Showing posts with label A choice of yogas?. Show all posts
Showing posts with label A choice of yogas?. Show all posts

Tuesday, November 4, 2014

ராஜயோக தியானம் : யோகமுறையை தெரிவுசெய்தல்

பல வகையான யோக முறைகள் இருப்பதனால், அவரவர் சுபாவத்திற்கு ஏற்ற யோகமுறையை தேர்ந்தெடுத்து பின்பற்றுவது நல்லது என்று கூறப்படுகிறது. இந்த கூற்றானது எவ்வளவு தூரம் சரியானது என்று பார்ப்போம்.

அன்பு மற்றும் பக்தி மூலமான யோகம் : ராஜயோகம் என்றால் ஆத்மாவின் பூரணவிருத்தி ஆகும். நாம் பக்தி மார்க்கத்தினை தேர்வுசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகையில் இறுதி விளைவு என்னவாக இருக்கும்? பக்தி மூலம் பரமாத்மா மீதான அன்பு வெளிப்படுத்தப்படுகிறது, அதேபோல் பரமாத்மாவினது அன்பும் உணரப்படுகிறது. பணிவு வருகிறது. ஆனால் ஆத்மாவிற்கு அன்பு மட்டுமே போதுமானதல்ல, மேலும் அதிகளவிலானவை தேவைப்படுகின்றன.

எமது ஆத்மாவில், அன்பினுடைய, உணர்ச்சிகள் என்ற அம்சம் மட்டுமே விருத்தியாக்கிக்கொண்டு போகுமேயானால், எமது நடத்தைகள் ஆபத்தான பாணியில் விருத்தியாக்கிக்கொண்டு செல்லும். எனவே பரமாத்மா மீது அன்பு செலுத்துவது மட்டுமல்லாது, அவரது அறிவுறுத்தல்களை பின்பற்றுவதற்கும், வாழ்க்கைக்கு அவசியமான வழிகாட்டல்களுக்கு கீழ்படிந்து நடப்பதற்கும் அவரைப்பற்றி அறிந்திருப்பதும் அவசியமாகிறது. எனவே நாம் தனியே பக்தியோகியாக இருப்போமேயானால் அன்பு விருத்தியாகும். ஆனால் எவ்வித புரிந்துணர்வோ மெய்ஞானமோ காணப்படாது. இதனால் ஆத்மாவானது வலிமையற்றிருக்கும். 

கற்றல் அறிவு மூலமான யோகம் : ஞானயோகம் என்றழைக்கப்படும் கற்றல் அறிவு மூலமான யோகமும் எமக்குத் தேவையானதே. இந்த அறிவின் மூலமே புறத்தூண்டுதல்களிலிருந்து எம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.  

மெய்ஞானத்தின் ஆழமான உணர்தலின் மூலமான புத்தி யோகம் : இறைவன் மீது அன்பு மட்டுமே உள்ளபோது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட கணத்தில் இருக்கும் எமது பக்தி உணர்வினைவிட அதிகமான வலிமையுள்ள ஏதாவது சலனத்தினால் எமது யோகமானது குழப்பப்படுவது சாத்தியமே. ஆனால் ஞானத்தினது ஆழமான உணர்தல் மூலமான யோகத்தின் மூலம் ஆத்மாவானது தடைகள், சிரமங்கள் மற்றும் சலனங்களை இலகுவில் அடையாளம் கண்டு அவற்றில் சிக்காமல் உறுதியான யோகத்தில் நிலைத்திருக்க முடிகிறது. ஞான யோகமானது புத்தி யோகத்துடன் தொடர்புடையதாகும்.

யோகங்களின் சமநிலை: ஞானயோகம் மற்றும் புத்தியோகம் என்பன தனித்த யோகங்களாகும். இவற்றினை மட்டுமே பின்பற்றும் ஒருவரிடம் அகந்தை மற்றும் அராஜகம் என்பன விருத்தியாகி பூரணத்துவமான ஆளுமை விருத்தி ஏற்படாமல் போகலாம். முழுமையான ஆளுமை விருத்தியில் அன்பு மற்றும் நெறிமுறைகள் சரியான அளவில் கலந்திருக்கும். அதாவது நெறிமுறைகளினால் வழிப்படுத்தப்பட்ட அன்பாகவும், இனிமை மற்றும் அன்பு கலந்த நெறிமுறைகளாகவும் இருக்கும். எனவே முழுமையான சமநிலைப்படுத்தப்பட்ட ஆளுமை விருத்திக்கு இவையிரண்டும் அத்தியாவசியமாகிறது.

பக்தி மூலமாக எமது சுபாவத்தில் இனிமை விருத்தியாகிறது. அதேபோல் ஞானத்தின் மூலமாக ஆத்மாவில் வலிமை விருத்தியாகின்றது. எனவே எனது யோகத்தினை பகுதிகளாகப் பிரித்துவிட்டு அதில் ஒன்றைத்தான் தெரிவு செய்யவேண்டும் என்று சொல்லமுடியாது. மாறாக, இவையிரண்டும் சேர்ந்ததாகவுள்ள ஒரு யோகத்தினை நாம் தெரிவுசெய்ய வேண்டும். ராஜயோகமானது இவையனைத்து யோகங்களையும் ஒரே கட்டமைப்புக்குள் உள்ளடக்கியிருக்கிறது.

பக்தி, ஞானம், புத்தி யோகங்களைத் தவிர மேலும் மூன்று பிரதான யோகமுறைகளையும் ராஜயோகமானது உள்ளடக்கியிருக்கிறது. அவற்றினை அடுத்த பதிவில் பார்ப்போம்.