Showing posts with label meditation. Show all posts
Showing posts with label meditation. Show all posts

Friday, November 7, 2014

ராஜயோக தியானம் : ராஜயோகத்தில் உள்ளடங்கும் யோகமுறைகள்


ராஜயோகமானது முக்கியமானதாக முதலில் புத்தி யோகம் என்று கூறப்படலாம். ஏனெனில் இந்த யோகமானது அதிகளவில் புத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆத்மாவில் புத்தியானது ஞானத்தினைக் கிரகிக்கின்றது. எனவே ராஜயோகமானது ஞானயோகமாகவும் இருக்கிறது. புத்தியானது ஞானத்தினை உபயோகித்து பரமாத்மாவுடன் தொடர்பினை ஏற்படுத்தியவுடனேயே அவரை தாயாக, தந்தையாக மட்டுமல்லாது நண்பனாக, அன்புக்குரியவராக மற்றும் துணையாக அன்பினை வெளிப்படுத்துகிறது. எனவே இதில் பக்தி யோகத்தில் வெளிப்படுத்தப்படும் அன்பு இருக்கிறது. இத்தகைய அன்பு இல்லாமல் ஆத்மாவினால் பரமாத்மாவுடனான பூரணத்துவமான உறவுமுறை உருவாக முடியாது.

துறவு மூலமான யோகம்: பரமாத்மா மீதான இத்தகைய அன்பின் மூலம் ஆத்மாவானது இயல்பாகவே அனைத்திலிருந்தும் விலகி இறைவன் ஒருவரிடமே வந்துவிடுகிறது. எனவே ராஜயோகத்தினை சந்நியாச (துறவு) யோகம் என்றும் சொல்லலாம். ஆனால் இந்த துறவானது பௌதீகமானதல்ல. நாம் பௌதீகமாக ஒன்றினை துறந்துவிட்டு, மனதில் எந்நேரமும் அதனையே நினைத்துக் கொண்டிருந்தால் அதனை துறவு என்று சொல்லமுடியாது. அது வெறும் போலியான துறவேயாகும். எனினும், பரமாத்மாவினது அன்பினை அடையாளம் கண்டு அவரை நோக்கி எமது மனமானது கவரப்படுமேயானால், எமது எண்ணங்கள் மற்றும் புத்தியானது இந்த பௌதீக உலகத்தினது கவர்ச்சிகளிளிருந்து விடுபட்டுவிட்டது அல்லது அவற்றினை துறந்துவிட்டது எனலாம். இதுவே அதியுயர்ந்த, இயல்பான, எல்லையற்ற துறவாகும். 

கட்டுப்பாடு மற்றும் திடசங்கல்பத்தின் மூலமான யோகம்: ராஜயோகம் ஒரு ஹத யோகமுமாகும். ஹத என்றால் கட்டுப்பாடான ஒழுங்குமுறை அல்லது வலிமைமிக்க பயிற்சிமுறை என்பதாகும். ராஜயோகத்தில் ஆத்மாவினது ஆழமான புரிந்துணர்வினால், இயல்பான கட்டுப்பாடுகளும், வலிமை மற்றும் சக்தியும் வந்துவிடுகின்றன. இங்கே எவ்வித பௌதீகமான ஆசனங்களும் செய்யாதுவிடினும், ஆத்மாவானது கட்டுப்பாட்டில் இருப்பதனால் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல், தேவையான மனோரீதியான ஸ்திர நிலையில் நிலைத்திருக்கிறது.

ஹத என்றால் திடசங்கல்பம். ஆத்மாவினது திடசங்கல்பம் இல்லாது ராஜயோகம் கைகூடாது. இருப்பினும் இந்த திடசங்கல்ப்பமானது உள்முகமானது. உடலை பத்மாசனத்தில் வைத்திருப்பதற்குப் பதிலாக ராஜயோகியானவர் தனது மனதினை அந்நிலையில் வைத்திருக்கிறார். அதாவது தூய்மையற்ற இந்த பழைய கலியுகத்தில் வாழும்போதும், ஆத்மாவானது அவற்றினால் பாதிக்கப்படாமலும், தூய்மையற்றவற்றின் செல்வாக்கினுள் சென்றுவிடாமலும் தாமரை மலர் போன்று இருக்கிறது.

உடலுக்கு ஓய்வினை வழங்கும் சவாசனம் ராஜயோகத்தில் இல்லை. எனினும் ஆத்மாவானது தனது பௌதீக உடையான அதன் உடலிலிருந்தும், புலனுனர்வுகளிலிருந்தும் விடுபட்டு இருப்பதனால் அதனால் சவாசனத்தினை செய்வதனை விடவும் உயர்ந்த முழுமையான ஓய்வு நிலையை அனுபவம் செய்ய முடிகிறது. 

இவ்வாறாக, ராஜயோகத்தில் அனைத்தும் உள்முக வளர்ச்சிகுரியவையாக மாற்றப்பட்டு, அவற்றின் மேம்பாட்டின் மூலம் முழுதான சமநிலை பெறப்படுகிறது.


செயல்கள் மூலமான யோகம்: ராஜயோகம் ஓர் கர்மயோகமுமாகும் (கர்மம் என்றால் செயல்கள்). கர்மயோகமானது மூன்று வகைப்படும்.

முதலாவதாக, இது செயல்களை செய்துகொண்டே பயிற்சி செய்யும் யோகம். ராஜயோகம் என்பது வெறுமனே எமது அன்பான எண்ணங்கள் மூலமாக பரமாத்மாவுடனான தொடர்பினை ஏற்படுத்துதல் என்பதனால், பௌதீக ரீதியான ஆசனங்களோ, வேறெந்த பௌதீக உதவிகளோ அல்லது கருவிகளோ தேவையில்லை. எனவே நாம் எமது கைகளால் செயல்களைச் செய்துகொண்டிருக்கும்போதே எமது எண்ணங்களை பரமாத்மாவுடன் இணைத்து முழுமையான யோகத்தில் இருக்க முடியும்.

நடக்கும்போதும், பேசும்போதும், இருக்கும்போதும், உண்ணும்போதும், இன்னும் வேறெந்த செயல்களில் நாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதும் கூட எமது எண்ணங்கள் அன்புக்குரிய பரமாத்மாவுடன் இணைந்திருக்கின்றன. எனவே இந்த யோகமே அனைத்து செயல்கள் செய்யும்போதும் தொடர்ந்தும் நிலை மாறாமல் செய்யக்கூடிய ஒன்றாகும்.

இரண்டாவதாக, கர்மயோகத்தினை எமது கர்மங்களின் (செயல்களின்) வெளிப்பாடு என்றும் சொல்லலாம். பரமாத்மாவுடனான எமது தொடர்பானது எம்மை அன்பு, அமைதி, தூய்மை, என்பவற்றினால் நிரப்புகிறது. எனவே எமது செயல்கள் இந்நிலையின் (யோகி நிலையின்) வெளிப்பாடாகவே இருக்கும். செயல்களானது மாற்றமடைந்து தூய்மை நிறைந்ததாகவும், அமைதி மற்றும் அன்பினை பரப்புபவனவாகவும் இருக்கும்.

மூன்றாவதாக, கர்மயோகமானது எமது யோகத்தினை வலுவூட்டும் ஒரு செயல் (கர்மம்) ஆகும். அதாவது இதன் மூலமாக நாம் பரமாத்மாவுக்கு மிக அருகில் வருகிறோம் அல்லது பரமாத்மாவுடனான எமது இணைப்பு மிகவும் வலிமை பெறுகிறது. மனிதர்களுடனான கர்ம பரிமாற்றங்கள் (கொடுக்கல் வாங்கல்) மூலமாக உறவுமுறை உருவாகிறது. அதேபோல் இறைவன் மீதுள்ள அன்பினால், அந்த அன்பின் மூலம் செய்யப்படும் செயல்கள் எமது யோகத்தினை வலிமையாக்குவதுடன், எம்மை இறைவனுடன் மிக நெருக்கத்தில் கொண்டு சேர்க்கிறது. எனவே ராஜயோகம் ஓர் உண்மையான கர்மயோகமுமாகும்.




Tuesday, November 4, 2014

ராஜயோக தியானம் : யோகமுறையை தெரிவுசெய்தல்

பல வகையான யோக முறைகள் இருப்பதனால், அவரவர் சுபாவத்திற்கு ஏற்ற யோகமுறையை தேர்ந்தெடுத்து பின்பற்றுவது நல்லது என்று கூறப்படுகிறது. இந்த கூற்றானது எவ்வளவு தூரம் சரியானது என்று பார்ப்போம்.

அன்பு மற்றும் பக்தி மூலமான யோகம் : ராஜயோகம் என்றால் ஆத்மாவின் பூரணவிருத்தி ஆகும். நாம் பக்தி மார்க்கத்தினை தேர்வுசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகையில் இறுதி விளைவு என்னவாக இருக்கும்? பக்தி மூலம் பரமாத்மா மீதான அன்பு வெளிப்படுத்தப்படுகிறது, அதேபோல் பரமாத்மாவினது அன்பும் உணரப்படுகிறது. பணிவு வருகிறது. ஆனால் ஆத்மாவிற்கு அன்பு மட்டுமே போதுமானதல்ல, மேலும் அதிகளவிலானவை தேவைப்படுகின்றன.

எமது ஆத்மாவில், அன்பினுடைய, உணர்ச்சிகள் என்ற அம்சம் மட்டுமே விருத்தியாக்கிக்கொண்டு போகுமேயானால், எமது நடத்தைகள் ஆபத்தான பாணியில் விருத்தியாக்கிக்கொண்டு செல்லும். எனவே பரமாத்மா மீது அன்பு செலுத்துவது மட்டுமல்லாது, அவரது அறிவுறுத்தல்களை பின்பற்றுவதற்கும், வாழ்க்கைக்கு அவசியமான வழிகாட்டல்களுக்கு கீழ்படிந்து நடப்பதற்கும் அவரைப்பற்றி அறிந்திருப்பதும் அவசியமாகிறது. எனவே நாம் தனியே பக்தியோகியாக இருப்போமேயானால் அன்பு விருத்தியாகும். ஆனால் எவ்வித புரிந்துணர்வோ மெய்ஞானமோ காணப்படாது. இதனால் ஆத்மாவானது வலிமையற்றிருக்கும். 

கற்றல் அறிவு மூலமான யோகம் : ஞானயோகம் என்றழைக்கப்படும் கற்றல் அறிவு மூலமான யோகமும் எமக்குத் தேவையானதே. இந்த அறிவின் மூலமே புறத்தூண்டுதல்களிலிருந்து எம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.  

மெய்ஞானத்தின் ஆழமான உணர்தலின் மூலமான புத்தி யோகம் : இறைவன் மீது அன்பு மட்டுமே உள்ளபோது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட கணத்தில் இருக்கும் எமது பக்தி உணர்வினைவிட அதிகமான வலிமையுள்ள ஏதாவது சலனத்தினால் எமது யோகமானது குழப்பப்படுவது சாத்தியமே. ஆனால் ஞானத்தினது ஆழமான உணர்தல் மூலமான யோகத்தின் மூலம் ஆத்மாவானது தடைகள், சிரமங்கள் மற்றும் சலனங்களை இலகுவில் அடையாளம் கண்டு அவற்றில் சிக்காமல் உறுதியான யோகத்தில் நிலைத்திருக்க முடிகிறது. ஞான யோகமானது புத்தி யோகத்துடன் தொடர்புடையதாகும்.

யோகங்களின் சமநிலை: ஞானயோகம் மற்றும் புத்தியோகம் என்பன தனித்த யோகங்களாகும். இவற்றினை மட்டுமே பின்பற்றும் ஒருவரிடம் அகந்தை மற்றும் அராஜகம் என்பன விருத்தியாகி பூரணத்துவமான ஆளுமை விருத்தி ஏற்படாமல் போகலாம். முழுமையான ஆளுமை விருத்தியில் அன்பு மற்றும் நெறிமுறைகள் சரியான அளவில் கலந்திருக்கும். அதாவது நெறிமுறைகளினால் வழிப்படுத்தப்பட்ட அன்பாகவும், இனிமை மற்றும் அன்பு கலந்த நெறிமுறைகளாகவும் இருக்கும். எனவே முழுமையான சமநிலைப்படுத்தப்பட்ட ஆளுமை விருத்திக்கு இவையிரண்டும் அத்தியாவசியமாகிறது.

பக்தி மூலமாக எமது சுபாவத்தில் இனிமை விருத்தியாகிறது. அதேபோல் ஞானத்தின் மூலமாக ஆத்மாவில் வலிமை விருத்தியாகின்றது. எனவே எனது யோகத்தினை பகுதிகளாகப் பிரித்துவிட்டு அதில் ஒன்றைத்தான் தெரிவு செய்யவேண்டும் என்று சொல்லமுடியாது. மாறாக, இவையிரண்டும் சேர்ந்ததாகவுள்ள ஒரு யோகத்தினை நாம் தெரிவுசெய்ய வேண்டும். ராஜயோகமானது இவையனைத்து யோகங்களையும் ஒரே கட்டமைப்புக்குள் உள்ளடக்கியிருக்கிறது.

பக்தி, ஞானம், புத்தி யோகங்களைத் தவிர மேலும் மூன்று பிரதான யோகமுறைகளையும் ராஜயோகமானது உள்ளடக்கியிருக்கிறது. அவற்றினை அடுத்த பதிவில் பார்ப்போம்.







Monday, November 3, 2014

ராஜயோக தியானம் : குறிக்கோள்

'ஓம் சாந்தி' என்பதன் அர்த்தம், 'நான் ஓர் அமைதியான ஆத்மா' என்ற விழிப்புணர்வு, என்பதை முன்னமே பார்த்திருந்தோம். ராஜயோகத்தினது சாராம்சம் இதுவேயாகும். ராஜயோகமானது பரமதந்தையினால் மானிட கருவியாகிய பிரஜாபிதா பிரம்மாவினூடாக கற்பிக்கப்பட்டதாகும்.

ராஜயோகம் என்பது பல நூற்றுக்கணக்கான வருடங்களாக வழக்கத்தில் இருந்த போதிலும், கீதையை போதித்தவரும் கீதையின் கடவுளுமாகிய இறைவனால் பயிற்றுவிக்கப்பட்ட ஆதியான ராஜயோகமானது மனிதகுலத்திலிருந்து அழிந்துவிட்டது.  எனவே தான் எம்மால் அதியுயர்ந்த இணைப்பினை, உண்மையான யோகத்தினை அனுபவம் செய்யமுடியாமல் இருக்கின்றது. கீதையில் இறைவனால் வழங்கப்பட்ட "எப்போதெல்லாம் அதர்மம் தழைத்தோங்குகிறதோ அப்போது, அதர்மத்தினை அழித்து தர்மத்தினை நிலைநாட்ட நான் அவதரிக்கிறேன்.  ராஜயோகத்தினை கற்பிக்க வருகிறேன்." என்ற வாக்குறுதியின்படி இந்தக் கல்வியானது அவரால் மீண்டும் தரப்படுகிறது. 

குறிக்கோள்: ராஜயோக கல்வியினது நோக்கம் சம்பூர்ணநிலையை அடைதலாகும். இது வெறுமனே ஒரு சிறிய மாற்றத்திலோ அல்லது ஒருமனிதனை சற்றே மேம்பட்ட நிலைக்கு கொண்டுசெல்வதிலோ அல்ல. மாறாக இதன் குறிக்கோளும், வரைவிலக்கணமுமே முழுதான பூரணத்துவமாகும். எனவேதான் இது அனைத்து விதமான கல்வியை விடவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. தெய்வீகத்தன்மை நிறைந்ததாக இருந்த ஆத்மாவானது, தற்போது அதனை இழந்துவிட்டது. ஆனால் அதனை மீண்டும் ஆத்மாவால் பெற்றுக்கொள்ள முடியும். எனவே ராஜயோகமானது ஆத்மாவுக்கானது. இந்த தியான முறையினால் ஒருவரின் நடத்தையில், குணத்தில், சம்ஸ்காரங்களில் மாற்றம் ஏற்படுகின்றது. இதன் மூலம் பல காலமாக ஆத்மாவில் பதியப்பட்டு வந்த தீய பண்புகள் அகற்றப்படுவதனால், ஆத்மாவினது ஆதியான தெய்வீகத்தன்மை மீண்டும் பிரகாசிக்கத் தொடங்குகிறது.

முறை: பரமாத்மாவுடனான இணைப்பே, ராஜயோகத்தினது குறிக்கோளாகிய சம்பூர்ண நிலையை அடையும் வழிமுறையாகும். மனிதர்களுடனான அல்லது தீர்க்கதரிசிகளுடனான அல்லது இறைதூதர்களுடனான தொடர்பின் மூலம் நாம் எமது அதியுயர்ந்த நிலையை அடைய முடியாது.  மாறாக, பரமாத்மாவுடனான தொடர்பின் மூலம், எமது குறைபாடுகளை நீக்குவதற்கான வலிமையை பெற்றுக்கொள்வதுடன், பரிபூரண நிலையை அடைவதற்குத் தேவையான அனைத்து தெய்வீக குணங்களை கிரகிக்கக் கூடிய ஆற்றலினையும் பெற்றுக்கொள்கிறோம்.

சம்பூர்ண நிலை (கர்மாதீத் நிலை)

கர்மாதீத் நிலை என்பது, விகாரங்கள் எதுமற்ற, திவ்யகுணங்கள் நிறைந்த, வன்முறையற்ற, தெய்வீக பண்புகள் நிறைந்த நிலையாகும். அதியுயர் ஒழுக்க நெறிகளை பின்பற்றி ஆத்மாவானது இந்த நிலையை அடைகிறது. பரம தந்தையினால் கற்பிக்கப்படும் ஞானத்தினாலும், தியான முறையினாலும் இது சாத்தியமாகிறது.

யோகம் என்றால் இணைப்பு என்று அர்த்தம். எனவே ராஜயோகம் என்றால் பரமாத்மாவுடனான இணைப்பு என்று அர்த்தம். இது அனைத்து தொடர்புகளையும் விட அதியுயர்ந்த தொடர்பு என்றும் அர்த்தமாகிறது. இந்த யோகத்தின் மூலம் ஆத்மாவானது தான் இழந்துவிட்ட தனது அதியுயர் ஸ்தானத்தினை திரும்பப் பெறுகிறது. எமது மனதிற்கு, எமது புலன்களுக்கு, எமது நடத்தைகளுக்கு என்று, எமக்கு நாமே அதிபதியாவதால் எமக்கு விருப்பமான பாதையில் எம்மை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. ஆத்மாவானது புற நிகழ்வுகளாலும், புறக் காரணிகள் மற்றும் மனிதர்களாலும் ஆட்டுவிக்கப்பட்டு திசைதிருப்பப்படாமல், தனது இலக்கினை தெளிவாகக் காண்கிறது. அதுமட்டுமல்லாமல் அதனால் தனது குறிக்கோளை நோக்கி திடசங்கல்ப்பத்துடன் சென்று இறுதி இலக்கினை இலகுவாக அடையமுடிகிறது.

ராஜயோகமானது அதியுயர்ந்ததாக இருக்கும் அதேவேளையில், மிகவும் சிரமாமானதாகவும் உள்ளதாக சில சமயங்களில் எம்மால் உணரப்படுகிறது. எதுவுமே உண்மையிலிருந்து அப்பால் செல்லமுடியாது. ஏனெனில் ராஜயோகமானது எமது உண்மை நிலையினது இயல்பான விழிப்புணர்வாகும். இது எவ்வாறு சிரமாயிருக்க முடியும்? ராஜயோகமானது வெகு இயல்பானது. தந்தையுடனான அன்புநிறைந்த தொடர்பு. அன்பான தந்தையுடனான தொடர்பானது எவ்வாறு சிரமமானதாக இருக்க முடியும்?

எனினும் சரியான புரிந்துணர்வு அல்லது தெளிவான ஞானம் இல்லாத காரணத்தினால் சுய அடையாளத்தை பற்றிய மற்றும் எமது தந்தையைப் பற்றிய குழப்பங்கள் உருவாகின்றன. அப்போது யோகம் சிரமமாகிறது. ஆனால் எமக்கு இவற்றினைப்பற்றி தெளிவான அறிமுகம் இருக்கும் போது எம்மால் அதன் அடிப்படையில் தொடர்பினை இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. இந்த உறவுமுறையில் நன்மைகளை அனுபவம் செய்யும்போது தொடர்பானது ஆழமாகி சம்பூர்ண இணைப்பு மற்றும் நல்லிணக்கம் உருவாகி, ஆத்மாவானது பரமாத்மாவினது பிரதியாக ஆகிறது. பரமாத்மாவின் பண்புகளுடன் அது மீளுருவாக்கம் அடைகிறது.





Thursday, October 30, 2014

ராஜயோக தியானம் : Meditation - Supreme Communication

தியானத்தில் அமர்ந்திருக்கும்போது, கீழ்க்கண்ட எண்ணங்களை சிந்தனையில் கொண்டுவந்து, அவற்றிலிருந்து சக்தியை பெற்றுக்கொள்வதனை அனுபவம் செய்யவும்.

தியானத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட எண்ணங்கள்
நான் ஓர் ஆத்மா என்ற விழிப்புணர்வில் இருக்கிறேன்.. நான் புருவமத்தியில் இருக்கும் மிகச்சிறிய ஒளிநிறைந்த புள்ளியாவேன்.. எனது எண்ணங்கள் இந்த உடலுக்கு அப்பால்.. பௌதீக உலகத்துக்கும் அப்பால் சென்று.. மகத்தான ஒளிநிறைந்த பகுதியை அடைகிறது.. அங்கே முழுமையான அமைதியும்.. ஸ்திரத்தன்மையும் இருக்கிறது.. இதுவே எனது வீடாகும்.. 
நான் இப்போது சிவபாபாவின் முன்னால் இருப்பதை உணர்கிறேன்.. ஒளிநிறைந்த புள்ளி வடிவான பாபாவிலிருந்து ஒளியானது கடல் போல எங்கும் பரவுகின்றது.. நான் அந்த ஒளியை எனக்குள் உள்வாங்கிக் கொள்கிறேன்.. பாபா அமைதிக் கடலாவார்.. நான் அந்த அமைதியின் அலைகளை உணர்கிறேன்.. அவை இதமாக.. குளிர்மையாக.. ஆத்மாவை அமைதிப்படுத்துகிறது.. அந்த அமைதியே எனது இயல்பு நிலையாகும்..  
நான் ஆரம்பத்தில் இவ்வாறே இருந்தேன்.. இனிமேல் எப்போதும் இவ்வாறே இருப்பேன்..  
எல்லாம் வல்லவர் தனது சக்தியால் என்னை நிரப்புகிறார்.. பலகீனமான ஆத்மா இப்போது மாற்றமடைந்துவிட்டது.. இப்போது நான் வலிமை.. சக்தி.. அமைதி.. ஒளி.. வல்லமை.. தூய்மை.. பேரானந்தம்.. என்பவற்றின் சொரூபமாகிவிட்டேன்..  

பயனுள்ள முறை : இரவில் எமது கடைசி எண்ணங்களாக எது இருக்கிறதோ, அதுவே காலையில் எமது முதல் எண்ணங்களாகவும் இருக்கும். எனவே இரவு தூங்கப்போகுமுன்பு எமது எண்ணங்களை, தியானத்தின் மூலம் பரமாத்மாவுடன் இணைத்துவிட்டோமேயானால், தூக்கத்தில் அமைதி நிலைத்திருக்கும். 

அதேபோல், காலையில் எழுந்தவுடன் வரும் முதல் எண்ணங்களே அன்றைய நாளுக்கான அடித்தளத்தினை இடுகின்றன. எனவே வழமையாய் எழும்பும் நேரத்தை விட சில நிமிடங்கள் முன்பாக எழுந்து, தியானத்தின் மூலம் பரமாத்மாவிடமிருந்து சக்தியை பெற்றுக்கொண்டோமேயானால், ஆத்மாவினால் அன்றைய தினத்தினை இலகுவாகவும், அன்பு நிறைந்ததாகவும் கழிக்க முடியும். 

இதனை தினசரி சோதனை செய்து விளைவினை அறிந்து கொள்ளலாம்.

மீட்டல் : கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கு முன்னர், 'நான் யார்?' என்பதை நினைவுகூருவதன் மூலம் எமது புத்தியை தெளிவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் ஏற்படும் வித்தியாசத்தினை பலர் உணர்ந்துள்ளனர். 

வினாக்கள் 

1. பரமாத்மாவின் வடிவம் என்ன? சிவா என்ற பெயரின் பொருள் என்ன?
2. பரமாத்மாவுக்கும் ஆத்மாவுக்கும் இடையேயான வேறுபாட்டினை விளக்குக?
3. இறைவன் சர்வவியாபியாக இருக்க முடியாது என்பதற்கான காரணங்கள் சில?
4. மூவுலகம் என்பதன் பொருள் யாது?








Friday, October 10, 2014

ராஜயோக தியானம்: வாகனமும் அதன் சாரதியும்


ஒரு வாகன சாரதியானவர், முழுதான விழிப்புணர்வுடன் இருந்தால் மாத்திரமே, அவரால் தனது வாகனத்தை சரியாக பயன்படுத்தி, சென்று சேரவேண்டிய இடத்தை அடையமுடியும். இதே ஒப்புவமையைக் கொண்டு எம்மை அவதானிக்கும் பொழுது, கட்டுப்பாட்டில் வைத்திருத்தலுக்கும், ஓடிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிடுதலுக்குமான மிகப்பாரிய வித்தியாசத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

வாகன சாரதியானவர், தான் செய்பவற்றின் விழிப்புணர்வு இருக்கும் வரை அவரால் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது திடீரென்று அவரது கவனம் தவறுமானால், மனதை ஒருகணமேனும் வேறெங்காவது அலைந்து திரிய விடுவாராயின், அவர் பாதையிலிருந்து விலகி சரிவில் விழுந்துவிடுவார். 

மக்கள், தாம் என்ன செய்கிறோம் என்பதனை மறந்துவிடும் போது விபத்துக்கள் நடக்கின்றன. இதேபோலவே, யாராவது தமது சுய கட்டுப்பாட்டை ஒரு கணமேனும் இழப்பார்களாயின், அங்கே (உதாரணத்துக்கு சடுதியான கோபம்) விபத்து நடைபெற்று தனக்கும் அதில் சம்பந்தப்படுபவர்களுக்கும் துன்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. விபத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட சேதமானது, அதனை  பார்ப்பவர்களையும் வருத்தமடையச் செய்துகிறது.

எனவே ஆத்மாவுக்கும்(சாரதி) உடலுக்கும்(வாகனம்) இடையே புரிந்துணர்வும் நல்லிணக்கமும் மிகவும் அவசியமாகும். ஒரு சாரதியானவர் எவ்வாறு விழிப்புணர்வுடனும், தனது வாகனத்துடன் நல்லிணக்கத்துடனும் இருக்கிறாரோ, அதேபோல் ஆத்மாவும் தனது உடலின் முழுக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நாமோ விழிப்புணர்வுடன் இல்லாது தூங்கிவிட்டோம். அதனாலேயே பல விபத்துகள் நடந்துவிட்டன. இதனால் எமக்கும், எம்மைச் சூழவுள்ளவர்களுக்கும், ஆழ்ந்த துக்கம் ஏற்படுவதற்கு காரணமாகிவிட்டோம். இப்போது இந்த விழிப்புணர்வு காரணமாக,  சாரதி விழித்தெழுந்து, வாகனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவந்து, அதனை சரியான முறையில் உபயோகிக்கத் தொடங்குகிறார்.

கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருத்தல்: நான் ஓர் ஆத்மா என்ற உணர்வின் மூலம்,  புலன்களின் உதவியைப் பெற்று, நல்லதை தீயதிலிருந்தும்,  தேவையானதை தேவையற்றதிலிருந்தும் தேர்ந்தெடுக்க முடிவது மட்டுமல்லாது, அனைத்தையும் சாதகமான செயல்களாக ஆக்குவதன் மூலம் பிறருக்கும் உதவி, எமது பிரக்ஞையையும் உயர்வாக வைத்திருக்க முடிகிறது. தவிர, எம்மைப் பற்றிய விழிப்புணர்வில் இருப்பதனால், எமது பௌதீக புலன்களின் அதிபதியாக ஆகிறோம்.

இதுகாலவரை எமது புலன்களின் மீது, எமக்கு மிகக் குறைந்தளவு கட்டுப்பாடே இருந்து வந்துள்ளது. இதனாலேயே எமது கண், காது போன்ற புலனங்கங்கள், பல வருடங்களாக எமது மனத்தை அடிமையாக்கி, பல்வேறுவழிகளில் இழுத்துச்சென்று, தமது விருப்பப்படி ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன. சரீரத்தினை முன்னிலைப்படுத்தி ஆத்மாவை புறந்தள்ளுவது, குதிரைக்கு முன்பாக வண்டியை கட்டுவது போலாகும். ஞானமே சக்தியாகும். எனவே இந்த ஞானத்தின் மூலம், எம்மால் இந்த சரீரத்தின் மீது உண்மையான இறையாண்மையை மீளவும் நிலைநாட்ட முடியும்.






Wednesday, October 8, 2014

ராஜயோக தியானம்: ஆத்மா


எம்மால், இந்த பௌதீக வரைமுறைகளைத்தாண்டி இருக்கும் விடயங்களை கூட அனுபவம் செய்ய முடிகிறது. ஆகையால், நான் என்பது, இந்த பௌதீக உருவமல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக இந்த உடலால் மீண்டும் குழந்தைப் பருவத்திற்கு செல்ல முடியாது, ஆனால் என்னால் முடியும். எமது மனமானது, ஒரு வினாடி நேரத்திலேயே எமது இளமைப் பருவ நாட்களுக்குச் சென்றுவிட முடியும். அதேபோல், எதிர்காலத்தை நோக்கியும் ஒரே வினாடியில் சென்று, சாத்தியமான முதுமைப் பருவ நாட்களை காண முடியும். இவ்வாறாக, எம்மால் இந்த மூன்று காலங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஒரே வினாடியில் பயணித்துவிட முடிகிறது. அதுமட்டுமல்லாமல் எவ்வளவு தூரத்தையும் கூட ஒரே வினாடியில் கடந்துவிட முடியும்.  நினைத்த மாத்திரத்திலேயே எமது எண்ணங்கள் எம்மை, அமெரிக்காவுக்கோ அல்லது ஆஸ்திரேலியாவுக்கோ ஒரே நொடியில் அழைத்துச் சென்றுவிடும். எங்கே ஈர்ப்பு இருக்கிறதோ, அங்கே எண்ணங்கள் எம்மை அழைத்துச் செல்கின்றன. இவை அனைத்தும் நிகழ்கையில் எமது உடலோ, ஓர் குறித்த இடத்திலேயே இருக்கிறது. எனவே இந்த உடலானது பௌதீகமானது. ஆனால் நாம் அப்படியல்ல. எம்மால் தூரம், நேரம் போன்ற பௌதீக வரைமுறைகளைத் தாண்டி செல்ல முடியும்.   

அடுத்து, இந்த சரீரம் வாழ்வதற்குத் அவசியமான உண்ணுதல், குளித்தல் போன்றவை போலவே, நாம் ஒவ்வொருவரும், (சென்ற பதிவில் கூறப்பட்டதைப் போல்) எமக்கேயுரிய தனிப்பட்ட ஆளுமையுடன் தான் வளர்கிறோம். எமது சில நுட்பமான பண்புகள், எமது பௌதீக பெற்றோரை விடவும் பெருமளவில் வேறுபட்டுக் காணப்படும். எனவே அவற்றை இதற்க்கு முன்னமே தான் எங்கோ பெற்றிருக்க வேண்டும். கண்ணாடியானது, எமது பௌதீக உருவம், முகச் சாயல், நிறம் போன்றவற்றை காட்டும். ஆனால் இந்த வெளிப்புற விஷயங்கள் எதனாலும், எமது சுய அடையாளத்தை வெளிப்படுத்திவிட முடியாது. ஏனெனில் நாம் இந்த பௌதீக உடலுக்குள் இருக்கும் கட்புலனாகாத, என்றும் அழிவில்லாத ஆத்மா.

உருவம்: நாம், இந்த பௌதீக உடலிலிருந்து விலகி, சுய அடையாளத்தை தேடத் தொடங்கும் போது, அசாதாரண பற்றற்ற தன்மையையும், நிச்சயமற்ற தன்மையையும் உணருவோம். இது ஏனெனில், நாம் இன்னுமே 'நான் யார்?' என்பதை முற்றாக அறிந்து கொள்ளாமலேயே, இதுகாலவரை எமக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு இடத்தை விட்டு சடுதியாக விலகிவிடுகிறோம். அதாவது இரண்டும்கெட்டான் நிலை. அதனால்,  நாம் இப்போது இன்னும் மேலே ஒரு படி போய் நான் யார் என்பதனை முழுதாக அறிந்து அனுபவம் செய்ய வேண்டும்.  இதற்கு,  முதலில் எம்மை உருவமற்ற, மிக மிக நுண்ணிய, சக்தி மிக்க, பிரகாசமான ஓர் ஒளிப்புள்ளியாகக் கருதுவோம். இப்போது பலதரப்பட்ட எண்ணங்கள் வரும். இது உண்மையாக இருக்க முடியுமா? என்ன ஒரு வினோதமான எண்ணம்? இதுவரை காலமும் என்னை ஓர் ஆணாகவோ அல்லது ஒரு பெண்ணாகவோ கருதி வந்துவிட்டு இப்போது மிக மிக நுண்ணிய ஒளிப்புள்ளியாக எண்ணுவதென்றால்..? 

இன்னும் சொல்லப் போனால்.. மேலும் பகுக்க முடியாத, மிகவும் நுண்ணிய இந்த சிறிய புள்ளியினுள் தான் அனைத்து சக்திகளும் நிறைந்திருக்கிறது.  இதை பற்றி நாம் எவ்வளவு ஆழமாக எண்ணுகிறோமோ, அந்தளவு நாம், எம்மைப் பற்றிய விழிப்புணர்வை அடைய முடியும்.  

அனுபவம் செய்தல்:  நேரத்தாலும் தூரத்தினாலும் தடைப்படுத்த முடியாத, அழிவற்ற, தனித்துவம் மிக்க சிறிய புள்ளி. எவ்வித கேத்திரகணித பரிமாணமுமற்ற ஓர் புள்ளி. கட்புலனாகாத தூய ஆற்றல். இவ்வாறு எம்மை நினைக்கையில் மிகவும் விசித்திரமாக இருக்கிறதல்லவா? இருந்தும் நாம் இதனை மேற்கொண்டு அனுபவம் செய்து பார்க்கப் போகிறோம். 

அமைவிடம்: எமது ஆத்மாவானது, நெற்றியின் நடுவே புருவ மத்தியில், பௌதீக உடலை கட்டுப்படுத்தும் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்யும் உள்ளுறுப்புகளுக்கு மிக அருகாமையில் இருக்கிறது. இங்கிருந்து அதனால் முழுகட்டுப்பாட்டை கையாள முடிகிறது. 

செயல்திறன்: மூளையானது, மின் அதிர்வுகள் வழி இயங்கும் ஓர் கருவியாகும். ஆத்மாவானது ஒரு தீர்மானத்தினை எடுத்த உடனேயே அத் தீர்மானம், மூளையை அடைகிறது. பின்னர் அது, உடல்தொகுதியினால் செயலாக மாற்றப்படுகிறது. இவ்வாறே, புற தூண்டுதல்களும், ஐம்புலன்கள் வழியாக மூளையை அடைந்து, பின்பு ஆத்மாவை அடைகிறது. இதனாலேயே வெளிக்காரணிகளால் நாம் தூண்டப்படுகையில், பலதரப்பட்ட மேலதிக எண்ணங்களை உருவாக்குவது மட்டுமல்லாது, பல சமயம் அவை செயல்களாகவும் மாற்றம் பெறுகின்றன. இதனைத் தீர்மானிப்பது புத்தியாகும். ஆத்மாவே கட்டுப்படுத்துவரும், மூளையே அதன் கட்டுப்பாட்டு அறையும் ஆகும். 

மூன்றாவது கண்: ஒருகாலத்தில், பௌதீகமாக இருந்ததாகக் கருதப்பட்ட இந்த மூன்றாவது கண், உண்மையில் மெய்யறிவு ஆகும். எனினும் இது பௌதீகமானதல்ல. ஏனெனில் மெய்யறிவு, பௌதீக உடலின் எந்த குறித்த பாகத்துடனும் தொடர்புபட்டதல்ல. ஆத்மாவே மெய்யறிவைத் தேடுகிறது, ஆத்மாவே அதனைத் தக்கவைத்துக் கொள்கிறது. ஆதலால், ஆத்மீக ரீதியில் "மூன்றாவது கண்ணைத் திறத்தல்" என்றால் 'பிரக்ஞையின் விழிப்புணர்வு' அல்லது 'ஆத்ம உணர்வு' என்று அர்த்தமாகும்.

மனிதர்கள் இரவில் பௌதீகக் கண்களினால் பார்க்க முடியாதபோது தடுமாறுகிறார்கள். கண்கள் மனத்தை ஏமாற்றுகிறது. முழுமையான  தகவல்களைப் பெறமுடியாததால் புத்தி தவறான முடிவை எடுக்கிறது. ஞானம் என்பது சூரிய வெளிச்சம் போன்றது. அது மூன்றாவது கண்ணைத் திறக்கையில், இருட்டு உடனடியாகவே அகன்று வெளிச்சம் உண்டாகிறது. இந்த மூன்றாவது கண் திறக்கப்பட்டதும் எமக்கு, நாம் எதைச் செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. நாம் இதுவரை காலமும், எமது இரு பௌதீகக் கண்களை மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கிறோம். அவற்றால் இந்த பௌதீக பரிமாணங்களைத் தாண்டி பார்க்க முடியாது. ஆனால் எமது மூன்றாவது கண்ணினால் பௌதீக பரிமாணங்களைத் தாண்டிப் பார்க்க முடிவதால், எமக்கு நாமே முழுமையான அதிபதியாக முடிகிறது.  



Tuesday, October 7, 2014

ராஜயோக தியானம்: பௌதீகமானதும் பௌதீகமற்றதும்

நாம் கண்ணாடி முன்னின்று பார்க்கையில் புலனாகும் பௌதீக உருவத்தினை விட, மேலதிகமாக எம்மிடம் ஏதாவது உள்ளதா? அதனைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, முதலில் நாம் 'உயிருள்ள மற்றும் உயிரற்ற' என்பதனை உயிரியல் தாண்டி ஆழமாக, ஆத்மீக ரீதியில் வரையறை செய்துகொள்ள வேண்டும். 

உயிருள்ளவை என்பது, தனது இருப்பினது விழிப்புணர்வைக் கொண்டதும், சுயமாக எண்ணங்களை உருவாக்கக் கூடியதுமாகும். அந்த எண்ணங்களானது உணர்வுகளை, உணர்ச்சிகளை மற்றும் திறன் பற்றிய விழிப்புணர்வு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டவையாகும். இவற்றால் நல்லதை கெட்டதிலிருந்தும், உண்மையை பொய்மையிலிருந்தும், யதார்த்தத்தை மாயையிலிருந்தும் பகுத்துணர முடியும். அதுமட்டுமல்லாமல் ஒரு தனித்துவமான ஆளுமையையும் கொண்டிருக்கும். இவை ஒவ்வொன்றும், அவற்றின் ஆளுமையை தீர்மானிக்கும் பழைய அனுபவங்களின் தொகுப்பை, தம்முடன் எடுத்துச் செல்வதனாலேயே இத்தகைய தனித்துவம் உருவாகின்றது. இதனாலேயே ஒருவரின் ஆளுமை மற்றையவரினது ஆளுமையிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கக் காண்கிறோம். 

இவற்றிற்கு நினைவாற்றலும் உண்டு. அதனாலேயே உறவுமுறைகள் உருவாகின்றன. பிறருடனான சந்திப்பு எமது நினைவில் இருக்கும்போது உறவுமுறை வளர்கிறது. இவை ஆசைகளைக் கொண்டவை. மட்டுப்படுத்தப்பட்ட (பௌதீக) பொருட்களின் மீதான ஆசைகள், மன சீரழிவுக்கு வழிவகுக்கிற அதே நேரம், உயர்ந்த ஆன்மீக, பரந்துபட்ட பொதுநல ஆசைகள் ஆத்மாவின் அதி சிறந்த அதன் மூல நிலைக்கு இட்டுச் செல்கிறது.

இவ்வாறாக, உயிருள்ளவையின் குணங்களை உயிரற்றவையினுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இவற்றிற்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசத்தினை உணரலாம். இதேபோன்று எமது சரீரத்தை வேறான ஒரு உபகரணமாகக் கருதினால், எமக்குள் தீர்மானிப்பது அல்லது பகுத்துணருவது எது? எமது பௌதீக அங்கங்களான கண், காது, கை, கால் ஏன் தலையிடம் கூட இத்தகைய திறன் இருக்க முடியாது. எனவே இந்த பௌதீக அங்கங்களைத் தாண்டி எதுவோ ஒன்று தான் இவற்றைச் செய்கிறது என்பது புலனாகிறது. 

பௌதீக உலகில், பல உபகரணங்களை உபயோகித்து நாம் காரியங்களை ஆற்றும் போதும், நாம் அவற்றிலிருந்து முற்றாக வேறுபட்டவர்களாவோம். உதாரணத்திற்கு, ஒரு கத்தியை எடுத்து எமது கரங்களால் காய்கறிகளை வெட்டுகிறோம், என்று வைத்துக்கொண்டால், இந்த முழு செயல்பாட்டிலும் கத்தி எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்வதில்லை. நாம் தவறுதலாகக் கையை வெட்டிக்கொண்டால், அச்சமயம் கத்தியோ அல்லது கைவிரலோ, உணர்வுரீதியாக எந்த சலனத்தையும் அடைவதில்லை. ஏனெனில் அவை வெறும் கருவிகள் மட்டுமே.

கத்தியை ஒரு உபகரணமாகப் பார்ப்பது எமக்கு இலகுவானதாகும். ஆனால் எமது கரங்களுடன் நாம் மிகவும் இணைக்கப்பட்டு இருப்பதனால், அதனை எம்மிலிருந்து வேறாக, ஒரு கருவியாகக் கருதுவது எமக்கு மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. எமக்கு இந்த உடலில் இரண்டு கரங்களைப் பெற்றிருக்கிறோம், தவிர இந்த உடல் உள்ளவரை எமக்கு அவ்விரண்டு கைகளே இருக்கப் போகிறது. இதனால் அவற்றுடன் மட்டுமலாது, இந்த முழு உடலுடனுமே மிக நெருங்கிய, செறிவான, ஆழமான, தனிப்பட்ட தொடர்பை / பற்றினை ஏற்படுத்தியதனால், எமது சுய அடையாளத்தை முழுவதுமாக மறந்து விட்டோம்.

இந்த உடலிற்குள் நாம் பிரவேசமான கணத்திலிருந்தே, இந்த பௌதீக உடலுகேற்ப, அனைத்து விசயங்களும், எம்மீது முத்திரை குத்தப்பட்டு விட்டன. நாம் பிறந்ததிலிருந்தே படிப்படியாக, 'நீ ஒரு பெண்', 'நீ ஒரு ஆண்' போன்ற உடல் ரீதியான விடயங்கள் உட்புகுத்தப் படுவதால், நாமும் வளர்கையில், முற்றிலும் இத்தகைய சிந்தனைகளில் உறுதியாகிவிடுகிறோம். அதனாலேயே பிற்பாடு எம்மிடம் யாரவது, எமது ஆண் அல்லது பெண் என்ற அடையாளத்தின் மீது கேள்வி எழுப்பும்போது அதனை மிகபெரிய ஒரு அவமானமாகக் கருதுகிறோம். ஆனால் உண்மையில் நாம் யார்? எம்மை இளையவர் என்றோ முதியவர் என்றோ அல்லது ஆண் என்றோ பெண் என்றோ அல்லது வெள்ளை என்றோ கருப்பு என்றோ அடையாளபடுத்துவது சரியானதா? இவற்றின் மூலம் எனது உண்மையான அடையாளம் வெளிப்படுத்தப் படுகிறதா? 

இந்த உடலுடன் சம்பந்தப்படுத்தி எம்மை அடையாளப்படுத்துவது, மிகவும் தவறான ஒரு வழிமுறையாகும். இதனை பிறர் நம் மீது திணிப்பது மட்டுமல்லாது, நாமே எமக்கு இப்பாரிய தவறை செய்கிறோம். எம்மை இந்த உடலுடன் சம்பந்தப்படுத்திக் கொள்வதனால், எமது பிரக்ஞையில் இவ்வுடல் சார்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அடையாளங்களான நிறம், மதம், மொழி, இனம், கலாச்சாரம் போன்றவையே எமது சுயத்தின் அடையாளங்களாகப் பதியப்பட்டுவிடுவதால், பிரக்ஞையானது பிற சாத்தியக் கூறுகளிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு விடுகின்றது.  


<- 1.1  அறிமுகம்       .       1.3  ஆத்மா ->






Monday, October 6, 2014

ராஜயோக தியானம் : அறிமுகம்


ஓம் சாந்தி. இந்த இரண்டு வார்த்தைகள், ராஜயோக கல்வியின் சாராம்சத்தை பிரதிபலிக்கின்றன. ஓம் என்றால் "நான் ஓர் ஆத்மா" என்றும் சாந்தி என்றால் "அமைதி" என்றும் அர்த்தமாகும். எனவே "நான் ஓர் அமைதியான ஆத்மா" என்பதை உணர்வதே அடிப்படையாகும். 

மேலோட்டமாகப் பார்த்தால் இது, வெகு இலகுவான ஒன்றாகத் தெரியலாம். ஆனால், தினசரி வாழ்வில் எம்மில் எத்தினை பேரால் இந்த நினைவில் நிலைத்திருக்க முடிகிறது? சற்று முன் கடந்துசென்ற இருபத்துநான்கு மணிநேரத்தில் மட்டும் நாம், எத்தனை முறை அமைதியை இழந்து தவித்திருப்போம்? 

பொதுவாக, அமைதிக்கான தேடலில், நாம் பெரும்பாலும் அமைதியை இழந்து தவிப்பதே பல சமயம் நடந்து வருகின்றது. ஆனால் இந்த ராஜயோக கல்வி மூலம் ஆத்மா அமைதிநிலையை வெகு சுலபமாக அடைய முடிகிறது. "ராஜயோக தியானம்" என்ற வார்த்தை பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருப்பினும், இக்கல்வி வெகு அண்மைக் காலத்திலேயே பெறப்பட்டதாகும். இங்கு எல்லாவற்றுக்குமே அடிப்படையான "நான் யார்?" என்ற கேள்விக்கு மிக எளிதான விளக்கம் கிடைக்கப் பெறுகின்றது.

"ராஜயோகம்" என்பதன் பொருள் பல வழிகளில் விளக்கப்படலாம். "யோகம்" என்றால் 'இணைப்பு' என்று அர்த்தம். "ராஜ" என்பதற்கு அதியுயர், அரச அல்லது முதன்மை என்று பல அர்த்தங்கள் உள்ளன. இதை கற்பதன் மூலம் இறைமையைப் பெற்றுக்கொள்வதால் இது தியானங்களின் அரசன் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் சக்தியானது, பிறர் மீதல்லாமல் தனது மனத்தைக் கட்டுப்படுத்துவதற்க்கே பிரயோகிக்கப்படுகிறது. ஏனெனில் எமது மனமே துன்பத்தையும் துயரத்தையும் உருவாக்குகின்றது. இதன் மூலம், எமது மனதின் அதிபதியாகுவது மட்டுமல்லாது, தனிமனித ஆளுமையின் அதிபதியாகவும், எமது பௌதீக உடையான இந்த சரீரத்தின் அதிபதியாகவும் ஆக முடிகிறது.




ராஜயோகத்தினது முதலாவது பாடமான 'நான் ஓர் ஆத்மா', 'ஆத்ம உணர்வு' என்பவையே, இறுதியான நிலையான அனைத்து எதிர்மறைகளிலிருந்தும் விடுபட்ட, சம்பூர்ண நிலையினை அடைவதற்கு அத்திவாரமாகிறது.





Wednesday, October 1, 2014

எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் சக்தி



ஒலி ஆற்றல், ஒளி ஆற்றல், மின் ஆற்றல் போன்ற பல சக்தி வடிவங்கள் போலவே, சிந்தனை மற்றும் உணர்வு ஆற்றல் கூட கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி வடிவம் ஆகும்.  இதன் ஒரே வித்தியாசம் என்னவென்றால், இது சடப்பொருளின் வரம்புகள் அல்லது பஞ்ச பூதங்களைக் கடந்து தொழிற்படும் ஓர் சடப்பொருள் அல்லாத மிகவும் நுண்ணிய மனோ ஆற்றல் ஆகும். தவிர இது உயிர்ச் சக்தி நிறைந்த ஆத்மாவிலிருந்து உருவாகும் உயிர்ச் சக்தி மிக்க அலைகளாகும். ஆனால் அதே நேரத்தில், இச் சக்தியானது நெருக்கமாக உடலுடன் இணைக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது ஒரு உடல் மூலமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.  அதனால் நாம் பௌதீக சரீரத்தில் இருக்கும்போது மட்டுமே இதன் ஆற்றலை உணர்ந்து கொள்கிறோம். மற்றைய எந்த ஆற்றலுக்கும் இவ்வாறாக தம்மை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திக்கொள்ளும் சக்தி கிடையாது.

பல பிறவிகளாக, நம் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து கொண்டிருக்கும் எமது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் சக்தியானது பல முறை எம்மை தவறான பாதையிலும் இட்டுச் சென்றிருக்கிறது. எனவே தான் இவ்வாற்றலை நாம் முறையாகக் கட்டுப்படுத்தி, ஒருநிலைப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எமது உண்மையான பண்புகளான அமைதி, அன்பு, மகிழ்ச்சி மற்றும் சக்தி என்பவற்றை அனுபவம் செய்ய முடியும். இவ்வரிய நற்குணங்களை அடைவதற்கு நாம் பலமுறை பல வழிகளில் முயன்றிருந்தபோதும் மிகச் சரியான வழியை கண்டடையாததால் ஒவ்வொரு முறையும் தோல்வியையே அடைந்திருந்தோம். பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் பல ஆண்டுகளாக முயன்றும் இறுதியில் தோல்வியையே சந்தித்திருந்தனர். 

தியானமே இதற்க்கான மிகச் சரியான வழியாகும். தியானத்தின் மூலமே இவ்வாற்றலை ஒருநிலைப்படுத்தி எமது நிலையை உயர்த்திக் கொள்ள முடிவதுடன் எமது பௌதீக உடலிலும் பல நல்ல மாற்றங்களை உருவாக்கி இந்த பௌதீக உலகத்தில் எமது பாகத்தினை சரிவர வெற்றிகரமாக நடித்து முடிப்பதற்கும் உதவுகிறது. இதன் மூலம் எமது பௌதீக உறவுமுறைகளில் மட்டுமல்லாது பரமாத்மாவுடனான இணைப்பிலும் சுலபமான வெற்றியைப் பெறமுடியும்.




Watch Peace of Mind TV on following DTH 

TATA(Sky # 192 | Airtel Digital TV # 686 | Videocon d2h # 497 | Reliance BigTV # 171 | online www.pmtv.in


The Energy Of Thought And Feeling 

Like so many other energies like sound energy, light energy, electrical energy, etc. which are primarily invisible forms of energy and come under the realm of matter or the 5 elements, the energy of thought and feeling is also a form of invisible energy. The only difference is that it is an energy which transcends the limits of matter or the 5 elements and is metaphysical or non-physical and extremely subtle in nature. It is a living or conscient energy which originates from the conscient soul, as compared to the other energies which are non-living or non-conscient in nature. But at the same time, it is important not to forget that it is closely connected with the physical body and can only express itself through a physical body. The other energies cannot express themselves since they are non-living. Also, we perceive this energy only when we are inside the physical body. 


It is an energy which has kept going and going for as long as we have lived, life after life, in many wrong directions a lot of times. It is this energy which we need to learn to channelize, control, manage, discipline etc. because by doing that we experience our original virtues of peace, love, joy and power, which is our only and only desire, for which we use various different methods, but many times is not fulfilled, because we forget this basic and most important method. This is something which we have not been able to do since a long time, and something which a lot of people have desired to achieve since thousands of years. The technique of meditation is one technique which helps us in doing that. The channelization of this energy will also improve the state of our physical body as it has a positive effect on the various body systems, the quality of all roles that we play and the success we achieve while playing them and very importantly our relationships – not only with others but with our self and the Supreme Being or God also.