Showing posts with label ராஜயோகம். Show all posts
Showing posts with label ராஜயோகம். Show all posts

Friday, October 10, 2014

ராஜயோக தியானம்: வாகனமும் அதன் சாரதியும்


ஒரு வாகன சாரதியானவர், முழுதான விழிப்புணர்வுடன் இருந்தால் மாத்திரமே, அவரால் தனது வாகனத்தை சரியாக பயன்படுத்தி, சென்று சேரவேண்டிய இடத்தை அடையமுடியும். இதே ஒப்புவமையைக் கொண்டு எம்மை அவதானிக்கும் பொழுது, கட்டுப்பாட்டில் வைத்திருத்தலுக்கும், ஓடிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிடுதலுக்குமான மிகப்பாரிய வித்தியாசத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

வாகன சாரதியானவர், தான் செய்பவற்றின் விழிப்புணர்வு இருக்கும் வரை அவரால் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது திடீரென்று அவரது கவனம் தவறுமானால், மனதை ஒருகணமேனும் வேறெங்காவது அலைந்து திரிய விடுவாராயின், அவர் பாதையிலிருந்து விலகி சரிவில் விழுந்துவிடுவார். 

மக்கள், தாம் என்ன செய்கிறோம் என்பதனை மறந்துவிடும் போது விபத்துக்கள் நடக்கின்றன. இதேபோலவே, யாராவது தமது சுய கட்டுப்பாட்டை ஒரு கணமேனும் இழப்பார்களாயின், அங்கே (உதாரணத்துக்கு சடுதியான கோபம்) விபத்து நடைபெற்று தனக்கும் அதில் சம்பந்தப்படுபவர்களுக்கும் துன்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. விபத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட சேதமானது, அதனை  பார்ப்பவர்களையும் வருத்தமடையச் செய்துகிறது.

எனவே ஆத்மாவுக்கும்(சாரதி) உடலுக்கும்(வாகனம்) இடையே புரிந்துணர்வும் நல்லிணக்கமும் மிகவும் அவசியமாகும். ஒரு சாரதியானவர் எவ்வாறு விழிப்புணர்வுடனும், தனது வாகனத்துடன் நல்லிணக்கத்துடனும் இருக்கிறாரோ, அதேபோல் ஆத்மாவும் தனது உடலின் முழுக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நாமோ விழிப்புணர்வுடன் இல்லாது தூங்கிவிட்டோம். அதனாலேயே பல விபத்துகள் நடந்துவிட்டன. இதனால் எமக்கும், எம்மைச் சூழவுள்ளவர்களுக்கும், ஆழ்ந்த துக்கம் ஏற்படுவதற்கு காரணமாகிவிட்டோம். இப்போது இந்த விழிப்புணர்வு காரணமாக,  சாரதி விழித்தெழுந்து, வாகனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவந்து, அதனை சரியான முறையில் உபயோகிக்கத் தொடங்குகிறார்.

கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருத்தல்: நான் ஓர் ஆத்மா என்ற உணர்வின் மூலம்,  புலன்களின் உதவியைப் பெற்று, நல்லதை தீயதிலிருந்தும்,  தேவையானதை தேவையற்றதிலிருந்தும் தேர்ந்தெடுக்க முடிவது மட்டுமல்லாது, அனைத்தையும் சாதகமான செயல்களாக ஆக்குவதன் மூலம் பிறருக்கும் உதவி, எமது பிரக்ஞையையும் உயர்வாக வைத்திருக்க முடிகிறது. தவிர, எம்மைப் பற்றிய விழிப்புணர்வில் இருப்பதனால், எமது பௌதீக புலன்களின் அதிபதியாக ஆகிறோம்.

இதுகாலவரை எமது புலன்களின் மீது, எமக்கு மிகக் குறைந்தளவு கட்டுப்பாடே இருந்து வந்துள்ளது. இதனாலேயே எமது கண், காது போன்ற புலனங்கங்கள், பல வருடங்களாக எமது மனத்தை அடிமையாக்கி, பல்வேறுவழிகளில் இழுத்துச்சென்று, தமது விருப்பப்படி ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன. சரீரத்தினை முன்னிலைப்படுத்தி ஆத்மாவை புறந்தள்ளுவது, குதிரைக்கு முன்பாக வண்டியை கட்டுவது போலாகும். ஞானமே சக்தியாகும். எனவே இந்த ஞானத்தின் மூலம், எம்மால் இந்த சரீரத்தின் மீது உண்மையான இறையாண்மையை மீளவும் நிலைநாட்ட முடியும்.






Wednesday, October 8, 2014

ராஜயோக தியானம்: ஆத்மா


எம்மால், இந்த பௌதீக வரைமுறைகளைத்தாண்டி இருக்கும் விடயங்களை கூட அனுபவம் செய்ய முடிகிறது. ஆகையால், நான் என்பது, இந்த பௌதீக உருவமல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக இந்த உடலால் மீண்டும் குழந்தைப் பருவத்திற்கு செல்ல முடியாது, ஆனால் என்னால் முடியும். எமது மனமானது, ஒரு வினாடி நேரத்திலேயே எமது இளமைப் பருவ நாட்களுக்குச் சென்றுவிட முடியும். அதேபோல், எதிர்காலத்தை நோக்கியும் ஒரே வினாடியில் சென்று, சாத்தியமான முதுமைப் பருவ நாட்களை காண முடியும். இவ்வாறாக, எம்மால் இந்த மூன்று காலங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஒரே வினாடியில் பயணித்துவிட முடிகிறது. அதுமட்டுமல்லாமல் எவ்வளவு தூரத்தையும் கூட ஒரே வினாடியில் கடந்துவிட முடியும்.  நினைத்த மாத்திரத்திலேயே எமது எண்ணங்கள் எம்மை, அமெரிக்காவுக்கோ அல்லது ஆஸ்திரேலியாவுக்கோ ஒரே நொடியில் அழைத்துச் சென்றுவிடும். எங்கே ஈர்ப்பு இருக்கிறதோ, அங்கே எண்ணங்கள் எம்மை அழைத்துச் செல்கின்றன. இவை அனைத்தும் நிகழ்கையில் எமது உடலோ, ஓர் குறித்த இடத்திலேயே இருக்கிறது. எனவே இந்த உடலானது பௌதீகமானது. ஆனால் நாம் அப்படியல்ல. எம்மால் தூரம், நேரம் போன்ற பௌதீக வரைமுறைகளைத் தாண்டி செல்ல முடியும்.   

அடுத்து, இந்த சரீரம் வாழ்வதற்குத் அவசியமான உண்ணுதல், குளித்தல் போன்றவை போலவே, நாம் ஒவ்வொருவரும், (சென்ற பதிவில் கூறப்பட்டதைப் போல்) எமக்கேயுரிய தனிப்பட்ட ஆளுமையுடன் தான் வளர்கிறோம். எமது சில நுட்பமான பண்புகள், எமது பௌதீக பெற்றோரை விடவும் பெருமளவில் வேறுபட்டுக் காணப்படும். எனவே அவற்றை இதற்க்கு முன்னமே தான் எங்கோ பெற்றிருக்க வேண்டும். கண்ணாடியானது, எமது பௌதீக உருவம், முகச் சாயல், நிறம் போன்றவற்றை காட்டும். ஆனால் இந்த வெளிப்புற விஷயங்கள் எதனாலும், எமது சுய அடையாளத்தை வெளிப்படுத்திவிட முடியாது. ஏனெனில் நாம் இந்த பௌதீக உடலுக்குள் இருக்கும் கட்புலனாகாத, என்றும் அழிவில்லாத ஆத்மா.

உருவம்: நாம், இந்த பௌதீக உடலிலிருந்து விலகி, சுய அடையாளத்தை தேடத் தொடங்கும் போது, அசாதாரண பற்றற்ற தன்மையையும், நிச்சயமற்ற தன்மையையும் உணருவோம். இது ஏனெனில், நாம் இன்னுமே 'நான் யார்?' என்பதை முற்றாக அறிந்து கொள்ளாமலேயே, இதுகாலவரை எமக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு இடத்தை விட்டு சடுதியாக விலகிவிடுகிறோம். அதாவது இரண்டும்கெட்டான் நிலை. அதனால்,  நாம் இப்போது இன்னும் மேலே ஒரு படி போய் நான் யார் என்பதனை முழுதாக அறிந்து அனுபவம் செய்ய வேண்டும்.  இதற்கு,  முதலில் எம்மை உருவமற்ற, மிக மிக நுண்ணிய, சக்தி மிக்க, பிரகாசமான ஓர் ஒளிப்புள்ளியாகக் கருதுவோம். இப்போது பலதரப்பட்ட எண்ணங்கள் வரும். இது உண்மையாக இருக்க முடியுமா? என்ன ஒரு வினோதமான எண்ணம்? இதுவரை காலமும் என்னை ஓர் ஆணாகவோ அல்லது ஒரு பெண்ணாகவோ கருதி வந்துவிட்டு இப்போது மிக மிக நுண்ணிய ஒளிப்புள்ளியாக எண்ணுவதென்றால்..? 

இன்னும் சொல்லப் போனால்.. மேலும் பகுக்க முடியாத, மிகவும் நுண்ணிய இந்த சிறிய புள்ளியினுள் தான் அனைத்து சக்திகளும் நிறைந்திருக்கிறது.  இதை பற்றி நாம் எவ்வளவு ஆழமாக எண்ணுகிறோமோ, அந்தளவு நாம், எம்மைப் பற்றிய விழிப்புணர்வை அடைய முடியும்.  

அனுபவம் செய்தல்:  நேரத்தாலும் தூரத்தினாலும் தடைப்படுத்த முடியாத, அழிவற்ற, தனித்துவம் மிக்க சிறிய புள்ளி. எவ்வித கேத்திரகணித பரிமாணமுமற்ற ஓர் புள்ளி. கட்புலனாகாத தூய ஆற்றல். இவ்வாறு எம்மை நினைக்கையில் மிகவும் விசித்திரமாக இருக்கிறதல்லவா? இருந்தும் நாம் இதனை மேற்கொண்டு அனுபவம் செய்து பார்க்கப் போகிறோம். 

அமைவிடம்: எமது ஆத்மாவானது, நெற்றியின் நடுவே புருவ மத்தியில், பௌதீக உடலை கட்டுப்படுத்தும் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்யும் உள்ளுறுப்புகளுக்கு மிக அருகாமையில் இருக்கிறது. இங்கிருந்து அதனால் முழுகட்டுப்பாட்டை கையாள முடிகிறது. 

செயல்திறன்: மூளையானது, மின் அதிர்வுகள் வழி இயங்கும் ஓர் கருவியாகும். ஆத்மாவானது ஒரு தீர்மானத்தினை எடுத்த உடனேயே அத் தீர்மானம், மூளையை அடைகிறது. பின்னர் அது, உடல்தொகுதியினால் செயலாக மாற்றப்படுகிறது. இவ்வாறே, புற தூண்டுதல்களும், ஐம்புலன்கள் வழியாக மூளையை அடைந்து, பின்பு ஆத்மாவை அடைகிறது. இதனாலேயே வெளிக்காரணிகளால் நாம் தூண்டப்படுகையில், பலதரப்பட்ட மேலதிக எண்ணங்களை உருவாக்குவது மட்டுமல்லாது, பல சமயம் அவை செயல்களாகவும் மாற்றம் பெறுகின்றன. இதனைத் தீர்மானிப்பது புத்தியாகும். ஆத்மாவே கட்டுப்படுத்துவரும், மூளையே அதன் கட்டுப்பாட்டு அறையும் ஆகும். 

மூன்றாவது கண்: ஒருகாலத்தில், பௌதீகமாக இருந்ததாகக் கருதப்பட்ட இந்த மூன்றாவது கண், உண்மையில் மெய்யறிவு ஆகும். எனினும் இது பௌதீகமானதல்ல. ஏனெனில் மெய்யறிவு, பௌதீக உடலின் எந்த குறித்த பாகத்துடனும் தொடர்புபட்டதல்ல. ஆத்மாவே மெய்யறிவைத் தேடுகிறது, ஆத்மாவே அதனைத் தக்கவைத்துக் கொள்கிறது. ஆதலால், ஆத்மீக ரீதியில் "மூன்றாவது கண்ணைத் திறத்தல்" என்றால் 'பிரக்ஞையின் விழிப்புணர்வு' அல்லது 'ஆத்ம உணர்வு' என்று அர்த்தமாகும்.

மனிதர்கள் இரவில் பௌதீகக் கண்களினால் பார்க்க முடியாதபோது தடுமாறுகிறார்கள். கண்கள் மனத்தை ஏமாற்றுகிறது. முழுமையான  தகவல்களைப் பெறமுடியாததால் புத்தி தவறான முடிவை எடுக்கிறது. ஞானம் என்பது சூரிய வெளிச்சம் போன்றது. அது மூன்றாவது கண்ணைத் திறக்கையில், இருட்டு உடனடியாகவே அகன்று வெளிச்சம் உண்டாகிறது. இந்த மூன்றாவது கண் திறக்கப்பட்டதும் எமக்கு, நாம் எதைச் செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. நாம் இதுவரை காலமும், எமது இரு பௌதீகக் கண்களை மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கிறோம். அவற்றால் இந்த பௌதீக பரிமாணங்களைத் தாண்டி பார்க்க முடியாது. ஆனால் எமது மூன்றாவது கண்ணினால் பௌதீக பரிமாணங்களைத் தாண்டிப் பார்க்க முடிவதால், எமக்கு நாமே முழுமையான அதிபதியாக முடிகிறது.  



Tuesday, October 7, 2014

ராஜயோக தியானம்: பௌதீகமானதும் பௌதீகமற்றதும்

நாம் கண்ணாடி முன்னின்று பார்க்கையில் புலனாகும் பௌதீக உருவத்தினை விட, மேலதிகமாக எம்மிடம் ஏதாவது உள்ளதா? அதனைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, முதலில் நாம் 'உயிருள்ள மற்றும் உயிரற்ற' என்பதனை உயிரியல் தாண்டி ஆழமாக, ஆத்மீக ரீதியில் வரையறை செய்துகொள்ள வேண்டும். 

உயிருள்ளவை என்பது, தனது இருப்பினது விழிப்புணர்வைக் கொண்டதும், சுயமாக எண்ணங்களை உருவாக்கக் கூடியதுமாகும். அந்த எண்ணங்களானது உணர்வுகளை, உணர்ச்சிகளை மற்றும் திறன் பற்றிய விழிப்புணர்வு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டவையாகும். இவற்றால் நல்லதை கெட்டதிலிருந்தும், உண்மையை பொய்மையிலிருந்தும், யதார்த்தத்தை மாயையிலிருந்தும் பகுத்துணர முடியும். அதுமட்டுமல்லாமல் ஒரு தனித்துவமான ஆளுமையையும் கொண்டிருக்கும். இவை ஒவ்வொன்றும், அவற்றின் ஆளுமையை தீர்மானிக்கும் பழைய அனுபவங்களின் தொகுப்பை, தம்முடன் எடுத்துச் செல்வதனாலேயே இத்தகைய தனித்துவம் உருவாகின்றது. இதனாலேயே ஒருவரின் ஆளுமை மற்றையவரினது ஆளுமையிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கக் காண்கிறோம். 

இவற்றிற்கு நினைவாற்றலும் உண்டு. அதனாலேயே உறவுமுறைகள் உருவாகின்றன. பிறருடனான சந்திப்பு எமது நினைவில் இருக்கும்போது உறவுமுறை வளர்கிறது. இவை ஆசைகளைக் கொண்டவை. மட்டுப்படுத்தப்பட்ட (பௌதீக) பொருட்களின் மீதான ஆசைகள், மன சீரழிவுக்கு வழிவகுக்கிற அதே நேரம், உயர்ந்த ஆன்மீக, பரந்துபட்ட பொதுநல ஆசைகள் ஆத்மாவின் அதி சிறந்த அதன் மூல நிலைக்கு இட்டுச் செல்கிறது.

இவ்வாறாக, உயிருள்ளவையின் குணங்களை உயிரற்றவையினுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இவற்றிற்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசத்தினை உணரலாம். இதேபோன்று எமது சரீரத்தை வேறான ஒரு உபகரணமாகக் கருதினால், எமக்குள் தீர்மானிப்பது அல்லது பகுத்துணருவது எது? எமது பௌதீக அங்கங்களான கண், காது, கை, கால் ஏன் தலையிடம் கூட இத்தகைய திறன் இருக்க முடியாது. எனவே இந்த பௌதீக அங்கங்களைத் தாண்டி எதுவோ ஒன்று தான் இவற்றைச் செய்கிறது என்பது புலனாகிறது. 

பௌதீக உலகில், பல உபகரணங்களை உபயோகித்து நாம் காரியங்களை ஆற்றும் போதும், நாம் அவற்றிலிருந்து முற்றாக வேறுபட்டவர்களாவோம். உதாரணத்திற்கு, ஒரு கத்தியை எடுத்து எமது கரங்களால் காய்கறிகளை வெட்டுகிறோம், என்று வைத்துக்கொண்டால், இந்த முழு செயல்பாட்டிலும் கத்தி எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்வதில்லை. நாம் தவறுதலாகக் கையை வெட்டிக்கொண்டால், அச்சமயம் கத்தியோ அல்லது கைவிரலோ, உணர்வுரீதியாக எந்த சலனத்தையும் அடைவதில்லை. ஏனெனில் அவை வெறும் கருவிகள் மட்டுமே.

கத்தியை ஒரு உபகரணமாகப் பார்ப்பது எமக்கு இலகுவானதாகும். ஆனால் எமது கரங்களுடன் நாம் மிகவும் இணைக்கப்பட்டு இருப்பதனால், அதனை எம்மிலிருந்து வேறாக, ஒரு கருவியாகக் கருதுவது எமக்கு மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. எமக்கு இந்த உடலில் இரண்டு கரங்களைப் பெற்றிருக்கிறோம், தவிர இந்த உடல் உள்ளவரை எமக்கு அவ்விரண்டு கைகளே இருக்கப் போகிறது. இதனால் அவற்றுடன் மட்டுமலாது, இந்த முழு உடலுடனுமே மிக நெருங்கிய, செறிவான, ஆழமான, தனிப்பட்ட தொடர்பை / பற்றினை ஏற்படுத்தியதனால், எமது சுய அடையாளத்தை முழுவதுமாக மறந்து விட்டோம்.

இந்த உடலிற்குள் நாம் பிரவேசமான கணத்திலிருந்தே, இந்த பௌதீக உடலுகேற்ப, அனைத்து விசயங்களும், எம்மீது முத்திரை குத்தப்பட்டு விட்டன. நாம் பிறந்ததிலிருந்தே படிப்படியாக, 'நீ ஒரு பெண்', 'நீ ஒரு ஆண்' போன்ற உடல் ரீதியான விடயங்கள் உட்புகுத்தப் படுவதால், நாமும் வளர்கையில், முற்றிலும் இத்தகைய சிந்தனைகளில் உறுதியாகிவிடுகிறோம். அதனாலேயே பிற்பாடு எம்மிடம் யாரவது, எமது ஆண் அல்லது பெண் என்ற அடையாளத்தின் மீது கேள்வி எழுப்பும்போது அதனை மிகபெரிய ஒரு அவமானமாகக் கருதுகிறோம். ஆனால் உண்மையில் நாம் யார்? எம்மை இளையவர் என்றோ முதியவர் என்றோ அல்லது ஆண் என்றோ பெண் என்றோ அல்லது வெள்ளை என்றோ கருப்பு என்றோ அடையாளபடுத்துவது சரியானதா? இவற்றின் மூலம் எனது உண்மையான அடையாளம் வெளிப்படுத்தப் படுகிறதா? 

இந்த உடலுடன் சம்பந்தப்படுத்தி எம்மை அடையாளப்படுத்துவது, மிகவும் தவறான ஒரு வழிமுறையாகும். இதனை பிறர் நம் மீது திணிப்பது மட்டுமல்லாது, நாமே எமக்கு இப்பாரிய தவறை செய்கிறோம். எம்மை இந்த உடலுடன் சம்பந்தப்படுத்திக் கொள்வதனால், எமது பிரக்ஞையில் இவ்வுடல் சார்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அடையாளங்களான நிறம், மதம், மொழி, இனம், கலாச்சாரம் போன்றவையே எமது சுயத்தின் அடையாளங்களாகப் பதியப்பட்டுவிடுவதால், பிரக்ஞையானது பிற சாத்தியக் கூறுகளிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு விடுகின்றது.  


<- 1.1  அறிமுகம்       .       1.3  ஆத்மா ->