந்த ஆற்றலானது அவ்விடத்தில் ஒளிர்ந்து பிரகாசிப்பதை உணரமுடியும். இதை திரும்ப திரும்ப பயிற்சி செய்யும்போது, சிறிது காலத்தின் பின்னர் இந்த பிரக்ஞையை சில வினாடிகளிலேயே அடைந்து, தொடர்ச்சியான அனுபவத்தினை பெறமுடியும்.

அறையினை முடியுமானவரை மென்மையாக ஒளியேற்றவும். சிறிதுநேரம் அமைதியாக, உங்களுக்கு வசதியான முறையில் அமரவும். சிரமமான ஆசன முறைகள் அவசியமில்லை. மனமானது சில குறிப்பிட்ட எண்ணங்களை பின்பற்றும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த எண்ணங்கள் மனதினூடாக அமைதியான முறையில், எளிதாகப் பாய்ந்துசெல்ல அனுமதிக்கப்படும்போது ஆத்ம உணர்வினை அனுபவம் செய்ய முடியும்.

தியானத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட எண்ணங்கள்

உங்கள் எண்ணங்களை, மனத்தை, சுயம் நோக்கி, மிகச்சிறிய ஒளிப்ப்புள்ளியான ஆத்மாவை நோக்கித் திருப்புங்கள்..

ஆத்மாவாகிய நான், மிகச்சிறிய ஒளிப்புள்ளியாவேன்.. மிக சூட்சுமமான ஆற்றல்.. நான் புருவ மத்தியில் அமர்ந்திருக்கிறேன்.. இதுவே நான்.. ஆத்மா.. இந்த பௌதீக சரீரம் எனது உடையாகும்.. ஆத்மாவாகிய நான் அதனை உபயோகப்படுத்துகிறேன்.. இது எனது இருப்பினை வெளிப்படுத்துவதற்கு உதவுகிறது.. இதனூடாக நான் எனது ஆளுமையை வெளிப்படுத்துகிறேன்..  
இப்பொழுது நான்.. எனது உண்மையான அடையாளத்தை உணர்ந்துவிட்டேன்.. நான், எனது சிறைக்கதவை உடைத்துவிட்டேன்.. இப்போது நான் சுதந்திரமானவன்.. ஒரு பறவையைப் போல என்னால் இப்போது மீண்டும் பறக்க முடிகிறது.. 
இப்போது நான்.. எனது உண்மையான இயல்பாகிய அமைதியுடன் இணைந்துவிட்டேன்.. நான் அமைதியை உணர்கிறேன்.. நானே அந்த அமைதியாவேன்.. இப்போது நான், எனது உண்மையான இயல்பாகிய ஒளியை உணர்ந்துவிட்டேன்..  நான் அந்த ஒளியாகிறேன்.. நானே அந்த ஒளியாவேன்.. இப்போது நான், எனது உண்மையான இயல்பாகிய அன்பினை உணர்ந்துவிட்டேன்.. நான் அந்த அன்பு ஆகிறேன்.. நானே அந்த அன்பாவேன்..  
இப்போது ஆத்மாவானது, சக்தியால் முழுதாக நிரப்பப்படுகிறது.. நான் மிகவும் இலகுத் தன்மையானதாகவும், எளிதாகவும் உணர்கிறேன்.. இப்பொழுது நான், இந்த உடலின் அடிமையல்ல.. அதன் எஜமான் ஆவேன்..  
இப்போது நான் இந்த உலகத்துக்கு, ஒளியினையும், அமைதியினையும், தூய்மையினையும் பரப்புகிறேன்..




பயனுள்ள முறை:  ஒளியினைப் பார்ப்பதனால், நாம் இலகுத்தன்மையினால் நிரப்பப்படுகிறோம். பிறரைப் பார்க்கும் போதும், அவர்களின் புருவ மத்தியில் வீற்றிருக்கும் ஆத்மாவை, ஒளிப்புள்ளியை காண்பதனால் நாள் முழுவதும் இலகுத்தன்மையை உணர முடிகிறது.

மீட்டல்: "பாடம் ஒன்று: நான் யார்?" இத்துடன் முடிவடைகிறது. கீழுள்ள வினாக்களுக்கு விடையளிப்பதன் மூலம் இந்தப் பாடத்தைப் பற்றிய மிக ஆழமான அனுபவமும், புரிந்துணர்வும் ஏற்படும். இதுவும் ஒருவித தியானமே. சிலர் பதிலளிப்பதற்கு முன்பு இரண்டு அல்லது மூன்றுமுறை திரும்பவும் முழு பாடத்தினையும் வாசித்துப்பார்ப்பர். பதிலளிக்கும்போது மகிழ்ச்சியினை அனுபவம் செய்தாலே முக்கியமானது. 

வினாக்கள்:

1. ஆத்மா என்றால் என்ன?
2. ஆத்மாவுக்கும் உடலுக்கும் எத்தகைய வேறுபாடுகள் காணப்படுகின்றன?
3. மனம், புத்தி, சம்ஸ்காரம் என்பவை யாவை?






Friday, October 17, 2014

ராஜயோக தியானம்: ஆத்ம உணர்வின் முதல் படிநிலை

எமது தற்போதைய நிலை பற்றி, சென்ற பதிவில்  பார்த்தோம். இது நிச்சயமாக விரும்பத் தகாத ஒன்றாக இருப்பினும் அதுவே பலரின் இன்றைய நிலையாகும். ஆனால் எமது நிலை அத்தகையதாக இருக்கவேண்டிய அவசியமே இல்லை. இந்நிலையை மாற்றுவதற்கு முதலாவதாக, தீர்மானிக்கும் சக்தியான புத்தியை விழிப்படையச் செய்யவேண்டும். இது மிகவும் சுலபமானது.

ஒரு கட்டுக்கடங்காத குதிரை: நான் ஓர் ஆத்மா என்ற விழிப்புணர்வின் மூலம், இப்போது இந்த உலகில் எமது உண்மையான நிலையை உணர முடிகிறது. இந்த விழிப்புணர்வு நிலையில், எமது எண்ணங்களை கட்டுப்படுத்துவதும், மனதை ஒழுங்கமைப்பதும் எமது கடமை என்பதை உணர்கிறோம். மனமானது மகத்தான ஆற்றல் மிக்க கட்டுக்கடங்காத குதிரைக்கு ஒப்பிடப்படுகிறது. அது ஒருபோதும் நிற்காமல் சுற்றி சுற்றி ஓடிக்கொண்டேயிருக்கிறது. இரவு பகலாக ஓடுகிறது. கனவுகளில் கூட நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதனால் அது களைத்துவிட்டதோ என்று கூட சிறிது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் தன்னை எப்படி அமைதிப் படுத்திக் கொள்வது என்று அதற்குத் தெரியாது. சற்று அமர்ந்திருப்பதன் மூலம் எமது உடலுக்கு சிறிது ஓய்வு கொடுக்க முடியும். ஆனால் மனமானது அமைதியடைய மறுக்கும். அதற்கு எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கத்தான் தெரியும். ஆனால் எத்திசையில் ஓடுவது என்று கூடத்தெரியாது. 

உணர்தல்: நான் இந்த பௌதீக உடலல்ல, அதனுள் இருக்கும் சக்திமிக்க ஆற்றல் என்பதை உணர்ந்த கணமே, அச்சக்தியை என்னால் உபயோகிக்க முடிகிறது. இந்த விழிப்புணர்வின் மூலம், கட்டுக்கடங்காத குதிரையாகிய எமது எண்ணங்ககளை வழிக்குக் கொண்டுவரும் கடிவாளம் எமது கைக்கு வருகிறது. எண்ண அலைகளின் விழிப்புணர்வின் மூலம் அவற்றின் ஓட்டத்தினை வழிப்படுத்த முடிகிறது. இதனால் இதுவரை எம்மை களைப்புறச் செய்த, சக்திகளின் வீண்விரயம் தவிர்க்கப்படுகிறது. 

தெரிவுசெய்தல்: நாம் இப்போது எமது ஆசைகளின் மீது தேர்வுசெய்யும் அதிகாரம் உள்ளவர் ஆகிவிட்டதனால், தற்காலிக இன்பங்களைத் தரும் எண்ணங்களையல்லாமல், நிரந்தர சந்தோசத்தை அளிக்ககூடிய எண்ணங்களை மட்டும் தெரிவுசெய்ய முடிகிறது. தூய்மையான எண்ணங்களை மட்டுமே செயல்களாக அனுமதிப்பதனால், இதுகாலவரை எமது கவலைகளுக்குக் காரணமான தூய்மையற்ற சம்ஸ்காரங்கள் பலவீனமாகி, தூய்மையான சம்ஸ்காரங்களுக்கு வழி விடுகின்றன. இதன் மூலம், சதா பதட்டமான, ஏக்கம் நிறைந்த எண்ணங்களுக்குப் பதிலாக அமைதியான, திட்டமிடப்பட்ட எண்ணங்களை மட்டுமே எப்போதும் கொண்டிருக்கும் நிலையை அடையமுடியும். 

விளைவு: ஆரம்பத்தில் மனத்தின் மீது நன்கு திட்டமிடப்பட்ட கட்டுப்பாடு அவசியமாக இருப்பினும், இதுவே முழுதான சுயமாற்றத்திற்கு வழிவகுக்கிறது. எனவே இது வெறுமனே வெளியிலிருந்து திணிக்கப்பட்ட சக்தியோ அல்லது ஒழுக்கக் கோட்பாடுகளோ அல்ல. அவற்றால் எமது சுபாவம் மற்றும் நடத்தைகளே மேன்மையானதாக்கப்படுகின்றன. பின்னர் ஒரு கட்டத்தில், தூய்மையானதும் மேன்மையானதுமான சந்தோசத்தினை தரக்கூடிய எண்ணங்களை மட்டுமே கொண்டிருக்ககூடிய நிலையை அடைகையில், எம்மால் பிறருக்கும் சந்தோசத்தினை கொடுக்க முடியும்.

எமது புத்தியின் விழிப்புணர்வால், ஒவ்வொரு எண்ணங்களும் மதிப்பீடு செய்யப்படுவதனால் தவறுகள் ஏற்பட முன்னரே அவை தவிர்க்கப் படுகின்றன. இதனால் எமது வாழ்வில், முன்னர் சாத்தியமில்லாததாகக் கருதப்பட்ட பல மாற்றங்கள் இலகுவில் சாத்தியமாகிறது. 

சம்ஸ்காரங்களை உருவாக்குதல்: பலகாலமாக சரீர உணர்விலேயே இருந்து விட்டதனால், 'நான் ஓர் ஆத்மா' என்ற எண்ணம் அடிக்கடி மறந்து விடுகிறது. முயற்சியால் மட்டுமே இந்த விழிப்புணர்வை தக்க வைத்துக்கொள்ள முடியும். எனவே எமக்கு நாமே கற்பித்துக்கொள்ளும் சம்ஸ்காரத்தினை முதலில் உருவாக்கிக்கொள்ள வேண்டும். எம்மைச் சுற்றியுள்ளவர்கள் எம்மை இந்த உடலாகவே பார்த்தாலும், நாம் இந்த உடல்தான் என்று சொன்னாலுமே, "நான் ஓர் அமைதியான, கட்புலனாகாத, அழிவற்ற ஆத்மா, இந்த உடலை வெறுமனே ஒரு கருவியாக உபயோகப்படுத்துகிறேன்." என்று எமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டும். இந்த மனப்பாங்கில் நிலைத்திருக்கும்வரை, நாம் முழு சுதந்திரத்தினை கொண்டிருப்போம். எமது செயல்களும் சரியானவையாகவும், சாதகமானவையாகவும் இருக்கும். 

பிறரைப் பார்க்கும்போதும், அவர்களை ஆத்மாக்களாக, சகோதரர்களாக பார்ப்பதனால், ஆளுமை மோதல்களின் விவரண குறுக்கீடுகள் எதுவுமற்ற தூய அன்பு மற்றும் நல்லிணக்கத்துடன் கூடிய உறவுமுறைகள் உருவாகின்றன. அவர்களை ஆண், பெண் என்று பௌதீகமாக பாராது, என்னைப் போலவே அவர்களும் ஆத்மாக்கள், பௌதீகமல்லாதவர்கள் என்று பார்க்கும் போதே இது சாத்தியமாகிறது. 

ஆத்ம உணர்வு நிலை என்பது: நான் ஆத்மா என்ற விழிப்புணர்விலிருந்து எனது கருவியான இந்த சரீரத்தினை விவேகத்துடன் உபயோகித்தாலும், அனைத்தையும் மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணினைக் கொண்டு பார்த்தலுமேயாகும்.







Thursday, October 16, 2014

ராஜயோக தியானம்: எமது இன்றைய நிலை


தூய்மையற்ற சம்ஸ்காரங்கள், திரும்பத் திரும்ப செய்யப்படுவதன் மூலம், தம்மை வலுவானதாக்க அனுமதிக்கப்படும் போது, உள்ளுணர்வானது படிப்படியாக பௌதீக புலன் உணர்வுகளின் வலிமையான செல்வாக்கிற்கு வழிகொடுக்கத் தொடங்குகிறது. சக்திமிக்க இப்புலன்களின் பலமான கவர்ச்சியினால், உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, எமது சொந்த புத்தியின் தீர்மானங்களையே ஒதுக்கித் தள்ளும் நிலைக்கு ஆளாகிறோம். இதன் விளைவாக, அதே சூழ்நிலை திரும்பவும் வரும்போது, ஏற்கனவே பலவீனமான மனச்சாட்சியினது செல்வாக்கு, முன்னரைவிட இப்போது இன்னும் குறைவாகவே இருக்கும். காலப்போக்கில் அது பேசுவதை முற்றாக நிறுத்திவிடுகிறது. மனச்சாட்சியானது அலட்சியம் செய்யப்படுகையில், அறியாமையின் வழிச்செல்வது தவிர்க்க முடியாததாகிறது.

இதனால், அநேக சமயங்களில் சரியானதை தவறானதிலிருந்து பிரித்தறிவதில் உறுதியற்ற அல்லது நிச்சயமற்ற நிலையை காண்கிறோம். சரி, தவற்றின் இருப்பை மறுதலிக்கக் கூட செய்கிறோம். சுயநலமான மற்றும் சுயநலமற்ற செயல்களை வேறுபடுத்திப் பார்க்கமுடியாதளவு புத்தியானது தெளிவற்று இருப்பதால், நெறிபிறழ்ந்த நிலை தழைக்கிறது.

இவ்வாறு, செயல்கள் படிப்படியாக இழிவான நிலையை அடைவதால், சந்தோசத்திற்கான தேடலும், பூர்த்தியும் அத்தகைய தாழ்ந்த நிலையிலேயே சாத்தியமாகிறது. "நான் ஓர் ஆத்மா" என்ற ஞானம் இல்லாதுவிடின், சரீர உணர்வானது சம்ஸ்காரங்களில் ஆழமாக பதியப்பட்டு, ஆத்மாவானது சந்தோசத்தினை பௌதீக மட்டத்திலேயே காண்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறது.

சுயத்தில் இருந்து மனநிறைவு காண முடியாமல், ஆத்மாவானது தனது முழு கவனத்தினையும் பௌதீக ஆதாரங்களிருந்து பெறப்படும் தற்காலிக இன்பங்களை நோக்கி திருப்புவதனால், அது விரைவில் திருப்தியின்மையையும், வெறுமையையும் அனுபவம் செய்கிறது. இத்தகைய பலவீனமான நிலையில் ஆத்மாவானது, மனதுக்கு ஆறுதலளிக்கும் எந்தவொரு ஆதாரத்தையும் இறுகப் பற்றிப் பிடித்துவிடுகிறது. நோக்கமானது தரம் தாழ்ந்து புலன் திருப்தியினை நோக்கி செல்கையில், இப் பொறிக்குள்  சிக்கிய ஆத்மா தனது திருப்தியின்மையை போக்குவதற்கு மேலும் மேலும் அதிக இன்பங்களை தேடி அலையத் தொடங்குகிறது. 

தற்காலத்தில் எமது மனமானது புலன்களிடம் முழுமையாக அடிமையாகிவிட்டதனால், எம்மால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. எவ்வளவுக்கெவ்வளவு எமது கவனத்தை சுயத்திலிருந்து விட்டு விலகுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு துன்பத்திலும் துயரத்திலும் சிக்கித் தவிக்கிறோம். இன்று உலகம் முழுவதிலும் இத்தகைய அகமுரண்பாடுகளை வெகு சாதாரணமாகக் காணமுடியும்.






Tuesday, October 14, 2014

ராஜயோக தியானம்: எண்ணங்களின் சுழற்சி




எமது மனதில் தோன்றும் எண்ணங்கள் செயல்களுக்கு வழிவகுக்கிறது. செய்து முடிக்கப்பட்ட செயல்கள் ஆத்மாவில் பதியப்பட்டு (சம்ஸ்காரங்கள்) மீண்டும் எண்ணங்களின் உருவாக்கத்துக்கு காரணமாகின்றன. இதுவே எண்ணங்களின் சுழற்சியாகும்.



மனம் மற்றும் புத்தி மீதான சம்ஸ்காரங்களின் தாக்கம்: உதாரணத்துக்கு இப்போது உங்களை, ஓர் கார் விபத்தின் வெறுமனே தொடர்பற்ற ஓர் பார்வையாளராகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். பலர் இக் காட்சியில் வருவார்கள். அனைவரும் பார்க்கும் காட்சி ஒன்றாயினும், அவரவர் சம்ஸ்காரத்திர்க்கேற்ப அவரவர் செயல்பாடுகளும் வேறுவேறாக இருக்கும்.

உதாரணத்துக்கு, இறந்தவரின் உடலை பரிசோதனை செய்பவர் வைத்தியராக இருக்கும். அருகே நிற்பவர்களிடம் விசாரணை செய்துகொண்டிருப்பவர் காவல்துறை அதிகாரியாக இருக்கும். ஒருவர் நிதானமாக நின்று சேதமடைந்த வாகனங்களை கவனித்துக்கொண்டிருகையில், இன்னொருவரோ மிகவும் அபரிதமான உணர்ச்சிகளால் மூழ்கடிக்கப்பட்டிருப்பார். நிதானமாக நின்று வாகனங்களை ஆராய்ந்தவர் மெக்கானிக்காக இருக்கும் அதேநேரம், உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருப்பவர் விபத்தில் காயப்பட்ட ஒருவரின் உறவினராக இருக்கலாம். ஒரே தூண்டுதல் காரணி தான், ஆனால் ஒவ்வொருவரினதும் செயல்பாடுகள் வேறுவேறாக இருக்கிறது. வேறுபட்ட சம்ஸ்காரங்கள் வேறுபட்ட செயல்பாடுகளுக்கு வழிவகுக்கிறது.

இதேபோலவே, எமது சொந்த மனோநிலையே எமது எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது என்பதை, எமது கடந்தகால அனுபவங்களில் இருந்து தெரிந்து கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, ஒருநாளில் பல விடயங்கள் தவறாக நடந்தாலுமே, எமது அதீத உளவலிமையானது அவற்றை அமைதியாக எதிர்கொள்ள உதவுகிறது. இன்னொருசமயம் அத்தகைய ஸ்திரத்தன்மை இல்லாத போது, மற்றையவரால் உதிர்க்கப்படும் சிறிய வார்த்தை கூட மிகவும் மனவருத்தத்தை உண்டாக்கி விடுகிறது. அவ்வாறு பேசியது அவரது குற்றமல்ல, மாறாக எமது சொந்த மனமே அத்தகைய பிரதிபலிப்பை உருவாக்கியது.

எமது மனதில் தோன்றும் ஒவ்வோர் எண்ணங்களின் உருவாக்கத்திலும், ஏதாவது ஒரு அல்லது சில சம்ஸ்காரங்களின் செல்வாக்கு காரணமாக இருக்கும். எமது எண்ணங்களுக்கு  நாம் மட்டுமே பொறுப்பு என்பதை இது தெளிவுபடுத்துகிறது. எனினும் நாம் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளாமல், புறச் சூழ்நிலைகள் மீது பழி போடவே முனைகிறோம்.

திரும்பத் திரும்ப பலதடவை செய்யப்படும் ஒரு செயலானது, மிகவும் ஆழமான சம்ஸ்காரமாகிறது.  மிகவும் ஆழமாக ஒரு குழி தோண்டப்படும்போது, அதன் அடையாளங்களை முற்றாக அழித்துவிடுவது மிகவும் சிரமமானது.   இதனாலேயே பழைய பழக்கங்களை விடுவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ராஜயோக தியானத்தின் மூலம் மனமானது கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படுகிறது. புத்தியானது விஸ்தீரணம் செய்யப்பட்டு மேன்மையானதாக்கப்படுகிறது. சம்ஸ்காரங்கள் தூய்மையாக்கப்படுகின்றன. இவை தூய்மையான எண்ணங்களுக்கு வித்திட்டு, புதிய, தூய்மையான எண்ணங்களின் சுழற்சி உருவாக்கப்படுகிறது.





Monday, October 13, 2014

ராஜயோக தியானம்: ஆத்மா எவ்வாறு இயங்குகிறது?


நான் யார் என்பதனை மறந்துவிடுவதனால் ஏற்படும் பாதிப்புகளை நிறையவே, கண்டும், கேட்டும் உணர்ந்தும் விட்டோம். இப்போது, இந்த மிக மிகச் சிறிய புள்ளிக்குள், பிரக்ஞை சிறுபொறிக்குள் அப்படி என்னதான் நடக்கிறது என்று சற்றே ஆராய்ந்து பார்ப்போம்.  ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் மூன்று வேறுபட்ட சக்திகள் காணப்படுகின்றன. அவற்றை அறிந்து கொள்ளும் போது, இதுவரை இந்த புரிந்துணர்வு இல்லாத காரணத்தினால் எத்தனை விபத்துக்கள் நடந்தன என்பது மட்டுமல்லாது, அவற்றின் மீதான கட்டுப்பாட்டை எவ்வாறு மீளவும் பெற்றுக்கொள்வது என்பது பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

மனம், புத்தி, மற்றும் சம்ஸ்காரம் என இந்த மூன்று சக்திகளும் வேறுவேறான பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டாலுமே, அவை அனைத்துமே வேறுவேறு படிநிலைகளில் இயங்கும் ஒரே ஆற்றலாகும். 

மனம்: மனம் மூலமாக ஒருவர் சிந்திக்கிறார், கற்பனை செய்கிறார், திட்டங்களை உருவாக்குகிறார். எமது எண்ணங்கள் மனதிலேயே உருவாக்கப்படுகின்றன. எண்ணங்களின் உருவாக்கமே உணர்ச்சிகள், ஆசைகள், உணர்வுகள் ஆகியவற்றிற்கு அடிப்படையாகிறது. மனம் மூலமாக எண்ணங்கள் எவ்விடத்தையும் அடைய முடியும். அத்துடன் பழைய அனுபவம் ஒன்றை திரும்பவும் மீட்டி அதன் மூலம் சந்தோசத்தையோ துன்பத்தையோ உருவாக்க முடியும்.  மனமானது ஆத்மாவின் ஓர் பாகம். இதனை இரத்த சுற்றோட்டத்திற்க்குப் பொறுப்பான பௌதீக அங்கமான இதயத்துடன் குழப்பிக்கொள்ளலாகாது.

புத்தி: புத்தியானது எண்ணங்களை மதிப்பீடு செய்வதற்கு பயன்படுகிறது. புரிந்து கொள்கிறது. எமது புரிந்துகொள்ளும் திறனே, அனேகமாக எல்லாவற்றையும் விட அதி முக்கியத்துவம் வாய்ந்த திறனாகும். எமது புத்தியை விரிவாக்குவது மற்றும் ஆழமாக்குவதன் மூலம் எதைப்பற்றியும் தெளிவான புரிந்துணர்வு சாத்தியமாகிறது. 

புத்தியானது, புரிந்துகொள்ளுவது மட்டுமல்லாது காரணப்படுத்துகிறது, நினைவில் வைத்திருகிறது, பகுத்தறிகிறது மற்றும் தீர்மானங்களையும் எடுக்கிறது.  ஆத்மாவின் மற்றைய சக்திகளைப் போலவே இதுவும் மிகவும் சூட்சுமமானது, பௌதீகமானதல்ல. எனவே பௌதீக அங்கமான மூளையுடன் இதனைக் குழப்பிக்கொள்ளலாகாது. மூளையானது, வெறுமனே நரம்பியல் தொகுதியின் பௌதீக கட்டுப்பாட்டு மையமாகும். ஆத்மாவே கட்டுப்படுத்துபவரார். இந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் ஆத்மா, பௌதீக உடலின் அனைத்து பாகங்களினதும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. புறச் சூழ்நிலை ஒன்றிற்கு மிகவும் களிப்படைவதா அல்லது வருத்தமடைவதா என்ற எனது தீர்மானத்தின் மூலம் ஆத்மாவால் உடலின் இதயத்துடிப்பு மற்றும் சுவாச வேகங்களை மாற்றியமைக்க முடிகிறது. எனவே புத்தியானது பௌதீக உடலின் ஓர் பகுதியல்ல, ஆத்மாவின் சூட்சும பகுதியான தீர்மானிக்கும், புரிந்துகொள்ளும் சக்தியாகும்.

சம்ஸ்காரம்:  செய்து முடிக்கப்பட்ட எந்த ஒரு செயலுமே ஆத்மாவில் ஓர் பதிவை விட்டுச்செல்கிறது. இந்த பதிவுகளையே நாம் சம்ஸ்காரம் என்று குறிப்பிடுகிறோம். பழக்க வழக்கங்கள், மனோநிலை, ஆளுமை பண்புக்கூறுகள், உணர்ச்சிவசப்படும்தன்மை  போன்றவையெல்லாம், ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட பல்வேறு செயல்கள் மூலம், ஆத்மாவில் பதிக்கப்பட்டிருக்கும் சம்ஸ்காரங்கள் ஆகும். எமது மனதில் உருவாகும் எண்ணங்கள் அனைத்தும் இந்த சமஸ்காரங்களின் விளைவுகளே. எனவேதான், ஆத்மாவின் அடிப்படையான அம்சமான எமது ஆளுமையை இந்த சம்ஸ்காரங்களே தீர்மானிக்கின்றன.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், ஒரு புதிய சம்ஸ்காரத்தினை உருவாக்குகிறது. இவ்வாறே ஓர் பழக்கம் தொடங்குகிறது. அதுவே, திரும்பவும் செய்யப்படும் ஓர் செயலாயின், அது ஏற்கனவே பதியப்பட்டுள்ள ஒரு சம்ஸ்காரத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இவற்றின் மூலம், சம்ஸ்காரம் என்பது நாம் இதுவரை மனதாலும் உடலாலும் செய்த செயல்களின்  முழுமையான பதிவு, அதாவது அனுபவங்களின் தொகுப்பு என்பதனைப் புரிந்து கொள்ளலாம். 


Friday, October 10, 2014

ராஜயோக தியானம்: வாகனமும் அதன் சாரதியும்


ஒரு வாகன சாரதியானவர், முழுதான விழிப்புணர்வுடன் இருந்தால் மாத்திரமே, அவரால் தனது வாகனத்தை சரியாக பயன்படுத்தி, சென்று சேரவேண்டிய இடத்தை அடையமுடியும். இதே ஒப்புவமையைக் கொண்டு எம்மை அவதானிக்கும் பொழுது, கட்டுப்பாட்டில் வைத்திருத்தலுக்கும், ஓடிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிடுதலுக்குமான மிகப்பாரிய வித்தியாசத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

வாகன சாரதியானவர், தான் செய்பவற்றின் விழிப்புணர்வு இருக்கும் வரை அவரால் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது திடீரென்று அவரது கவனம் தவறுமானால், மனதை ஒருகணமேனும் வேறெங்காவது அலைந்து திரிய விடுவாராயின், அவர் பாதையிலிருந்து விலகி சரிவில் விழுந்துவிடுவார். 

மக்கள், தாம் என்ன செய்கிறோம் என்பதனை மறந்துவிடும் போது விபத்துக்கள் நடக்கின்றன. இதேபோலவே, யாராவது தமது சுய கட்டுப்பாட்டை ஒரு கணமேனும் இழப்பார்களாயின், அங்கே (உதாரணத்துக்கு சடுதியான கோபம்) விபத்து நடைபெற்று தனக்கும் அதில் சம்பந்தப்படுபவர்களுக்கும் துன்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. விபத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட சேதமானது, அதனை  பார்ப்பவர்களையும் வருத்தமடையச் செய்துகிறது.

எனவே ஆத்மாவுக்கும்(சாரதி) உடலுக்கும்(வாகனம்) இடையே புரிந்துணர்வும் நல்லிணக்கமும் மிகவும் அவசியமாகும். ஒரு சாரதியானவர் எவ்வாறு விழிப்புணர்வுடனும், தனது வாகனத்துடன் நல்லிணக்கத்துடனும் இருக்கிறாரோ, அதேபோல் ஆத்மாவும் தனது உடலின் முழுக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நாமோ விழிப்புணர்வுடன் இல்லாது தூங்கிவிட்டோம். அதனாலேயே பல விபத்துகள் நடந்துவிட்டன. இதனால் எமக்கும், எம்மைச் சூழவுள்ளவர்களுக்கும், ஆழ்ந்த துக்கம் ஏற்படுவதற்கு காரணமாகிவிட்டோம். இப்போது இந்த விழிப்புணர்வு காரணமாக,  சாரதி விழித்தெழுந்து, வாகனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவந்து, அதனை சரியான முறையில் உபயோகிக்கத் தொடங்குகிறார்.

கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருத்தல்: நான் ஓர் ஆத்மா என்ற உணர்வின் மூலம்,  புலன்களின் உதவியைப் பெற்று, நல்லதை தீயதிலிருந்தும்,  தேவையானதை தேவையற்றதிலிருந்தும் தேர்ந்தெடுக்க முடிவது மட்டுமல்லாது, அனைத்தையும் சாதகமான செயல்களாக ஆக்குவதன் மூலம் பிறருக்கும் உதவி, எமது பிரக்ஞையையும் உயர்வாக வைத்திருக்க முடிகிறது. தவிர, எம்மைப் பற்றிய விழிப்புணர்வில் இருப்பதனால், எமது பௌதீக புலன்களின் அதிபதியாக ஆகிறோம்.

இதுகாலவரை எமது புலன்களின் மீது, எமக்கு மிகக் குறைந்தளவு கட்டுப்பாடே இருந்து வந்துள்ளது. இதனாலேயே எமது கண், காது போன்ற புலனங்கங்கள், பல வருடங்களாக எமது மனத்தை அடிமையாக்கி, பல்வேறுவழிகளில் இழுத்துச்சென்று, தமது விருப்பப்படி ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன. சரீரத்தினை முன்னிலைப்படுத்தி ஆத்மாவை புறந்தள்ளுவது, குதிரைக்கு முன்பாக வண்டியை கட்டுவது போலாகும். ஞானமே சக்தியாகும். எனவே இந்த ஞானத்தின் மூலம், எம்மால் இந்த சரீரத்தின் மீது உண்மையான இறையாண்மையை மீளவும் நிலைநாட்ட முடியும்.






Wednesday, October 8, 2014

ராஜயோக தியானம்: ஆத்மா


எம்மால், இந்த பௌதீக வரைமுறைகளைத்தாண்டி இருக்கும் விடயங்களை கூட அனுபவம் செய்ய முடிகிறது. ஆகையால், நான் என்பது, இந்த பௌதீக உருவமல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக இந்த உடலால் மீண்டும் குழந்தைப் பருவத்திற்கு செல்ல முடியாது, ஆனால் என்னால் முடியும். எமது மனமானது, ஒரு வினாடி நேரத்திலேயே எமது இளமைப் பருவ நாட்களுக்குச் சென்றுவிட முடியும். அதேபோல், எதிர்காலத்தை நோக்கியும் ஒரே வினாடியில் சென்று, சாத்தியமான முதுமைப் பருவ நாட்களை காண முடியும். இவ்வாறாக, எம்மால் இந்த மூன்று காலங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஒரே வினாடியில் பயணித்துவிட முடிகிறது. அதுமட்டுமல்லாமல் எவ்வளவு தூரத்தையும் கூட ஒரே வினாடியில் கடந்துவிட முடியும்.  நினைத்த மாத்திரத்திலேயே எமது எண்ணங்கள் எம்மை, அமெரிக்காவுக்கோ அல்லது ஆஸ்திரேலியாவுக்கோ ஒரே நொடியில் அழைத்துச் சென்றுவிடும். எங்கே ஈர்ப்பு இருக்கிறதோ, அங்கே எண்ணங்கள் எம்மை அழைத்துச் செல்கின்றன. இவை அனைத்தும் நிகழ்கையில் எமது உடலோ, ஓர் குறித்த இடத்திலேயே இருக்கிறது. எனவே இந்த உடலானது பௌதீகமானது. ஆனால் நாம் அப்படியல்ல. எம்மால் தூரம், நேரம் போன்ற பௌதீக வரைமுறைகளைத் தாண்டி செல்ல முடியும்.   

அடுத்து, இந்த சரீரம் வாழ்வதற்குத் அவசியமான உண்ணுதல், குளித்தல் போன்றவை போலவே, நாம் ஒவ்வொருவரும், (சென்ற பதிவில் கூறப்பட்டதைப் போல்) எமக்கேயுரிய தனிப்பட்ட ஆளுமையுடன் தான் வளர்கிறோம். எமது சில நுட்பமான பண்புகள், எமது பௌதீக பெற்றோரை விடவும் பெருமளவில் வேறுபட்டுக் காணப்படும். எனவே அவற்றை இதற்க்கு முன்னமே தான் எங்கோ பெற்றிருக்க வேண்டும். கண்ணாடியானது, எமது பௌதீக உருவம், முகச் சாயல், நிறம் போன்றவற்றை காட்டும். ஆனால் இந்த வெளிப்புற விஷயங்கள் எதனாலும், எமது சுய அடையாளத்தை வெளிப்படுத்திவிட முடியாது. ஏனெனில் நாம் இந்த பௌதீக உடலுக்குள் இருக்கும் கட்புலனாகாத, என்றும் அழிவில்லாத ஆத்மா.

உருவம்: நாம், இந்த பௌதீக உடலிலிருந்து விலகி, சுய அடையாளத்தை தேடத் தொடங்கும் போது, அசாதாரண பற்றற்ற தன்மையையும், நிச்சயமற்ற தன்மையையும் உணருவோம். இது ஏனெனில், நாம் இன்னுமே 'நான் யார்?' என்பதை முற்றாக அறிந்து கொள்ளாமலேயே, இதுகாலவரை எமக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு இடத்தை விட்டு சடுதியாக விலகிவிடுகிறோம். அதாவது இரண்டும்கெட்டான் நிலை. அதனால்,  நாம் இப்போது இன்னும் மேலே ஒரு படி போய் நான் யார் என்பதனை முழுதாக அறிந்து அனுபவம் செய்ய வேண்டும்.  இதற்கு,  முதலில் எம்மை உருவமற்ற, மிக மிக நுண்ணிய, சக்தி மிக்க, பிரகாசமான ஓர் ஒளிப்புள்ளியாகக் கருதுவோம். இப்போது பலதரப்பட்ட எண்ணங்கள் வரும். இது உண்மையாக இருக்க முடியுமா? என்ன ஒரு வினோதமான எண்ணம்? இதுவரை காலமும் என்னை ஓர் ஆணாகவோ அல்லது ஒரு பெண்ணாகவோ கருதி வந்துவிட்டு இப்போது மிக மிக நுண்ணிய ஒளிப்புள்ளியாக எண்ணுவதென்றால்..? 

இன்னும் சொல்லப் போனால்.. மேலும் பகுக்க முடியாத, மிகவும் நுண்ணிய இந்த சிறிய புள்ளியினுள் தான் அனைத்து சக்திகளும் நிறைந்திருக்கிறது.  இதை பற்றி நாம் எவ்வளவு ஆழமாக எண்ணுகிறோமோ, அந்தளவு நாம், எம்மைப் பற்றிய விழிப்புணர்வை அடைய முடியும்.  

அனுபவம் செய்தல்:  நேரத்தாலும் தூரத்தினாலும் தடைப்படுத்த முடியாத, அழிவற்ற, தனித்துவம் மிக்க சிறிய புள்ளி. எவ்வித கேத்திரகணித பரிமாணமுமற்ற ஓர் புள்ளி. கட்புலனாகாத தூய ஆற்றல். இவ்வாறு எம்மை நினைக்கையில் மிகவும் விசித்திரமாக இருக்கிறதல்லவா? இருந்தும் நாம் இதனை மேற்கொண்டு அனுபவம் செய்து பார்க்கப் போகிறோம். 

அமைவிடம்: எமது ஆத்மாவானது, நெற்றியின் நடுவே புருவ மத்தியில், பௌதீக உடலை கட்டுப்படுத்தும் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்யும் உள்ளுறுப்புகளுக்கு மிக அருகாமையில் இருக்கிறது. இங்கிருந்து அதனால் முழுகட்டுப்பாட்டை கையாள முடிகிறது. 

செயல்திறன்: மூளையானது, மின் அதிர்வுகள் வழி இயங்கும் ஓர் கருவியாகும். ஆத்மாவானது ஒரு தீர்மானத்தினை எடுத்த உடனேயே அத் தீர்மானம், மூளையை அடைகிறது. பின்னர் அது, உடல்தொகுதியினால் செயலாக மாற்றப்படுகிறது. இவ்வாறே, புற தூண்டுதல்களும், ஐம்புலன்கள் வழியாக மூளையை அடைந்து, பின்பு ஆத்மாவை அடைகிறது. இதனாலேயே வெளிக்காரணிகளால் நாம் தூண்டப்படுகையில், பலதரப்பட்ட மேலதிக எண்ணங்களை உருவாக்குவது மட்டுமல்லாது, பல சமயம் அவை செயல்களாகவும் மாற்றம் பெறுகின்றன. இதனைத் தீர்மானிப்பது புத்தியாகும். ஆத்மாவே கட்டுப்படுத்துவரும், மூளையே அதன் கட்டுப்பாட்டு அறையும் ஆகும். 

மூன்றாவது கண்: ஒருகாலத்தில், பௌதீகமாக இருந்ததாகக் கருதப்பட்ட இந்த மூன்றாவது கண், உண்மையில் மெய்யறிவு ஆகும். எனினும் இது பௌதீகமானதல்ல. ஏனெனில் மெய்யறிவு, பௌதீக உடலின் எந்த குறித்த பாகத்துடனும் தொடர்புபட்டதல்ல. ஆத்மாவே மெய்யறிவைத் தேடுகிறது, ஆத்மாவே அதனைத் தக்கவைத்துக் கொள்கிறது. ஆதலால், ஆத்மீக ரீதியில் "மூன்றாவது கண்ணைத் திறத்தல்" என்றால் 'பிரக்ஞையின் விழிப்புணர்வு' அல்லது 'ஆத்ம உணர்வு' என்று அர்த்தமாகும்.

மனிதர்கள் இரவில் பௌதீகக் கண்களினால் பார்க்க முடியாதபோது தடுமாறுகிறார்கள். கண்கள் மனத்தை ஏமாற்றுகிறது. முழுமையான  தகவல்களைப் பெறமுடியாததால் புத்தி தவறான முடிவை எடுக்கிறது. ஞானம் என்பது சூரிய வெளிச்சம் போன்றது. அது மூன்றாவது கண்ணைத் திறக்கையில், இருட்டு உடனடியாகவே அகன்று வெளிச்சம் உண்டாகிறது. இந்த மூன்றாவது கண் திறக்கப்பட்டதும் எமக்கு, நாம் எதைச் செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. நாம் இதுவரை காலமும், எமது இரு பௌதீகக் கண்களை மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கிறோம். அவற்றால் இந்த பௌதீக பரிமாணங்களைத் தாண்டி பார்க்க முடியாது. ஆனால் எமது மூன்றாவது கண்ணினால் பௌதீக பரிமாணங்களைத் தாண்டிப் பார்க்க முடிவதால், எமக்கு நாமே முழுமையான அதிபதியாக முடிகிறது.  



Tuesday, October 7, 2014

ராஜயோக தியானம்: பௌதீகமானதும் பௌதீகமற்றதும்

நாம் கண்ணாடி முன்னின்று பார்க்கையில் புலனாகும் பௌதீக உருவத்தினை விட, மேலதிகமாக எம்மிடம் ஏதாவது உள்ளதா? அதனைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, முதலில் நாம் 'உயிருள்ள மற்றும் உயிரற்ற' என்பதனை உயிரியல் தாண்டி ஆழமாக, ஆத்மீக ரீதியில் வரையறை செய்துகொள்ள வேண்டும். 

உயிருள்ளவை என்பது, தனது இருப்பினது விழிப்புணர்வைக் கொண்டதும், சுயமாக எண்ணங்களை உருவாக்கக் கூடியதுமாகும். அந்த எண்ணங்களானது உணர்வுகளை, உணர்ச்சிகளை மற்றும் திறன் பற்றிய விழிப்புணர்வு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டவையாகும். இவற்றால் நல்லதை கெட்டதிலிருந்தும், உண்மையை பொய்மையிலிருந்தும், யதார்த்தத்தை மாயையிலிருந்தும் பகுத்துணர முடியும். அதுமட்டுமல்லாமல் ஒரு தனித்துவமான ஆளுமையையும் கொண்டிருக்கும். இவை ஒவ்வொன்றும், அவற்றின் ஆளுமையை தீர்மானிக்கும் பழைய அனுபவங்களின் தொகுப்பை, தம்முடன் எடுத்துச் செல்வதனாலேயே இத்தகைய தனித்துவம் உருவாகின்றது. இதனாலேயே ஒருவரின் ஆளுமை மற்றையவரினது ஆளுமையிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கக் காண்கிறோம். 

இவற்றிற்கு நினைவாற்றலும் உண்டு. அதனாலேயே உறவுமுறைகள் உருவாகின்றன. பிறருடனான சந்திப்பு எமது நினைவில் இருக்கும்போது உறவுமுறை வளர்கிறது. இவை ஆசைகளைக் கொண்டவை. மட்டுப்படுத்தப்பட்ட (பௌதீக) பொருட்களின் மீதான ஆசைகள், மன சீரழிவுக்கு வழிவகுக்கிற அதே நேரம், உயர்ந்த ஆன்மீக, பரந்துபட்ட பொதுநல ஆசைகள் ஆத்மாவின் அதி சிறந்த அதன் மூல நிலைக்கு இட்டுச் செல்கிறது.

இவ்வாறாக, உயிருள்ளவையின் குணங்களை உயிரற்றவையினுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இவற்றிற்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசத்தினை உணரலாம். இதேபோன்று எமது சரீரத்தை வேறான ஒரு உபகரணமாகக் கருதினால், எமக்குள் தீர்மானிப்பது அல்லது பகுத்துணருவது எது? எமது பௌதீக அங்கங்களான கண், காது, கை, கால் ஏன் தலையிடம் கூட இத்தகைய திறன் இருக்க முடியாது. எனவே இந்த பௌதீக அங்கங்களைத் தாண்டி எதுவோ ஒன்று தான் இவற்றைச் செய்கிறது என்பது புலனாகிறது. 

பௌதீக உலகில், பல உபகரணங்களை உபயோகித்து நாம் காரியங்களை ஆற்றும் போதும், நாம் அவற்றிலிருந்து முற்றாக வேறுபட்டவர்களாவோம். உதாரணத்திற்கு, ஒரு கத்தியை எடுத்து எமது கரங்களால் காய்கறிகளை வெட்டுகிறோம், என்று வைத்துக்கொண்டால், இந்த முழு செயல்பாட்டிலும் கத்தி எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்வதில்லை. நாம் தவறுதலாகக் கையை வெட்டிக்கொண்டால், அச்சமயம் கத்தியோ அல்லது கைவிரலோ, உணர்வுரீதியாக எந்த சலனத்தையும் அடைவதில்லை. ஏனெனில் அவை வெறும் கருவிகள் மட்டுமே.

கத்தியை ஒரு உபகரணமாகப் பார்ப்பது எமக்கு இலகுவானதாகும். ஆனால் எமது கரங்களுடன் நாம் மிகவும் இணைக்கப்பட்டு இருப்பதனால், அதனை எம்மிலிருந்து வேறாக, ஒரு கருவியாகக் கருதுவது எமக்கு மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. எமக்கு இந்த உடலில் இரண்டு கரங்களைப் பெற்றிருக்கிறோம், தவிர இந்த உடல் உள்ளவரை எமக்கு அவ்விரண்டு கைகளே இருக்கப் போகிறது. இதனால் அவற்றுடன் மட்டுமலாது, இந்த முழு உடலுடனுமே மிக நெருங்கிய, செறிவான, ஆழமான, தனிப்பட்ட தொடர்பை / பற்றினை ஏற்படுத்தியதனால், எமது சுய அடையாளத்தை முழுவதுமாக மறந்து விட்டோம்.

இந்த உடலிற்குள் நாம் பிரவேசமான கணத்திலிருந்தே, இந்த பௌதீக உடலுகேற்ப, அனைத்து விசயங்களும், எம்மீது முத்திரை குத்தப்பட்டு விட்டன. நாம் பிறந்ததிலிருந்தே படிப்படியாக, 'நீ ஒரு பெண்', 'நீ ஒரு ஆண்' போன்ற உடல் ரீதியான விடயங்கள் உட்புகுத்தப் படுவதால், நாமும் வளர்கையில், முற்றிலும் இத்தகைய சிந்தனைகளில் உறுதியாகிவிடுகிறோம். அதனாலேயே பிற்பாடு எம்மிடம் யாரவது, எமது ஆண் அல்லது பெண் என்ற அடையாளத்தின் மீது கேள்வி எழுப்பும்போது அதனை மிகபெரிய ஒரு அவமானமாகக் கருதுகிறோம். ஆனால் உண்மையில் நாம் யார்? எம்மை இளையவர் என்றோ முதியவர் என்றோ அல்லது ஆண் என்றோ பெண் என்றோ அல்லது வெள்ளை என்றோ கருப்பு என்றோ அடையாளபடுத்துவது சரியானதா? இவற்றின் மூலம் எனது உண்மையான அடையாளம் வெளிப்படுத்தப் படுகிறதா? 

இந்த உடலுடன் சம்பந்தப்படுத்தி எம்மை அடையாளப்படுத்துவது, மிகவும் தவறான ஒரு வழிமுறையாகும். இதனை பிறர் நம் மீது திணிப்பது மட்டுமல்லாது, நாமே எமக்கு இப்பாரிய தவறை செய்கிறோம். எம்மை இந்த உடலுடன் சம்பந்தப்படுத்திக் கொள்வதனால், எமது பிரக்ஞையில் இவ்வுடல் சார்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அடையாளங்களான நிறம், மதம், மொழி, இனம், கலாச்சாரம் போன்றவையே எமது சுயத்தின் அடையாளங்களாகப் பதியப்பட்டுவிடுவதால், பிரக்ஞையானது பிற சாத்தியக் கூறுகளிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு விடுகின்றது.  


<- 1.1  அறிமுகம்       .       1.3  ஆத்மா ->






Monday, October 6, 2014

ராஜயோக தியானம் : அறிமுகம்


ஓம் சாந்தி. இந்த இரண்டு வார்த்தைகள், ராஜயோக கல்வியின் சாராம்சத்தை பிரதிபலிக்கின்றன. ஓம் என்றால் "நான் ஓர் ஆத்மா" என்றும் சாந்தி என்றால் "அமைதி" என்றும் அர்த்தமாகும். எனவே "நான் ஓர் அமைதியான ஆத்மா" என்பதை உணர்வதே அடிப்படையாகும். 

மேலோட்டமாகப் பார்த்தால் இது, வெகு இலகுவான ஒன்றாகத் தெரியலாம். ஆனால், தினசரி வாழ்வில் எம்மில் எத்தினை பேரால் இந்த நினைவில் நிலைத்திருக்க முடிகிறது? சற்று முன் கடந்துசென்ற இருபத்துநான்கு மணிநேரத்தில் மட்டும் நாம், எத்தனை முறை அமைதியை இழந்து தவித்திருப்போம்? 

பொதுவாக, அமைதிக்கான தேடலில், நாம் பெரும்பாலும் அமைதியை இழந்து தவிப்பதே பல சமயம் நடந்து வருகின்றது. ஆனால் இந்த ராஜயோக கல்வி மூலம் ஆத்மா அமைதிநிலையை வெகு சுலபமாக அடைய முடிகிறது. "ராஜயோக தியானம்" என்ற வார்த்தை பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருப்பினும், இக்கல்வி வெகு அண்மைக் காலத்திலேயே பெறப்பட்டதாகும். இங்கு எல்லாவற்றுக்குமே அடிப்படையான "நான் யார்?" என்ற கேள்விக்கு மிக எளிதான விளக்கம் கிடைக்கப் பெறுகின்றது.

"ராஜயோகம்" என்பதன் பொருள் பல வழிகளில் விளக்கப்படலாம். "யோகம்" என்றால் 'இணைப்பு' என்று அர்த்தம். "ராஜ" என்பதற்கு அதியுயர், அரச அல்லது முதன்மை என்று பல அர்த்தங்கள் உள்ளன. இதை கற்பதன் மூலம் இறைமையைப் பெற்றுக்கொள்வதால் இது தியானங்களின் அரசன் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் சக்தியானது, பிறர் மீதல்லாமல் தனது மனத்தைக் கட்டுப்படுத்துவதற்க்கே பிரயோகிக்கப்படுகிறது. ஏனெனில் எமது மனமே துன்பத்தையும் துயரத்தையும் உருவாக்குகின்றது. இதன் மூலம், எமது மனதின் அதிபதியாகுவது மட்டுமல்லாது, தனிமனித ஆளுமையின் அதிபதியாகவும், எமது பௌதீக உடையான இந்த சரீரத்தின் அதிபதியாகவும் ஆக முடிகிறது.




ராஜயோகத்தினது முதலாவது பாடமான 'நான் ஓர் ஆத்மா', 'ஆத்ம உணர்வு' என்பவையே, இறுதியான நிலையான அனைத்து எதிர்மறைகளிலிருந்தும் விடுபட்ட, சம்பூர்ண நிலையினை அடைவதற்கு அத்திவாரமாகிறது.