Thursday, November 13, 2014

ராஜயோக தியானம் : தொடர்பினை ஏற்படுத்துதல்


பேச்சின் ஒலிவடிவம் மற்றும் கண்களின் பார்வை போன்ற பௌதீக சக்திகளினால் இருவர் தொடர்பினை ஏற்படுத்தும்போது அதன் அடிப்படையில் இருப்பது எண்ணங்கள் மூலமான தொடர்பேயாகும். அங்கே உண்மையில் அவர்களின் எண்ணங்களின் இசைவாக்க தொடர்பாடலே நிகழ்கிறது. இதேபோன்று நாம் பரமதந்தையுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கும் எமது எண்ணங்களையே உபயோகப்படுத்துகிறோம். 

இதனாலேயே கீதையில் 'மன்மனாபவ' என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் உங்களின் மனதினை என்மீது ஒருமுகப்படுத்துங்கள் என்பதாகும்.

ஒரு பக்கம் பார்த்தால் இது மிக இலகுவானதாக தோன்றும். கடுந்தவம் மற்றும் வழிபாடுகள் என்று எமது பௌதீக உடலுக்கு எவ்வித கஷ்டங்களும் கொடுக்கவேண்டியதில்லை. நாம் செய்யவேண்டியதேல்லாமே எமது எண்ணங்களினை, மனதினை இறைவனை நோக்கித் திருப்புவதேயாகும். இத்தகைய மிக இலகுவான செயலே எமக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில் எமது எண்ணங்களினை எங்கே ஒருமுகப்படுத்துவது என்று எமக்குத் தெரியாது. அவற்றினை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்றும் தெரியாது.

இதனாலேயே தான் ஞானம் தேவைப்படுகிறது. நான் யார் என்று அறிந்து கொள்வதன் மூலம் ஆத்மாவானது எவ்வாறு எண்ணங்களை உருவாக்குகிறது என்று தெரியவருகிறது. பரமாத்மாவினைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் அவர்மீது எமது எண்ணங்களை ஒருமுகப்படுத்த முடிகிறது. ஞானத்தினையும் அன்பினையும் பெற்றுக்கொண்ட பின்னர் எமது எண்ணங்கள் மிக இயல்பாகவே பிறதிசைகளிளிருந்து விலகி பரமாத்மாவின்மீது ஒருமுகப்படுகிறது. 

ராஜயோகத்தின் ஆரம்பநிலையில் மனமானது மிகவும் தீவிரமாக பயன்படுத்தப்படுகிறது. இதுவே நிச்சயமாக மிகச்சிறந்த, இலகுவான, இயல்பான வழிமுறையாகும். மனதின் தொழிட்பாட்டினை நிறுத்துவதென்பது மிகவும் கடினமான ஒரு வேலையாகும். அது தேவையுமற்றது. 

எமது மனமானது தொடந்து வேலைசெய்து கொண்டிருப்பதற்குப் பழக்கப்பட்டுவிட்டது. ஒரு வாகனமானது அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது நாம் திடீரென்று அதனை நிறுத்துவோமேயானால், அது நிற்கும். ஆனால் இத்தகைய செயல்பாட்டினால் பழுதுகள் உண்டாகிவிடுவதும் சாத்தியமே. அதேபோலவே, தொடந்து ஓடிக்கொண்டிருப்பதற்குப் பழக்கப்பட்டுவிட்ட மனத்தினை திடீரென்று நிறுத்துவோமேயானால், அது மிகவும் சிரமமானதாக இருக்கும் அல்லது அது மிகக் குறுகிய காலத்திற்கே வெற்றியை அளிக்கும். மனமானது மீண்டும் வேறொரு திசையில் சென்று பின்பு மொத்தமாகவே அதனது கட்டுப்பாட்டினை நாம் இழந்துவிடுகிறோம்.  

அனுபவநிலை 

தந்தை எமக்கு மிக அழகான ஒரு முறையினை சொல்லித்தருகிறார். அதாவது, மனதினை ஓடவிடுங்கள். வெறுமனே அது செல்லும் திசையினை கட்டுப்படுத்துங்கள். புத்தியானது ஞானத்தினைக் கொண்டிருக்கும்போது, எமது எண்ணங்களானது சாதாரண பௌதீக செயல்களிலிருந்து விலகி "நான் யார்? எனது ஆதி பண்புகள் என்ன? எனது வீடு எது? எனது தந்தை யார்? அவருடனான எனது உறவுமுறை என்ன? அவரது பண்புகள் யாவை? அவர் எங்கு இருக்கிறார்? அவர் என்ன செய்கிறார்?" போன்ற உயர்ந்த சுயதேடல்சார்ந்த எண்ணங்களைக் கொண்டிருக்கும். 

இவ்வனைத்து கேள்விகளுக்கான விடைகளும் ராஜயோகதியானத்தில் தரப்படுகிறது. ஆத்மாவானது இக்கேள்விகளை மிக ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்குகிறது. ஞானத்தினை நன்றாக கடைந்து இவற்றிற்கான விடைகளை ஆத்மாவானது தெளிவாகக் கண்டுகொள்ளும்போது, அது மிக இயல்பாகவே பௌதீக உலகிலிருந்து சூட்சும உலகிற்கு சென்றுவிடுகிறது. பின்பு தியானம் மிக இயல்பாகவே நடக்கும்.

பரமாத்மாமீதான முழுமுக ஒருமைப்பாட்டினை நாம் அடைந்து மிக மிக ஆழமாகச் செல்லும்போது அவரின் பண்புகளை கண்டறிந்து, அவருடன் எமக்குள்ள பலவிதமான உறவுமுறைகளையும் அனுபவம் செய்கிறோம். உணர்வு நிலையுடைய எண்ணங்கள் இன்னும் தொழிட்படினும் அவையனைத்தும் ஆத்மீக ஞானத்தின் வேறெந்தப் பகுதிகளிலுமல்லாமல் தந்தை ஒருவரிடமே ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும். 

தியான நிலையின்போது ஆத்மீக ஞானத்தின் பல்வேறு பகுதிகள் எடுத்துக்கொள்ளப்படினும், ஒருமுகப்படுத்தும் நிலையில் நாம் பரமாத்மாவுடன் மட்டுமே தொடர்பில் இருக்கிறோம். எமது எண்ணங்கள் ஓடுவதை நிறுத்தி அமைதியாகின்றன. மனமானது அசைவற்று இருக்கும்போது பரமாத்மா எம்மிடம் பேசுவது கேட்கத் தொடங்கும். ஒருமுகப்படுத்தலின் ஒருகட்டத்தில் பரமாத்மா உண்மையில் எவ்வாறு இருக்கிறாரோ அவ்வாறே எம்மால் அவரை முழுவதுமாக அனுபவம் செய்ய முடியும். 

இதன்போது பரமாத்மாவின் பண்புகளால் நாம் முழுதாக நிரப்பப்படுகிறோம். அவற்றை கிரகித்து நாம் மாற்றமடைகிறோம். பின்பு அவற்றினை அகிலத்திற்கு பரப்பத் தொடங்குகிறோம். 

இப்போது எந்த உணர்வுள்ள நினைவுகளும் எம்மிடம் காணப்படாது. முற்றிலும் அனுபவநிலை நிறைந்திருக்கும். இந்நிலையிலிருந்து மீண்டு வந்ததும் எம்மால் அதை வகைப்படுத்த முடியும். எண்ணங்கள் மீண்டும் ஆரம்பிக்கின்றன. ஆனால் அத்தகைய அனுபவ நிலையில் எவ்வித என்ணங்களுமே காணப்படாது.







  


Wednesday, November 12, 2014

ராஜயோக தியானம் : வளர்ச்சிப் படிநிலைகள்


ராஜயோகமானது சமாத்வ (மனஅமைதி அல்லது உள்முகச் சமநிலை) யோகமாகும். பரம தந்தையுடனான தொடர்பில் நாம் இருப்பதனால் ஏற்றத்தாழ்வுமிக்க புற உலகின் செல்வாக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். இந்த தூய்மையற்ற கலியுகத்தின் எதிர்மறையான தாக்கத்திலிருந்து விடுபடுகிறோம். எமது எண்ணங்கள், புத்தி மற்றும் சம்ஸ்காரங்கள் அனைத்துமே பரமாத்மாவின் பண்புகளின் செல்வாக்கின்கீழ் மட்டுமே இருப்பதனால் உள்முகச் சமநிலை ஏற்படுவதுடன் எமது இருப்பின் முழுமையும் அதனைப் பிரதிபலிக்கிறது.

இங்கே விவரிக்கப்பட்டவை தவிர இன்னும் பல யோகமுறைகள் காணப்படுகின்றன. இருப்பினும் அவை அனைத்துமே ராஜயோகத்தினுள் உள்ளடங்குகின்றன. எனவே இந்த அதிமேன்மையான யோகமே எம்மை முற்றுமுழுதாக விருத்தி செய்வதற்கான, ஆத்மாவுக்கான யோகமாகும்.
   
ராஜயோகத்தின் வளர்ச்சிப் படிநிலைகள் பிரதானமாக மூன்று வகைப்படும். 

முதல் நிலை : தியானம் 
ராஜயோகத்தினது அடிப்படையானது பல யோகமுறைகளிலிருந்தும் வேறுபட்டதாகும். இதனது ஆரம்ப நிலை தியானம் என்றழைக்கப்படுகிறது. ஆனால் இந்த தியானத்தில் எவ்வித மந்திர உச்சாடனங்களோ, ஒலிகளோ அல்லது பௌதீக வடிவங்களோ பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக ஞானமே உபயோகிக்கப்படுகிறது. 

தியானத்தின் ஆரம்ப நிலையானது, 'நான் ஓர் ஆத்மா' என்ற நினைவில் மனதை நிலைக்கச் செய்வதாகும். அப்போது புத்தியானது சம்ஸ்காரத்தினுள் ஆழமாகச் சென்று சக்தி வாய்ந்த அமைதி மற்றும் தூய்மையை வெளிக்கொண்டுவரும். இதற்க்கு புத்தி வலிமை பெறவேண்டும். ஞானம் மட்டுமே போதாது. 

இரண்டாவது நிலை : ஒருமுகப்படுத்துதல் 
ஒருமுகப்படுத்துதல் என்றால் மனதை ஒரு எண்ணத்தில் நிலைக்கச் செய்தல். அச்சமயம் மனமானது அத்தகைய எண்ணத்தின் வடிவத்தினைப் பெறுகிறது. தியானத்தின் மூலம் பல்வேறு திசைகளில் செல்லும் எண்ணங்களானது நிறுத்தப்பட்டு மனம் ஒருமுகப்படுகிறது. இதன்போது புத்தியானது கூர்மையாகிறது. ராஜயோகியானவர், பௌதீக வடிவத்தில் தனது மனதினை ஒருமுகப்படுத்துவதை விடுத்து, பௌதீக உருவமற்ற அசரீரியான பரமாத்மாவுடன் இணைப்பினை ஏற்படுத்துகிறார். 

ஆரம்பத்தில் மனதை சில விநாடிகளுக்குமேல் ஒருமுகப்படுத்துவது கடினமாக இருக்கலாம். எண்ணங்கள் இலகுவில் சிதறி பல திசைகளில் மீண்டும் சென்றுவிடும். எனினும் ஒருவினாடி மட்டுமே ஒருமுகப்படுத்த முடிந்தாலும் அது மிகப்பெரிய வெற்றியேயாகும். ஏனெனில் அந்த ஒருவினாடியே தொடர்ந்து ஒருமுகப்படுத்தவேண்டும் என்ற வேட்கையை உருவாக்குகிறது. இதனை சோதனைசெய்து பார்க்கும் காலகட்டமாக எடுத்துக்கொள்ளலாம். இதன்போது கடந்தகால சம்ஸ்காரங்கள், மற்றும் உடலைப்பற்றிய எண்ணங்களும் வந்து இடையூறு விளைவிக்கும். எனினும் நாம் இவற்றை சாதகமாக எடுத்துக்கொண்டு பாதகமான எண்ணங்களை ஞானக்கருத்துகளை மனதில் கொண்டுவருவதன் மூலம் அகற்றமுடியும். 

மூன்றாவது நிலை : உணர்தல் 
ராஜயோக தியானத்தின் முழு நோக்கமுமே பரமாத்மா மீதான முழுமுக ஒருமைப்பாடு அல்லது தொடர்பினை ஏற்படுத்துதல் ஆகும். கடவுளின் உருவம் மற்றும் குணங்களின் மீது ஒருமுகப்படுத்தும்போது தியானத்துக்குத் தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தியாகின்றன. இந்த முழுமுக ஒருமைப்பாடானது உணர்தல் என அழைக்கப்படுகிறது. 

வேறு சில யோகங்களை பயிற்சி செய்யும் யோகிகள் கட்டாயத்தின் அடிப்படையில் எதிர்மறையான எண்ணங்களை வெளியேற்றி மனதினை வெறுமையாக வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள். இத்தகைய முறையில் மனமானது தற்காலிகமாகவே காலியாக இருக்கும்.  அத்துடன் எதிர்மறையான எண்ணங்களுடன் சேர்த்து நல்ல எண்ணங்களும் வெளியேற்றப்படுகின்றன. தூய எண்ணங்கள் ஆத்மாவுக்கு ஊட்டச்சத்து போன்றவை. இவை ஞானத்தினை நடைமுறையில் உணர்த்துகின்றன. மனமானது தூய சக்திவாய்ந்த எண்ணங்களின் ஓட்டத்தினை அனுபவம் செய்யும்போது, ஆத்மாவானது தூய குணங்களின் அனுபவத்தில் இருப்பது சாத்தியமாகிறது. 

மந்திரம் அல்லது பொருளை உபயோகித்தல்
ஒரு மந்திரத்தையோ அல்லது பொருளினையோ பயன்படுத்தி தியானம் செய்யுமிடத்து எம்மால் அதிக பட்சமாக, அந்த மந்திரத்தின் மீதோ அல்லது பொருளின்மீதோ தான் மன ஒருமுகப்பாட்டை அடையமுடிகிறது. இதனால் நாம் மிக நிச்சயமாக பரமாத்மாவுடனான தொடர்பை அனுபவம் செய்வததிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். இத்தகைய முறைகள் மூலம் எமது எண்ணங்களானது, எமது பௌதீக இருப்பு சார்ந்த, எமக்கு இதுவரை காலமும் துன்பத்தை வழங்கிய அல்லது குற்ற உணர்வுகளை ஏற்படுத்திய எண்ணங்களிலிருந்து விலகிவிடுவதனால் நாம் ஓரளவு மன அமைதியை பெறமுடியும். இருப்பினும் எமது எண்ணங்கள் குறித்த மந்திரத்தை அல்லது பொருளை நோக்கி இருக்கும் வரையில் மட்டுமே எம்மால் தியானத்தினை செய்யமுடிகிறது. எனவே தியான காலம் முடிவடைந்த பின்னர் நாம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடுகிறோம்.

ராஜயோக தியானமானது வெறுமனே மன ஒருமைப்பாட்டிற்கான பயிற்சியாக அல்லாமல், இறைவனுடனான தொடர்பினை பெறுவதை பிரதான நோக்கமாகக் கொண்டது. இறைவனுடன் எவ்வாறு தொடர்பினை ஏற்படுத்துவது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம். 






Friday, November 7, 2014

ராஜயோக தியானம் : ராஜயோகத்தில் உள்ளடங்கும் யோகமுறைகள்


ராஜயோகமானது முக்கியமானதாக முதலில் புத்தி யோகம் என்று கூறப்படலாம். ஏனெனில் இந்த யோகமானது அதிகளவில் புத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆத்மாவில் புத்தியானது ஞானத்தினைக் கிரகிக்கின்றது. எனவே ராஜயோகமானது ஞானயோகமாகவும் இருக்கிறது. புத்தியானது ஞானத்தினை உபயோகித்து பரமாத்மாவுடன் தொடர்பினை ஏற்படுத்தியவுடனேயே அவரை தாயாக, தந்தையாக மட்டுமல்லாது நண்பனாக, அன்புக்குரியவராக மற்றும் துணையாக அன்பினை வெளிப்படுத்துகிறது. எனவே இதில் பக்தி யோகத்தில் வெளிப்படுத்தப்படும் அன்பு இருக்கிறது. இத்தகைய அன்பு இல்லாமல் ஆத்மாவினால் பரமாத்மாவுடனான பூரணத்துவமான உறவுமுறை உருவாக முடியாது.

துறவு மூலமான யோகம்: பரமாத்மா மீதான இத்தகைய அன்பின் மூலம் ஆத்மாவானது இயல்பாகவே அனைத்திலிருந்தும் விலகி இறைவன் ஒருவரிடமே வந்துவிடுகிறது. எனவே ராஜயோகத்தினை சந்நியாச (துறவு) யோகம் என்றும் சொல்லலாம். ஆனால் இந்த துறவானது பௌதீகமானதல்ல. நாம் பௌதீகமாக ஒன்றினை துறந்துவிட்டு, மனதில் எந்நேரமும் அதனையே நினைத்துக் கொண்டிருந்தால் அதனை துறவு என்று சொல்லமுடியாது. அது வெறும் போலியான துறவேயாகும். எனினும், பரமாத்மாவினது அன்பினை அடையாளம் கண்டு அவரை நோக்கி எமது மனமானது கவரப்படுமேயானால், எமது எண்ணங்கள் மற்றும் புத்தியானது இந்த பௌதீக உலகத்தினது கவர்ச்சிகளிளிருந்து விடுபட்டுவிட்டது அல்லது அவற்றினை துறந்துவிட்டது எனலாம். இதுவே அதியுயர்ந்த, இயல்பான, எல்லையற்ற துறவாகும். 

கட்டுப்பாடு மற்றும் திடசங்கல்பத்தின் மூலமான யோகம்: ராஜயோகம் ஒரு ஹத யோகமுமாகும். ஹத என்றால் கட்டுப்பாடான ஒழுங்குமுறை அல்லது வலிமைமிக்க பயிற்சிமுறை என்பதாகும். ராஜயோகத்தில் ஆத்மாவினது ஆழமான புரிந்துணர்வினால், இயல்பான கட்டுப்பாடுகளும், வலிமை மற்றும் சக்தியும் வந்துவிடுகின்றன. இங்கே எவ்வித பௌதீகமான ஆசனங்களும் செய்யாதுவிடினும், ஆத்மாவானது கட்டுப்பாட்டில் இருப்பதனால் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல், தேவையான மனோரீதியான ஸ்திர நிலையில் நிலைத்திருக்கிறது.

ஹத என்றால் திடசங்கல்பம். ஆத்மாவினது திடசங்கல்பம் இல்லாது ராஜயோகம் கைகூடாது. இருப்பினும் இந்த திடசங்கல்ப்பமானது உள்முகமானது. உடலை பத்மாசனத்தில் வைத்திருப்பதற்குப் பதிலாக ராஜயோகியானவர் தனது மனதினை அந்நிலையில் வைத்திருக்கிறார். அதாவது தூய்மையற்ற இந்த பழைய கலியுகத்தில் வாழும்போதும், ஆத்மாவானது அவற்றினால் பாதிக்கப்படாமலும், தூய்மையற்றவற்றின் செல்வாக்கினுள் சென்றுவிடாமலும் தாமரை மலர் போன்று இருக்கிறது.

உடலுக்கு ஓய்வினை வழங்கும் சவாசனம் ராஜயோகத்தில் இல்லை. எனினும் ஆத்மாவானது தனது பௌதீக உடையான அதன் உடலிலிருந்தும், புலனுனர்வுகளிலிருந்தும் விடுபட்டு இருப்பதனால் அதனால் சவாசனத்தினை செய்வதனை விடவும் உயர்ந்த முழுமையான ஓய்வு நிலையை அனுபவம் செய்ய முடிகிறது. 

இவ்வாறாக, ராஜயோகத்தில் அனைத்தும் உள்முக வளர்ச்சிகுரியவையாக மாற்றப்பட்டு, அவற்றின் மேம்பாட்டின் மூலம் முழுதான சமநிலை பெறப்படுகிறது.


செயல்கள் மூலமான யோகம்: ராஜயோகம் ஓர் கர்மயோகமுமாகும் (கர்மம் என்றால் செயல்கள்). கர்மயோகமானது மூன்று வகைப்படும்.

முதலாவதாக, இது செயல்களை செய்துகொண்டே பயிற்சி செய்யும் யோகம். ராஜயோகம் என்பது வெறுமனே எமது அன்பான எண்ணங்கள் மூலமாக பரமாத்மாவுடனான தொடர்பினை ஏற்படுத்துதல் என்பதனால், பௌதீக ரீதியான ஆசனங்களோ, வேறெந்த பௌதீக உதவிகளோ அல்லது கருவிகளோ தேவையில்லை. எனவே நாம் எமது கைகளால் செயல்களைச் செய்துகொண்டிருக்கும்போதே எமது எண்ணங்களை பரமாத்மாவுடன் இணைத்து முழுமையான யோகத்தில் இருக்க முடியும்.

நடக்கும்போதும், பேசும்போதும், இருக்கும்போதும், உண்ணும்போதும், இன்னும் வேறெந்த செயல்களில் நாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதும் கூட எமது எண்ணங்கள் அன்புக்குரிய பரமாத்மாவுடன் இணைந்திருக்கின்றன. எனவே இந்த யோகமே அனைத்து செயல்கள் செய்யும்போதும் தொடர்ந்தும் நிலை மாறாமல் செய்யக்கூடிய ஒன்றாகும்.

இரண்டாவதாக, கர்மயோகத்தினை எமது கர்மங்களின் (செயல்களின்) வெளிப்பாடு என்றும் சொல்லலாம். பரமாத்மாவுடனான எமது தொடர்பானது எம்மை அன்பு, அமைதி, தூய்மை, என்பவற்றினால் நிரப்புகிறது. எனவே எமது செயல்கள் இந்நிலையின் (யோகி நிலையின்) வெளிப்பாடாகவே இருக்கும். செயல்களானது மாற்றமடைந்து தூய்மை நிறைந்ததாகவும், அமைதி மற்றும் அன்பினை பரப்புபவனவாகவும் இருக்கும்.

மூன்றாவதாக, கர்மயோகமானது எமது யோகத்தினை வலுவூட்டும் ஒரு செயல் (கர்மம்) ஆகும். அதாவது இதன் மூலமாக நாம் பரமாத்மாவுக்கு மிக அருகில் வருகிறோம் அல்லது பரமாத்மாவுடனான எமது இணைப்பு மிகவும் வலிமை பெறுகிறது. மனிதர்களுடனான கர்ம பரிமாற்றங்கள் (கொடுக்கல் வாங்கல்) மூலமாக உறவுமுறை உருவாகிறது. அதேபோல் இறைவன் மீதுள்ள அன்பினால், அந்த அன்பின் மூலம் செய்யப்படும் செயல்கள் எமது யோகத்தினை வலிமையாக்குவதுடன், எம்மை இறைவனுடன் மிக நெருக்கத்தில் கொண்டு சேர்க்கிறது. எனவே ராஜயோகம் ஓர் உண்மையான கர்மயோகமுமாகும்.




Tuesday, November 4, 2014

ராஜயோக தியானம் : யோகமுறையை தெரிவுசெய்தல்

பல வகையான யோக முறைகள் இருப்பதனால், அவரவர் சுபாவத்திற்கு ஏற்ற யோகமுறையை தேர்ந்தெடுத்து பின்பற்றுவது நல்லது என்று கூறப்படுகிறது. இந்த கூற்றானது எவ்வளவு தூரம் சரியானது என்று பார்ப்போம்.

அன்பு மற்றும் பக்தி மூலமான யோகம் : ராஜயோகம் என்றால் ஆத்மாவின் பூரணவிருத்தி ஆகும். நாம் பக்தி மார்க்கத்தினை தேர்வுசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகையில் இறுதி விளைவு என்னவாக இருக்கும்? பக்தி மூலம் பரமாத்மா மீதான அன்பு வெளிப்படுத்தப்படுகிறது, அதேபோல் பரமாத்மாவினது அன்பும் உணரப்படுகிறது. பணிவு வருகிறது. ஆனால் ஆத்மாவிற்கு அன்பு மட்டுமே போதுமானதல்ல, மேலும் அதிகளவிலானவை தேவைப்படுகின்றன.

எமது ஆத்மாவில், அன்பினுடைய, உணர்ச்சிகள் என்ற அம்சம் மட்டுமே விருத்தியாக்கிக்கொண்டு போகுமேயானால், எமது நடத்தைகள் ஆபத்தான பாணியில் விருத்தியாக்கிக்கொண்டு செல்லும். எனவே பரமாத்மா மீது அன்பு செலுத்துவது மட்டுமல்லாது, அவரது அறிவுறுத்தல்களை பின்பற்றுவதற்கும், வாழ்க்கைக்கு அவசியமான வழிகாட்டல்களுக்கு கீழ்படிந்து நடப்பதற்கும் அவரைப்பற்றி அறிந்திருப்பதும் அவசியமாகிறது. எனவே நாம் தனியே பக்தியோகியாக இருப்போமேயானால் அன்பு விருத்தியாகும். ஆனால் எவ்வித புரிந்துணர்வோ மெய்ஞானமோ காணப்படாது. இதனால் ஆத்மாவானது வலிமையற்றிருக்கும். 

கற்றல் அறிவு மூலமான யோகம் : ஞானயோகம் என்றழைக்கப்படும் கற்றல் அறிவு மூலமான யோகமும் எமக்குத் தேவையானதே. இந்த அறிவின் மூலமே புறத்தூண்டுதல்களிலிருந்து எம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.  

மெய்ஞானத்தின் ஆழமான உணர்தலின் மூலமான புத்தி யோகம் : இறைவன் மீது அன்பு மட்டுமே உள்ளபோது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட கணத்தில் இருக்கும் எமது பக்தி உணர்வினைவிட அதிகமான வலிமையுள்ள ஏதாவது சலனத்தினால் எமது யோகமானது குழப்பப்படுவது சாத்தியமே. ஆனால் ஞானத்தினது ஆழமான உணர்தல் மூலமான யோகத்தின் மூலம் ஆத்மாவானது தடைகள், சிரமங்கள் மற்றும் சலனங்களை இலகுவில் அடையாளம் கண்டு அவற்றில் சிக்காமல் உறுதியான யோகத்தில் நிலைத்திருக்க முடிகிறது. ஞான யோகமானது புத்தி யோகத்துடன் தொடர்புடையதாகும்.

யோகங்களின் சமநிலை: ஞானயோகம் மற்றும் புத்தியோகம் என்பன தனித்த யோகங்களாகும். இவற்றினை மட்டுமே பின்பற்றும் ஒருவரிடம் அகந்தை மற்றும் அராஜகம் என்பன விருத்தியாகி பூரணத்துவமான ஆளுமை விருத்தி ஏற்படாமல் போகலாம். முழுமையான ஆளுமை விருத்தியில் அன்பு மற்றும் நெறிமுறைகள் சரியான அளவில் கலந்திருக்கும். அதாவது நெறிமுறைகளினால் வழிப்படுத்தப்பட்ட அன்பாகவும், இனிமை மற்றும் அன்பு கலந்த நெறிமுறைகளாகவும் இருக்கும். எனவே முழுமையான சமநிலைப்படுத்தப்பட்ட ஆளுமை விருத்திக்கு இவையிரண்டும் அத்தியாவசியமாகிறது.

பக்தி மூலமாக எமது சுபாவத்தில் இனிமை விருத்தியாகிறது. அதேபோல் ஞானத்தின் மூலமாக ஆத்மாவில் வலிமை விருத்தியாகின்றது. எனவே எனது யோகத்தினை பகுதிகளாகப் பிரித்துவிட்டு அதில் ஒன்றைத்தான் தெரிவு செய்யவேண்டும் என்று சொல்லமுடியாது. மாறாக, இவையிரண்டும் சேர்ந்ததாகவுள்ள ஒரு யோகத்தினை நாம் தெரிவுசெய்ய வேண்டும். ராஜயோகமானது இவையனைத்து யோகங்களையும் ஒரே கட்டமைப்புக்குள் உள்ளடக்கியிருக்கிறது.

பக்தி, ஞானம், புத்தி யோகங்களைத் தவிர மேலும் மூன்று பிரதான யோகமுறைகளையும் ராஜயோகமானது உள்ளடக்கியிருக்கிறது. அவற்றினை அடுத்த பதிவில் பார்ப்போம்.







Monday, November 3, 2014

ராஜயோக தியானம் : குறிக்கோள்

'ஓம் சாந்தி' என்பதன் அர்த்தம், 'நான் ஓர் அமைதியான ஆத்மா' என்ற விழிப்புணர்வு, என்பதை முன்னமே பார்த்திருந்தோம். ராஜயோகத்தினது சாராம்சம் இதுவேயாகும். ராஜயோகமானது பரமதந்தையினால் மானிட கருவியாகிய பிரஜாபிதா பிரம்மாவினூடாக கற்பிக்கப்பட்டதாகும்.

ராஜயோகம் என்பது பல நூற்றுக்கணக்கான வருடங்களாக வழக்கத்தில் இருந்த போதிலும், கீதையை போதித்தவரும் கீதையின் கடவுளுமாகிய இறைவனால் பயிற்றுவிக்கப்பட்ட ஆதியான ராஜயோகமானது மனிதகுலத்திலிருந்து அழிந்துவிட்டது.  எனவே தான் எம்மால் அதியுயர்ந்த இணைப்பினை, உண்மையான யோகத்தினை அனுபவம் செய்யமுடியாமல் இருக்கின்றது. கீதையில் இறைவனால் வழங்கப்பட்ட "எப்போதெல்லாம் அதர்மம் தழைத்தோங்குகிறதோ அப்போது, அதர்மத்தினை அழித்து தர்மத்தினை நிலைநாட்ட நான் அவதரிக்கிறேன்.  ராஜயோகத்தினை கற்பிக்க வருகிறேன்." என்ற வாக்குறுதியின்படி இந்தக் கல்வியானது அவரால் மீண்டும் தரப்படுகிறது. 

குறிக்கோள்: ராஜயோக கல்வியினது நோக்கம் சம்பூர்ணநிலையை அடைதலாகும். இது வெறுமனே ஒரு சிறிய மாற்றத்திலோ அல்லது ஒருமனிதனை சற்றே மேம்பட்ட நிலைக்கு கொண்டுசெல்வதிலோ அல்ல. மாறாக இதன் குறிக்கோளும், வரைவிலக்கணமுமே முழுதான பூரணத்துவமாகும். எனவேதான் இது அனைத்து விதமான கல்வியை விடவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. தெய்வீகத்தன்மை நிறைந்ததாக இருந்த ஆத்மாவானது, தற்போது அதனை இழந்துவிட்டது. ஆனால் அதனை மீண்டும் ஆத்மாவால் பெற்றுக்கொள்ள முடியும். எனவே ராஜயோகமானது ஆத்மாவுக்கானது. இந்த தியான முறையினால் ஒருவரின் நடத்தையில், குணத்தில், சம்ஸ்காரங்களில் மாற்றம் ஏற்படுகின்றது. இதன் மூலம் பல காலமாக ஆத்மாவில் பதியப்பட்டு வந்த தீய பண்புகள் அகற்றப்படுவதனால், ஆத்மாவினது ஆதியான தெய்வீகத்தன்மை மீண்டும் பிரகாசிக்கத் தொடங்குகிறது.

முறை: பரமாத்மாவுடனான இணைப்பே, ராஜயோகத்தினது குறிக்கோளாகிய சம்பூர்ண நிலையை அடையும் வழிமுறையாகும். மனிதர்களுடனான அல்லது தீர்க்கதரிசிகளுடனான அல்லது இறைதூதர்களுடனான தொடர்பின் மூலம் நாம் எமது அதியுயர்ந்த நிலையை அடைய முடியாது.  மாறாக, பரமாத்மாவுடனான தொடர்பின் மூலம், எமது குறைபாடுகளை நீக்குவதற்கான வலிமையை பெற்றுக்கொள்வதுடன், பரிபூரண நிலையை அடைவதற்குத் தேவையான அனைத்து தெய்வீக குணங்களை கிரகிக்கக் கூடிய ஆற்றலினையும் பெற்றுக்கொள்கிறோம்.

சம்பூர்ண நிலை (கர்மாதீத் நிலை)

கர்மாதீத் நிலை என்பது, விகாரங்கள் எதுமற்ற, திவ்யகுணங்கள் நிறைந்த, வன்முறையற்ற, தெய்வீக பண்புகள் நிறைந்த நிலையாகும். அதியுயர் ஒழுக்க நெறிகளை பின்பற்றி ஆத்மாவானது இந்த நிலையை அடைகிறது. பரம தந்தையினால் கற்பிக்கப்படும் ஞானத்தினாலும், தியான முறையினாலும் இது சாத்தியமாகிறது.

யோகம் என்றால் இணைப்பு என்று அர்த்தம். எனவே ராஜயோகம் என்றால் பரமாத்மாவுடனான இணைப்பு என்று அர்த்தம். இது அனைத்து தொடர்புகளையும் விட அதியுயர்ந்த தொடர்பு என்றும் அர்த்தமாகிறது. இந்த யோகத்தின் மூலம் ஆத்மாவானது தான் இழந்துவிட்ட தனது அதியுயர் ஸ்தானத்தினை திரும்பப் பெறுகிறது. எமது மனதிற்கு, எமது புலன்களுக்கு, எமது நடத்தைகளுக்கு என்று, எமக்கு நாமே அதிபதியாவதால் எமக்கு விருப்பமான பாதையில் எம்மை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. ஆத்மாவானது புற நிகழ்வுகளாலும், புறக் காரணிகள் மற்றும் மனிதர்களாலும் ஆட்டுவிக்கப்பட்டு திசைதிருப்பப்படாமல், தனது இலக்கினை தெளிவாகக் காண்கிறது. அதுமட்டுமல்லாமல் அதனால் தனது குறிக்கோளை நோக்கி திடசங்கல்ப்பத்துடன் சென்று இறுதி இலக்கினை இலகுவாக அடையமுடிகிறது.

ராஜயோகமானது அதியுயர்ந்ததாக இருக்கும் அதேவேளையில், மிகவும் சிரமாமானதாகவும் உள்ளதாக சில சமயங்களில் எம்மால் உணரப்படுகிறது. எதுவுமே உண்மையிலிருந்து அப்பால் செல்லமுடியாது. ஏனெனில் ராஜயோகமானது எமது உண்மை நிலையினது இயல்பான விழிப்புணர்வாகும். இது எவ்வாறு சிரமாயிருக்க முடியும்? ராஜயோகமானது வெகு இயல்பானது. தந்தையுடனான அன்புநிறைந்த தொடர்பு. அன்பான தந்தையுடனான தொடர்பானது எவ்வாறு சிரமமானதாக இருக்க முடியும்?

எனினும் சரியான புரிந்துணர்வு அல்லது தெளிவான ஞானம் இல்லாத காரணத்தினால் சுய அடையாளத்தை பற்றிய மற்றும் எமது தந்தையைப் பற்றிய குழப்பங்கள் உருவாகின்றன. அப்போது யோகம் சிரமமாகிறது. ஆனால் எமக்கு இவற்றினைப்பற்றி தெளிவான அறிமுகம் இருக்கும் போது எம்மால் அதன் அடிப்படையில் தொடர்பினை இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. இந்த உறவுமுறையில் நன்மைகளை அனுபவம் செய்யும்போது தொடர்பானது ஆழமாகி சம்பூர்ண இணைப்பு மற்றும் நல்லிணக்கம் உருவாகி, ஆத்மாவானது பரமாத்மாவினது பிரதியாக ஆகிறது. பரமாத்மாவின் பண்புகளுடன் அது மீளுருவாக்கம் அடைகிறது.





Thursday, October 30, 2014

ராஜயோக தியானம் : Meditation - Supreme Communication

தியானத்தில் அமர்ந்திருக்கும்போது, கீழ்க்கண்ட எண்ணங்களை சிந்தனையில் கொண்டுவந்து, அவற்றிலிருந்து சக்தியை பெற்றுக்கொள்வதனை அனுபவம் செய்யவும்.

தியானத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட எண்ணங்கள்
நான் ஓர் ஆத்மா என்ற விழிப்புணர்வில் இருக்கிறேன்.. நான் புருவமத்தியில் இருக்கும் மிகச்சிறிய ஒளிநிறைந்த புள்ளியாவேன்.. எனது எண்ணங்கள் இந்த உடலுக்கு அப்பால்.. பௌதீக உலகத்துக்கும் அப்பால் சென்று.. மகத்தான ஒளிநிறைந்த பகுதியை அடைகிறது.. அங்கே முழுமையான அமைதியும்.. ஸ்திரத்தன்மையும் இருக்கிறது.. இதுவே எனது வீடாகும்.. 
நான் இப்போது சிவபாபாவின் முன்னால் இருப்பதை உணர்கிறேன்.. ஒளிநிறைந்த புள்ளி வடிவான பாபாவிலிருந்து ஒளியானது கடல் போல எங்கும் பரவுகின்றது.. நான் அந்த ஒளியை எனக்குள் உள்வாங்கிக் கொள்கிறேன்.. பாபா அமைதிக் கடலாவார்.. நான் அந்த அமைதியின் அலைகளை உணர்கிறேன்.. அவை இதமாக.. குளிர்மையாக.. ஆத்மாவை அமைதிப்படுத்துகிறது.. அந்த அமைதியே எனது இயல்பு நிலையாகும்..  
நான் ஆரம்பத்தில் இவ்வாறே இருந்தேன்.. இனிமேல் எப்போதும் இவ்வாறே இருப்பேன்..  
எல்லாம் வல்லவர் தனது சக்தியால் என்னை நிரப்புகிறார்.. பலகீனமான ஆத்மா இப்போது மாற்றமடைந்துவிட்டது.. இப்போது நான் வலிமை.. சக்தி.. அமைதி.. ஒளி.. வல்லமை.. தூய்மை.. பேரானந்தம்.. என்பவற்றின் சொரூபமாகிவிட்டேன்..  

பயனுள்ள முறை : இரவில் எமது கடைசி எண்ணங்களாக எது இருக்கிறதோ, அதுவே காலையில் எமது முதல் எண்ணங்களாகவும் இருக்கும். எனவே இரவு தூங்கப்போகுமுன்பு எமது எண்ணங்களை, தியானத்தின் மூலம் பரமாத்மாவுடன் இணைத்துவிட்டோமேயானால், தூக்கத்தில் அமைதி நிலைத்திருக்கும். 

அதேபோல், காலையில் எழுந்தவுடன் வரும் முதல் எண்ணங்களே அன்றைய நாளுக்கான அடித்தளத்தினை இடுகின்றன. எனவே வழமையாய் எழும்பும் நேரத்தை விட சில நிமிடங்கள் முன்பாக எழுந்து, தியானத்தின் மூலம் பரமாத்மாவிடமிருந்து சக்தியை பெற்றுக்கொண்டோமேயானால், ஆத்மாவினால் அன்றைய தினத்தினை இலகுவாகவும், அன்பு நிறைந்ததாகவும் கழிக்க முடியும். 

இதனை தினசரி சோதனை செய்து விளைவினை அறிந்து கொள்ளலாம்.

மீட்டல் : கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கு முன்னர், 'நான் யார்?' என்பதை நினைவுகூருவதன் மூலம் எமது புத்தியை தெளிவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் ஏற்படும் வித்தியாசத்தினை பலர் உணர்ந்துள்ளனர். 

வினாக்கள் 

1. பரமாத்மாவின் வடிவம் என்ன? சிவா என்ற பெயரின் பொருள் என்ன?
2. பரமாத்மாவுக்கும் ஆத்மாவுக்கும் இடையேயான வேறுபாட்டினை விளக்குக?
3. இறைவன் சர்வவியாபியாக இருக்க முடியாது என்பதற்கான காரணங்கள் சில?
4. மூவுலகம் என்பதன் பொருள் யாது?








Tuesday, October 28, 2014

ராஜயோக தியானம் : பரமாத்மா எங்கும் நிறைந்தவரா?

பரமாத்மாவினை சின்னஞ்ச் சிறிய புள்ளியாக, நிலையான வடிவம், இருப்பிடம் கொண்டவராக கருதுவதென்பது சற்றே அந்நியமாகத் தோன்றலாம். இறைவனானவர் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பவர், அதாவது சர்வவியாபி என்பது,  கிழக்கு மற்றும் மேற்கத்தைய நாடுகளில் பரவலாக இருக்கும் ஒரு வலுவான கொள்கையாகும். இதனோடு தொடர்புபட்ட சில கருத்துக்களை இப்போது ஆராய்வோம்.

பரமாத்மாவானவர் எங்கும் வியாபித்திருப்பவர் எனில் அவரது பண்புகளும் அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்க வேண்டுமல்லவா? அவ்வாறெனில் உயிருள்ளவற்றிட்கும் உயிரற்றவைக்கும் எவ்வித வித்தியாசமுமிருக்காது. ஏனெனில் அனைத்துமே நிச்சயமாக பரமாத்மாவின் பண்புகளை பிரதிபலிப்பனவாக இருக்கும். பாவச்செயல்கள், தூய்மையின்மை, அமைதியின்மை போன்றவை இல்லாமல் பரமாத்மாவின் பண்புகளான அன்பு, தூய்மை, ஞானம், அமைதி மற்றும் பேரானந்தம் போன்றவை மாத்திரமே வெளிப்படுத்தப்படும். 

ஆத்மாவானது அறியாமையினால் சூழப்பட்டதனால் தான் இறைவனது பண்புகளை கிரகிக்க முடியவில்லை எனில், எனக்குள் இறைவன் இருக்கிறார் எனும்போது அறியாமை எங்கிருந்து வரமுடியும்? என்ற கேள்வி எழுகிறது. பரமாத்மாவிடம் அறியாமை வந்துவிட்டது என்பதை நான் குறித்து நிற்கவில்லையா? 

பரமாத்மாவாவை எல்லையற்ற சமுத்திரம் எனவும் ஆத்மாக்களை அதன் துளிகள் எனவும், சமுத்திரம் பின்னர் அத்துளிகளை இணைத்துக்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது. எனில் சமுத்திரத்தினது துளிகள் அனைத்தும் சமுத்திரத்தின் அதே கூறுகளையும், பண்புகளையும் கொண்டிருக்கவேண்டியதும் அவசியமானதாகிறது. 

இப்போது பரமாத்மாவை ஒரு இடத்தில் இருப்பவராகவும், அவரது பண்புகள் அவ்விடத்திலிருந்து வெளிப்படுவதாகவும் கருதுவோம். நாம் இப்போது எவ்விடத்திலிருந்தாலும் எமது எண்ணங்களை அவரிடம் வழிப்படுத்தும்போது, அந்த அதிர்வலைகளை எம்மால் பெற்று, தொடர்பினை அனுபவம் செய்ய முடியும். ஒரு வானொலி நிலையத்திலிருந்து அனைத்து இடங்களுக்கும் வானலை பரவுகிறது. எங்கே ஒலிவாங்கி சரியான அலைநீளத்தில் அல்லது மீடிறன் ஒத்திசைவில் வைக்கப்பட்டிருக்கிறதோ அங்கே அந்த வானலைகளை பெறமுடிகிறது. எமது அன்றாட வாழ்வில் ஏன் இதுவரை எம்மால் பரமாத்மாவை அனுபவம் செய்ய முடியவில்லை என்பதற்கான சரியான விளக்கம் இதுவே. 

எமது மனமானது, எம்மைச் சுற்றியுள்ள பௌதீக பொருட்களின் மீதும் செயல்பாடுகளின் மீதும் ஒத்திசைவில் வைக்கப்பட்டுள்ளதால், எம்மால் பரமாத்மாவினது அதிர்வலைகளை பெற முடியவில்லை. நாம் வேறோர் அலைநீளத்தில் இருக்கிறோம். எமது எண்ணங்கள் பௌதீகத்திலிருந்து, ஆத்மவுணர்வு நிலைக்கு நகருமாயின், எம்மால் அந்த அதிர்வலைகளை பெறுவது இலகுவாகி, அவற்றின் மூலம் எமது தந்தையாகிய சிவபாபாவுடன் தொடர்பேற்படுத்தி அனுபவம் செய்ய முடியும். 












Monday, October 27, 2014

ராஜயோக தியானம் : பரமாத்மாவின் இருப்பிடம்


நாம் உறவுமுறை ஏற்படுத்திக்கொள்ளவிருக்கும் ஒருவரின் பெயரை அறிந்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அவர்கள் எங்கிருக்கிறார்கள்? வசிப்பிடம் என்ன? என்பவற்றை அறிந்திருப்பதும் அவசியமானதே. அதேபோல் இறைவனுடனான உறவுமுறையை ஏற்படுத்துவதற்கு, அவரது இருப்பிடம் பற்றி துல்லியமாக அறிந்திருப்பதன் மூலம் எமது மனதினை அவரின் பக்கம் திசை திருப்ப முடியும்.


மூவுலகம்

நாம் வசிக்கும் இந்த பௌதீக உலகமானது ஸ்தூல உலகம் எனப்படுகிறது. ஏனெனில் இங்கு வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஸ்தூல வடிவமுண்டு. வரலாறு, புவியியல் போன்ற சொற்பதங்கள் இந்தப் பௌதீக உலகத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆராய்ச்சி மூலம் பெறப்பட்ட விஞ்ஞான விதிகளும், சடப்பொருட்களின் பண்புகளும் இங்கேயே பொருந்தும்.

இந்த பௌதீக உலகமானது செயல்பாடுகளுக்கான இடமாகும். இது ஒரு சுழற்ச்சி முறையில் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகிறது. இங்கே மனிதர்கள் புறக் காரணிகளால் தூண்டப்பட்டு செயல்களை ஆற்றுவதன் மூலம் சந்தோசத்தினை அல்லது துக்கத்தினை அனுபவம் செய்கின்றனர். அதனாலேயே இவ்வுலகமானது, செயல்கள் எனும் விதைகள் விழுந்து பழம் (பலன்) கிடைக்கும் நிலத்திற்கு ஒப்பிடப்படுகிறது.

இந்த பௌதீக உலகத்தில் நடைபெறும் செயல்பாடுகளை நாடகமேடைக்கு ஒப்பிடுவது, கிழக்கில் மட்டுமல்ல மேற்கத்தைய நாடுகளிலும் காணப்படுகிறது. ஆத்மாவாகிய நடிகர், பௌதீக உடல் என்னும் ஆடையை எடுத்து, தனது கதாபாத்திரத்தினை உலக மேடையில் நடிக்கிறார். எல்லையற்ற இந்த நாடகத்தில் முடிவற்ற விதவிதமான கதாபாத்திரங்கள் நடிக்கின்றன. இதே உலகம் தான், பூரணத்துவம் மிக்க சொர்க்கம் என்றழைக்கப்படும் சத்திய மற்றும் திரேதா யுகங்களையும், ஒழுங்கின்மை மற்றும் சீரழிவு மிக்க நரகம் என்று கருதப்படும் துவாபர மற்றும் கலியுகங்களையும் கடந்து செல்கிறது. இவ்வுலகம் மொத்த பௌதீக வெளியின் மிகச் சிறிய பகுதியாகும்.

சடப் பொருள்களாலான, இந்த பௌதீக உலகத்தினைத் தாண்டி இருப்பது ஒளிநிறைந்த சூட்சும உலகம் ஆகும். படத்தில் காட்டப்பட்டது போல், நடுவே, குறிப்பாக மூன்று வேறான நிற ஒளிகளில் காணப்படுகிறது. இங்கே எண்ணம், அசைவு மற்றும் செயல்கள் உண்டு. ஆனால் ஒலி இல்லை.

இவையனைத்தையும் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது. நேரம், தூரம் போன்ற பௌதீக வரையறைகளை தாண்டி இருக்கும் இந்த உலகத்தினை, பௌதீகமல்லாத ஆத்மாவின் சக்திகளான மனம் மற்றும் புத்தியினால் மட்டுமே அனுபவம் செய்ய முடியும். பௌதீக கருவிகளின் துணைகொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளால் இந்த உலகத்தினை அடையாளம் காணமுடியாது. செம்பொன் நிறமான தெய்வீக ஒளிநிறைந்த, ஆறாவது தத்துவமாகிய பிரம்மம் என்றழைக்கப்படும் இடமாகும். இவ்வுலகத்தினது நிலை, ஒருபோதும் மாற்றத்திற்குள்ளாகாது. இங்கு அசைவுகளோ சத்தமோ இல்லை. இங்கே நிறைவான அமைதி, நிசப்தம், தூய்மை காணப்படுகிறது. ஆத்மாவானது இங்கு செயலற்ற நிலையில் இருக்கிறது. எண்ணங்கள் மற்றும் சுபாவங்கள் அனைத்தும் விதையினுள் அமிழ்த்தப்பட்டிருக்கும். இங்கே ஆத்மாவானது உடலிலிருந்து தொடர்பற்று, தனது மூல வடிவமாகிய ஒளிநிறைந்த ஆற்றலாக இருக்கும். இது செயலற்ற, புற தூண்டல்கள் எதுவுமற்ற, ஓய்வு நிலையிலுள்ள இன்னொரு தளமாகும். அனைத்து ஆத்மாக்களும் முக்தியடைந்தவுடன் இந்த இடத்தில் பரமாத்மாவுடன் சிலகாலம் தங்கியிருப்பர். இதுவே அனைத்து ஆத்மாக்களினதும் வீடாகும். இங்கிருந்தே அனைத்து ஆத்மாக்களும் வருகிறார்கள். இங்கேயே இறுதியில் அனைத்து ஆத்மாக்களும் செல்கின்றனர். இதுவே பரமாத்மாவாகிய சிவபாபாவினதும் இருப்பிடமாகும்.

ராஜயோகியானவர், தனது மனதினை இந்த பௌதீக உலகத்திலிருந்து திருப்பி தந்தையின் இருப்பிடமான பரந்தாமத்துக்கு வழிப்படுத்துவதன் மூலம் முழுமையான அமைதியை அனுபவம் செய்கிறார்.










Saturday, October 25, 2014

ராஜயோக தியானம் : பரமாத்மாவின் பண்புகள்


இந்த பூமியையே காகிதமாகவும், சமுத்திரத்தை மையாகவும், மரங்கள் அனைத்தையும் இறகாகவும் மாற்றினாலுமே இறைவனினது முழு பண்புகளையும், மகிமைகளையும் எழுதிமுடிப்பது சாத்தியமல்ல என்று சொல்லப்படுகிறது. எனினும் சில குறித்த சிறப்பியல்புகளை புரிந்து கொள்வதற்காக, அன்பு, அமைதி, தூய்மை, பேரானந்தம் மற்றும் சக்தி போன்ற குறிப்பிட்ட பண்புகளை எடுத்துக்கொள்வோம். தியானத்தில் எமது எண்ணங்களை பரமாத்மாவிடம் ஒருமுகப்படுத்தும்போது, ஆத்மாவானது பரமாத்மாவின் இந்த குணங்களால் நிரப்பப்டுவதை அனுபவம் செய்யமுடியும். ஆத்மாவானது அவற்றை தனக்குள் உள்வாங்கி இறுதில் முழுவதுமாக மாற்றமடைகிறது.

நாம் இறைவனை அனைத்து ஆத்மாக்களின் தந்தையாக ஏற்கனவே அடையாளம் கண்டுகொண்டோம். ஆனால் அனைத்து தகமைகளையும் தன்னகத்தே கொண்ட ஒளிப்புள்ளியாகிய பரமாத்மாவை தாயாகவும், தந்தையாகவும் அனுபவம் செய்வதும் சாத்தியமே. 'அவன்' என்ற வார்த்தை தந்தைக்குரிய பாத்திரத்தினை மிக அழுத்தமாக பதிந்தாலுமே, ஒரு தாய்க்குரிய அன்பினையும், கருணையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறார். தவிர, பரமாத்மாவிடம் அனைத்து தகமைகளும் காணப்படுவதனால், அவரை பலவிதமான பாத்திரங்களில், உறவுமுறைகளில் அனுபவம் செய்யமுடியும்.

இறைவனுடனான தொடர்பென்பது, அவர் மிகநுண்ணிய ஒளிப்புள்ளி என்ற விழிப்புணர்விலேயே சாத்தியமாகும். மனதை ஒரு பெரும்பரப்பில் ஒருமுகப்படுத்துவதென்பது சாத்தியமற்றது. முழு உருவத்தினையும் காணும்போது, மனமானது, கண் மற்றும் மூளையுடன் இணைந்து, முழு காட்சிகள் கொண்ட ஒரு படத்தொகுப்பையே உருவாக்கி விடுகின்றது. எனவே ஒரு பொருளின் மிகச்சிறிய பாகத்தில் தான் மனதை முழுதாக ஒருமுகப்படுத்த முடியும். பரமாத்மாவுடன் இணைப்பினை அனுபவம் செய்யவிரும்பும் ஓர் ஆத்மா, அவரை மிகச்சிறிய ஒளிப்புள்ளியாக காண்பதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்துவது சாத்தியமாவதுடன் அவருடன் இணைதலையும் அனுபவம்செய்ய முடிகிறது. இதன் மூலம் உறவுமுறை  கட்டியெழுப்பப்படுகிறது.

பரமாத்மாவின் பெயர்: மிக நெருங்கிய தொடர்பிலுள்ள ஒருவரின் பெயரை நாம் அறிந்துவைத்திருப்பது வழமையானதே. உலகத்தில் எத்தனை மொழிகளுண்டோ அத்தனை பெயர்களால் இறைவன் அழைக்கப்படுகிறார். அவை அனைத்தும் ஒரு சிறப்புப் பொருள்கொண்டதாகவோ பண்பை உணர்த்துவதாகவோ இருக்கிறது. ஆனாலுமே "சிவா" என்ற நாமமானது பலபொருள்  கொண்டதாகவும், உலகனைத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது. 'சிவா' (Shiva) என்ற சொல்லுக்கு நன்மையளிப்பவர், புள்ளி மற்றும் விதை என்று மூன்று பிரத்தியேக பொருளுண்டு. 

சிவா என்ற சொல்லிலேயே இறைவனது முக்கிய பண்புகளை எம்மால் காணமுடியும். அவர் நன்மையளிப்பவர், அன்பான தந்தை, மிகச்சிறிய ஒளிநிறைந்த புள்ளி வடிவானவரே விருட்சத்தினது விதையுமாவார். மனித விருட்சத்தினது முழு ஞானத்தினையும் தன்னகத்தே கொண்ட இவ்விதையே அவ்விருட்சத்தின் சிருஷ்டிகர்த்தா ஆகும். இப்பெயரானது கோட்பாடுகள் சார்ந்த விளக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. எனினும் நாம் தியானத்தின்போது 'பாபா' என்ற பெயரை உபயோகிக்கிறோம். இதன் அர்த்தம் தந்தை ஆகும். பாபா என்றவுடன் உடனடியாகவே எமது அன்பான தந்தையுடனான எமது மிக நெருங்கிய உறவுமுறை நினைவுக்குக் கொண்டுவரப்படுகிறது. அதனால் இவரே அசரீரியான, அதிமேலான பரமாத்மா, சிவபாபா.









  

Friday, October 24, 2014

ராஜயோக தியானம்: பரமாத்மாவின் வடிவம்

ஆத்மாவானது மிகச்சிறிய ஒளிப்புள்ளி, மிக நுண்ணிய ஆற்றல் என்பதனை அடையாளம் கண்டு கொண்ட பின்பு, எம்மால் மற்றையவர்களை சகோதரர்களாக பார்க்க முடிகிறது. ஒவ்வோர் ஆத்மாவும் தனித்துவமான அடையாளத்தினை தன்னகத்தே கொண்டது, ஒவ்வொன்றும் வெறுவேறான, வித்தியாசமான அனுபவங்களின் பதிவுகளைக் கொண்டுள்ளது. தனித்துவமான புத்தியையும், குறிப்பிட்ட அலைநீளத்தில் செயல்படும் மனத்தினையும் கொண்டுள்ளபோதிலும் ஒவ்வோர் ஆத்மாவும் ஒரே அளவு மற்றும் வடிவத்தினை கொண்ட மிகச்சிறிய ஒளிப்புள்ளிகளாகும். எனவே அனைத்து ஆத்மாக்களின் தந்தையும் இதே வடிவத்தினைக் கொண்டிருப்பதும் சாத்தியமே.  பரமாத்மாவும் கூட மனம், புத்தி, சம்ஸ்காரம் ஆகியவற்றினைக் கொண்டிருக்கக் கூடிய தனித்துவம் வாய்ந்த ஓர் மிக நுண்ணிய ஒளிப்புள்ளியான ஆத்மாவே.

இறைவன் என்பவர் சக்தியின் வடிவமாக பல இடங்களில் கருதப்பட்டு வந்தபோதிலும், எம்மால் உறவுமுறை வைத்திருக்கக் கூடிய தனித்தன்மை மிக்க ஒருவராக கருதுவது சற்றே விசித்திரமானதே. சம்ஸ்காரம் என்றால் என்ன? ஆளுமை என்றால் என்ன? அவை செயல்களின் பதிவாகும். இறைவனானவர் நன்மை பயக்கும் செயல்களை செய்பவர் என்று நினைவுகூரப்படுகிறார். எனவே பரமாத்மாவினது சம்ஸ்காரங்களில் நன்மை உள்ளது. அவர் மெய்ஞானக் கடல் என்றும் நினைவுகூரப்படுகிறார். அனைத்து ஞானமும் அவரது புத்தியிலே இருக்கிறது. பரமாத்மாவின் புத்தியானது எல்லையில்லாதது. முழுமையான விழிப்புணர்வையும், மெய்ஞானத்தினையும் கொண்டது. பராமாத்மாவுக்கு மனம் இருக்கிறது. அவரே எல்லையற்ற அன்பினையும், அமைதியையும், கருணையினையும் கொண்டவராக அறியப்படுகிறார்.

இறைவனானவர் மிகமிக நுண்ணிய ஒளிப்புள்ளி என்ற கருத்தானது, இதுவரை அவரைப்பற்றி இருந்த முடிவற்றவர், எல்லையற்றவர் என்ற  கருத்துக்களிலிருந்து சற்றே வேறுபட்டதாகும்.  அளவிடப்பட முடியாத மிகப்பெரிதையே 'எல்லையற்றது' என்று கருதப்படுவதாக நினைக்கின்றனர். இருந்தும்  பௌதீக, கேத்திரகணித அளவியல் முறைகளுக்கு அப்பாற்பட்ட மிகமிக நுண்ணிய, அளவிடப்பட முடியாத ஒன்றைக் கூட இவ்வாறு சொல்ல முடியும். எனவே பரமாத்மாவின் வடிவம், எல்லையற்ற மிகப்பெரியது என்பதைவிட, அளவிடப்பட முடியாத மிக நுண்ணியது என்பதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

இறைவனின் பண்புகள் எல்லையற்றவை என கேள்விப்பட்டிருக்கிறோம். அதனாலேயே அவரின் வடிவத்தினையுமே எல்லையற்ற மிகவும் பெரியவர் என தீர்மானித்துவிட்டோம். ஆனால் வடிவத்துக்கும், பண்புகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மனிதர்களின் உருவத்தினை வைத்து அவர்களின் பண்புகளை நாம் தீர்மானிப்பதில்லை. அதேபோல் ஆத்மாவினது சக்திக்கும், பௌதீக பரிமாணங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. நாம் ஆத்மாவை மிகச்சிறிய ஒளிப்புள்ளியாக ஏற்கனவே அடையாளம் கண்டுவிட்டோம். இப்போது பரமாத்மாவையும் மிகச்சிறிய ஒளிப்புள்ளியாக கருதியவாறே, அச்சிறிய புள்ளியிலிருந்து எல்லையற்ற அன்பு, அமைதி, தூய்மை, பேரானந்தம், சக்தி போன்ற எல்லையற்ற திவ்ய பண்புகள் கதிர்பரப்புவதை காணலாம்.


இச்சிறிய ஒளிப்புள்ளியிலிருந்து ஒளியானது, தீபங்களிலிருந்து உருவாகும் ஒளியினைப்போல் நீள்வட்டவடிவில் பரவுகிறது. உலகம் முழுவதிலும், இறைவனானவர் ஒளிவடிவமாக, பெரும்பாலும் இத்தகைய நீள்வட்ட வடிவத்தில் நினைவுகூரப்படுகிறார். இந்த உருவம் பிற்பாடு வழிபடும் பொருட்டு, கண்ணுக்குப் புலப்படக்கூடியவாறு பெரிதாக பொன்னாலும், வெள்ளியாலும், வைரத்தினாலும் ஏன் பனிக்கட்டியினாலும் கூட உருவாக்கப்பட்டுள்ளது. உருவ வழிபாடற்ற இஸ்லாத்திலும் கூட இதேபோன்ற நீள்வட்ட வடிவான கரியநிறக் கல்லொன்று மக்காவில் வைக்கப்பட்டுள்ளது. இது (al-Ḥajar al-Aswad) புனித கல் என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிலுள்ள பௌத்தத்தின் ஒருபிரிவினர், தியானத்தில் தமது எண்ணங்களை, அமைதியை அளிப்பவர் என்று அறியப்படும் ஒரு நீள்வட்ட வடிவ உருவத்தின்மீது குவியப்படுத்துகின்றனர்.  பர்சிகளின் தீர்கதரிசியான Zoroaster, நெருப்பினை இறைவனின், அதிமேன்மையான ஒளியின் ஞாபகார்த்தமாக வழிபட பரிந்துரைத்தார். யேசுவும் இறைவனை ஒளியாக குறிப்பிட்டுள்ளார். மோசஸ், பற்றை எரிவது போலவும், ஒளி தோன்றுவதாகவும் காட்சிகள் கண்டிருக்கிறார். சீக்கிய மதத்தின் ஸ்தாபகரான குரு நானக், இறைவன் ஒன்றே எனவும் அவரை உடலற்றவராக, மனித உருவமற்றவராக குறிப்பிட்டிருக்கிறார்.  எனவே நிச்சயமாக இந்த வடிவத்திலேயே இறைவனானவர் உலகனைத்திலும் நினைவுகூரப்பட்டிருக்கிறார். 







Tuesday, October 21, 2014

தீபாவளி

தீபாவளி: எனது சொந்த 'ஆத்மீக விழிப்புணர்வு' என்ற விளக்கினை ஏற்றுதல்.

தீயசக்திகளை அழித்து அமைதியினையும் சந்தோசத்தினையும் ஏற்படுத்துவதை விளக்கும் தீபத் திருநாட்கள் அனேகமாக அனைத்து சமூகங்களிலும் காணப்படுகின்றது. தீபாவளி என்றவுடன் உடனடியாகவே மனதில் தோன்றுவது, இனிப்புகள், புதிய ஆடைகள், கணக்குவழக்கு புத்தகங்கள், இலக்ஷ்மிதேவி, வானவேடிக்கை போன்றவைகளே.. மகாராஷ்ட்ராவில் இது ஐந்து நாட்கள் சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. என்னதான் பௌதீக சடங்குகள் அவசியமாக இருப்பினும், அவற்றையும் தாண்டி ஆழமான ஆன்மீக அர்த்தத்தினையும் அறிந்திருப்பது, அவற்றின் மீதான மதிப்பினை தக்கவைத்து அதன்படி வாழ வழிவகுக்கும். 

நாம் இத்தகைய மங்களகரமான நாட்களை கடந்த காலங்களைப் போலவே மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடுகின்ற போதிலும், எமது முன்னோர்களிடம் காணப்பட்ட தூய நம்பிக்கைகள் அதிக தெளிவூட்டுபவையாக இருந்தன. 

தீபாவளி என்பது தீய சக்திகள் மீதான வெற்றியை குறிக்கிறது. ஆனால் இதை மேலும் நன்கு ஆராய்ந்து பார்த்தோமானால், எந்த இருளினை அல்லது தீய சக்திகளை நாம் நீக்கப் போகிறோம்? உண்மையில் தீயசக்திகளுக்கோ அல்லது இருளுக்கோ என்று சொந்தமாக வடிவமோ அடையாளமோ இல்லை. மாறாக அவை, நற்குணங்கள் அல்லது ஒளியின் பற்றாக்குறையே ஆகும். 

முதல் நாள் (Dhanamyodashi) : இது தன்வந்திரியை வழிபடுவதில் தொடங்குகிறது. தன்வந்திரி என்பது அனைத்து நோயினையும் குணமாக்ககூடிய ஒருவித ஆயுள்வேத மூலிகையாகும். மனிதனுக்கு ஏற்படும் நோய்களில் 98% ஆனவை உளவியல் சம்பந்தப்பட்டவை, அதாவது பிரச்சினை மனதில் தான் என்று விஞ்ஞானம் கூட நிரூபித்திருக்கிறது. காலம் மற்றும் சந்தர்ப்பங்களால் மனிதன் தனது உள்ளார்ந்த சக்தியின் பெரும் பகுதியை இழந்துவிட்டான். இதன் காரணமாக காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் போன்ற விகாரங்களினால் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவன் ஆகிவிட்டான். பலவீனமுற்ற மனமானது, உடலையும் பாதித்துவிட்டது. தற்போது தன்வந்த்ரியாகிய இறைவனால் பரிந்துரைக்கப்பட்ட ஆத்மீக ஞானம் எனும் மாத்திரைகளை உட்கொள்வதனால், மனதையும் உடலையும் குணமாக்கிக்கொள்ள முடியும்.

இரண்டாவது நாள் (Narkchaturdashi) : தன்னைஉணர்தல் மற்றும் இறைவனை உணர்தல் பற்றிய ஆன்மீக அறிவானது இறைவனால் மட்டுமே கொடுக்கப்பட முடியும். தீபாவளியில் விளக்கேற்றும் பாரம்பரியமானது, இறைவன் எவ்வாறு வந்து எம்மிடம் நாங்கள் ஆத்மாக்கள் என்ற விழிப்புணர்வை பற்றவைக்கிறார் என்பதை குறிக்கிறது. இந்த ஞானத்தின் உதவிகொண்டு விகாரங்களை வெல்ல முடிகிறது. இதன் ஞாபகார்த்தமே, நரகாசுரவதம் அல்லது தீயசக்திகளை அழித்தல் ஆகும். 

மூன்றாவது நாள் : இந்நாள் இலட்சுமிதேவியை வரவழைப்பதில் செலவிடப்படுகிறது. தற்காலத்தில் நாம் இலஷ்மிதேவியின் நிலையை மிகவும் தாழ்த்தி ஒரு வங்கியாளராக ஆக்கிவிட்டோம். உண்மையில் அவரது பெயரில் 'லக்க்ஷ்' என்றால் இலக்கு ஆகும். எனவே அவரது நிலையே, நாம் அனைவரும் அடையவேண்டிய இறுதி இலக்காகிய பரிபூரண நிலையாகும். தெய்வீக ஞானமும், நற்குணங்களுமே அவர் வழங்கும் செல்வங்களாகும். நன்னடத்தையுடையவர் ஒருவரால் மட்டுமே செழிப்பினையும், அமைதியினையும் அடைய முடியும். இலஷ்மியின் வருகைக்காக வீடுகள் அனைத்தும் தூய்மையாக்கப்படுகின்றன. இருந்தும் மனதையும் புத்தியையும் தூய்மையாக வைத்திருத்தலே அவரை ஈர்க்கக்கூட்டிய இலகுவான வழி என்பதை நாம் மறந்துவிட்டோம். 

நான்காவது நாள் (Balipratipada) : பரமாத்மாவின் நினைவில் இருந்து செய்யும் ஒவ்வொரு செயலிலும் நாம் வெற்றி காண்போம். ஆத்மீகத்தில் இதுவே யோகம் அல்லது இணைப்பு என்பதை குறிக்கிறது. எம்மை ஒளிப்புள்ளியாக நினைத்து, எமது புத்தியையும் எண்ணங்களையும் பரம தந்தையான இறைவனிடம் வழிப்படுத்தும்போது அவரது அன்பினையும் சக்தியையும் அனுபவம் செய்ய முடியும். இச் சக்தி கொண்டு எமது பலவீனங்களை அழித்து  நற்குணங்களை பதியவைக்க முடியும். 

ஞானத்தினை பெறுதல் -> விகாரங்களிருந்து விடுபடுதல் -> புத்தியினை தூய்மையாக்குதல் -> பரமாத்மாவை நினைவில்கொள்ளுதல் என்ற இந்த அழகான படிமுறை ஐந்தாவது நாளை போற்றுவதற்கு வழிவகுக்கிறது. 

ஐந்தாவது நாள் (Bhaiyadooj) : ஆத்மாவைப்பற்றிய இந்த தனித்துவம் வாய்ந்த ஞானத்தின் மூலமாக, இதுவரை காலமும் கொண்டிருந்த இனம், மதம், நிறம், பால், வயது போன்ற பாரபட்சம் மிக்க குறுகிய எண்ணங்களிலிருந்து விடுபட முடிகிறது. இதனால் நாம் ஒவ்வொருவரையும் தனிப்பட்டவர்களாக, எமது ஆன்மீகக் குடும்பத்தில் இருக்கும், கடவுளின் குழந்தைகளாக பார்க்க முடிகிறது. இதுவே இறுதியான உண்மையாகும். 

இனிப்புகள் (அன்பான உறவுமுறைகளை பேணுதல்)
புதிய ஆடைகள் (பழையனவற்றை கைவிடுதல்)
புதிய கணக்கு புத்தகம் (கர்ம கணக்குகளை தீர்த்தல்)
வாணவேடிக்கை (தீய சக்திகளை எரித்தல்)
மற்றும் பிற சடங்குகள் பிறக்கவிருக்கும் புதிய ஆண்டை அல்லது யுகத்தினை வரவேற்பதாக அமைகிறது. அறியாமையின் இருளானது தொடர்ந்து இருக்க முடியாது. புதிய சந்தோஷ உலகத்தினை உருவாக்கும் அனைவரது மிக ஆழமான ஆசையும் நிஜமாகும்.

ஒரு தீபத்தினை (எமது ஆத்மீக விழிப்புணர்வு) ஒளியேற்றுவதன் மூலம், அதன் ஒளியினால் பிற தீபங்களையும் (பிறரையும்) இலகுவில் ஒளியேற்ற முடிகிறது. 












ராஜயோக தியானம்: பரமபிதா பரமாத்மா

நான் ஓர் அமைதியான ஆத்மா. பௌதீகமல்லாத, மிகச்சிறிய ஒளிப்புள்ளி. இந்த உணர்விலிருந்துகொண்டு பிறரையும் என்னால் இவ்வாறு பார்க்க முடிகிறது. இவ்வாறு நாம் பௌதீக அடையாளங்களைவிட்டு வெகு அப்பால் செல்லும்போது, உருவம், தொழில், பிறருடனான சரீர உறவுமுறைகள் போன்றவற்றை மறந்துவிட்டு அனைவரையும் சகோதரர்களாகவே காண்கிறோம். அனைத்து ஆத்மாக்களும் சகோதரர்கள், மிகச்சிறிய ஆற்றல். இவர்கள் உலக அரங்கில் நடைபெறும் இந்த உலக நாடகத்தில், வெவ்வேறு பௌதீக உடைகளில், வெவ்வேறு பாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர்.  

ஆயினும், பல கேள்விகள் இன்னும் தோன்றும். நாம் எல்லோருமே சகோதரர்கள் எனின், இந்த உலகமே ஒரு பெரிய குடும்பம் எனின், இந்த ஆத்மாக்கள் அனைவருக்குமே தாய் அல்லது தந்தை என்று யாராவது இருக்கிறார்களா? அதேபோல, நாம் எல்லோருமே, பல்வேறு உடைகளில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் என்றால், இத்தகைய பிரமாண்டமான நாடகத்திற்கு இயக்குனர் என்று யாராவது இருக்கிறார்களா? ஓர் அதிமேலான பரம்பொருள், சக்திகளின் ஆற்றல்களின் மெய்யறிவின் ஆதாரம், தந்தையாகவும் இயக்குனராகவும் தனது பாத்திரத்தினை நிறைவேற்றக்கூடிய ஒருவர் இருப்பது சாத்தியமா? 

முன்னர் கூறப்பட்டது போல், யோகம் என்றால் இணைப்பு. ராஜ என்றால் அரசன் அல்லது முதன்மையான குறிப்பாக அதிமேலான(supreme) என்று பொருள். எனவே ராஜயோகம் என்பது அதிமேலானவர், தந்தை, இயக்குனர், இறைவன் என நினைவு கூரப்படுபவருடனான இணைப்பு என்று அர்த்தம். 


எனினும் பரம்பொருளின் அடையாளத்தினை நாம் தேடிக்கொண்டு போகுமிடத்து, மிகவும் குழப்பமே உண்டாகுகிறது. ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் வெவ்வேறு பதில்களே கிடைக்கின்றன. ஏராளமான வேத சாஸ்திரங்களின் மூலம் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் எம்மீது திணிக்கப்படுகையில், நாம் ஒரு கட்டத்தில், இறைவன் என்பவர் உண்மையிலேயே இருக்கிறாரா? அல்லது மனித மனங்களின் கற்பனையா? என்று எண்ணும் நிலைக்குக் கூட வந்து விடுகிறோம். உண்மையாகவே அதிமேலானவர் ஒருவர் இருப்பாராயின், நிச்சயமாக எம்மால் அவரைப்பற்றிய முழு அறிமுகத்தினை, தகவலைகளை பெறுவதும் சாத்தியமே.

மனிதர்களின் ஆராய்ச்சிகள் ஒருபுறமிருக்க, பரமாத்மா மூலமாகவே அவரின் உருவம் மற்றும் அடையாளம் போன்றவற்றின் அறிவை பெறுவது முற்றிலும் வேறுபட்டதாகும். முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்களை இப்போது நாம் ராஜயோகத்தின் படி பரிசீலிக்கலாம். ஒருவேளை அவற்றை ஆராய்வதன் மூலம் பரம்பொருளினை அனுபவம் செய்ய முடியலாம். எது எப்படியிருந்தாலும் மெய்யறிவின் நோக்கம் அனுபவம் செய்தலாகும். உண்மையிலேயே நேரடித் தொடர்ப்பின்மூலம் பரமதந்தையுடனான உறவினை அனுபவம் செய்வது சாத்தியமா?




Monday, October 20, 2014

ராஜயோக தியானம்: Meditation - Tuning of the Intellect


சிறிது நேரம் அமைதியாகவிருந்து, எமது எண்ணங்களை புருவ மத்தியில், சூட்சுமமான மிகச் சிறிய ஒளிப் புள்ளியான ஆத்மா மீது குவியப்படுத்தும் போது, அந்த ஆற்றலானது அவ்விடத்தில் ஒளிர்ந்து பிரகாசிப்பதை உணரமுடியும். இதை திரும்ப திரும்ப பயிற்சி செய்யும்போது, சிறிது காலத்தின் பின்னர் இந்த பிரக்ஞையை சில வினாடிகளிலேயே அடைந்து, தொடர்ச்சியான அனுபவத்தினை பெறமுடியும்.

அறையினை முடியுமானவரை மென்மையாக ஒளியேற்றவும். சிறிதுநேரம் அமைதியாக, உங்களுக்கு வசதியான முறையில் அமரவும். சிரமமான ஆசன முறைகள் அவசியமில்லை. மனமானது சில குறிப்பிட்ட எண்ணங்களை பின்பற்றும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த எண்ணங்கள் மனதினூடாக அமைதியான முறையில், எளிதாகப் பாய்ந்துசெல்ல அனுமதிக்கப்படும்போது ஆத்ம உணர்வினை அனுபவம் செய்ய முடியும்.

தியானத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட எண்ணங்கள்

உங்கள் எண்ணங்களை, மனத்தை, சுயம் நோக்கி, மிகச்சிறிய ஒளிப்ப்புள்ளியான ஆத்மாவை நோக்கித் திருப்புங்கள்..

ஆத்மாவாகிய நான், மிகச்சிறிய ஒளிப்புள்ளியாவேன்.. மிக சூட்சுமமான ஆற்றல்.. நான் புருவ மத்தியில் அமர்ந்திருக்கிறேன்.. இதுவே நான்.. ஆத்மா.. இந்த பௌதீக சரீரம் எனது உடையாகும்.. ஆத்மாவாகிய நான் அதனை உபயோகப்படுத்துகிறேன்.. இது எனது இருப்பினை வெளிப்படுத்துவதற்கு உதவுகிறது.. இதனூடாக நான் எனது ஆளுமையை வெளிப்படுத்துகிறேன்..  
இப்பொழுது நான்.. எனது உண்மையான அடையாளத்தை உணர்ந்துவிட்டேன்.. நான், எனது சிறைக்கதவை உடைத்துவிட்டேன்.. இப்போது நான் சுதந்திரமானவன்.. ஒரு பறவையைப் போல என்னால் இப்போது மீண்டும் பறக்க முடிகிறது.. 
இப்போது நான்.. எனது உண்மையான இயல்பாகிய அமைதியுடன் இணைந்துவிட்டேன்.. நான் அமைதியை உணர்கிறேன்.. நானே அந்த அமைதியாவேன்.. இப்போது நான், எனது உண்மையான இயல்பாகிய ஒளியை உணர்ந்துவிட்டேன்..  நான் அந்த ஒளியாகிறேன்.. நானே அந்த ஒளியாவேன்.. இப்போது நான், எனது உண்மையான இயல்பாகிய அன்பினை உணர்ந்துவிட்டேன்.. நான் அந்த அன்பு ஆகிறேன்.. நானே அந்த அன்பாவேன்..  
இப்போது ஆத்மாவானது, சக்தியால் முழுதாக நிரப்பப்படுகிறது.. நான் மிகவும் இலகுத் தன்மையானதாகவும், எளிதாகவும் உணர்கிறேன்.. இப்பொழுது நான், இந்த உடலின் அடிமையல்ல.. அதன் எஜமான் ஆவேன்..  
இப்போது நான் இந்த உலகத்துக்கு, ஒளியினையும், அமைதியினையும், தூய்மையினையும் பரப்புகிறேன்..




பயனுள்ள முறை:  ஒளியினைப் பார்ப்பதனால், நாம் இலகுத்தன்மையினால் நிரப்பப்படுகிறோம். பிறரைப் பார்க்கும் போதும், அவர்களின் புருவ மத்தியில் வீற்றிருக்கும் ஆத்மாவை, ஒளிப்புள்ளியை காண்பதனால் நாள் முழுவதும் இலகுத்தன்மையை உணர முடிகிறது.

மீட்டல்: "பாடம் ஒன்று: நான் யார்?" இத்துடன் முடிவடைகிறது. கீழுள்ள வினாக்களுக்கு விடையளிப்பதன் மூலம் இந்தப் பாடத்தைப் பற்றிய மிக ஆழமான அனுபவமும், புரிந்துணர்வும் ஏற்படும். இதுவும் ஒருவித தியானமே. சிலர் பதிலளிப்பதற்கு முன்பு இரண்டு அல்லது மூன்றுமுறை திரும்பவும் முழு பாடத்தினையும் வாசித்துப்பார்ப்பர். பதிலளிக்கும்போது மகிழ்ச்சியினை அனுபவம் செய்தாலே முக்கியமானது. 

வினாக்கள்:

1. ஆத்மா என்றால் என்ன?
2. ஆத்மாவுக்கும் உடலுக்கும் எத்தகைய வேறுபாடுகள் காணப்படுகின்றன?
3. மனம், புத்தி, சம்ஸ்காரம் என்பவை யாவை?






Friday, October 17, 2014

ராஜயோக தியானம்: ஆத்ம உணர்வின் முதல் படிநிலை

எமது தற்போதைய நிலை பற்றி, சென்ற பதிவில்  பார்த்தோம். இது நிச்சயமாக விரும்பத் தகாத ஒன்றாக இருப்பினும் அதுவே பலரின் இன்றைய நிலையாகும். ஆனால் எமது நிலை அத்தகையதாக இருக்கவேண்டிய அவசியமே இல்லை. இந்நிலையை மாற்றுவதற்கு முதலாவதாக, தீர்மானிக்கும் சக்தியான புத்தியை விழிப்படையச் செய்யவேண்டும். இது மிகவும் சுலபமானது.

ஒரு கட்டுக்கடங்காத குதிரை: நான் ஓர் ஆத்மா என்ற விழிப்புணர்வின் மூலம், இப்போது இந்த உலகில் எமது உண்மையான நிலையை உணர முடிகிறது. இந்த விழிப்புணர்வு நிலையில், எமது எண்ணங்களை கட்டுப்படுத்துவதும், மனதை ஒழுங்கமைப்பதும் எமது கடமை என்பதை உணர்கிறோம். மனமானது மகத்தான ஆற்றல் மிக்க கட்டுக்கடங்காத குதிரைக்கு ஒப்பிடப்படுகிறது. அது ஒருபோதும் நிற்காமல் சுற்றி சுற்றி ஓடிக்கொண்டேயிருக்கிறது. இரவு பகலாக ஓடுகிறது. கனவுகளில் கூட நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதனால் அது களைத்துவிட்டதோ என்று கூட சிறிது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் தன்னை எப்படி அமைதிப் படுத்திக் கொள்வது என்று அதற்குத் தெரியாது. சற்று அமர்ந்திருப்பதன் மூலம் எமது உடலுக்கு சிறிது ஓய்வு கொடுக்க முடியும். ஆனால் மனமானது அமைதியடைய மறுக்கும். அதற்கு எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கத்தான் தெரியும். ஆனால் எத்திசையில் ஓடுவது என்று கூடத்தெரியாது. 

உணர்தல்: நான் இந்த பௌதீக உடலல்ல, அதனுள் இருக்கும் சக்திமிக்க ஆற்றல் என்பதை உணர்ந்த கணமே, அச்சக்தியை என்னால் உபயோகிக்க முடிகிறது. இந்த விழிப்புணர்வின் மூலம், கட்டுக்கடங்காத குதிரையாகிய எமது எண்ணங்ககளை வழிக்குக் கொண்டுவரும் கடிவாளம் எமது கைக்கு வருகிறது. எண்ண அலைகளின் விழிப்புணர்வின் மூலம் அவற்றின் ஓட்டத்தினை வழிப்படுத்த முடிகிறது. இதனால் இதுவரை எம்மை களைப்புறச் செய்த, சக்திகளின் வீண்விரயம் தவிர்க்கப்படுகிறது. 

தெரிவுசெய்தல்: நாம் இப்போது எமது ஆசைகளின் மீது தேர்வுசெய்யும் அதிகாரம் உள்ளவர் ஆகிவிட்டதனால், தற்காலிக இன்பங்களைத் தரும் எண்ணங்களையல்லாமல், நிரந்தர சந்தோசத்தை அளிக்ககூடிய எண்ணங்களை மட்டும் தெரிவுசெய்ய முடிகிறது. தூய்மையான எண்ணங்களை மட்டுமே செயல்களாக அனுமதிப்பதனால், இதுகாலவரை எமது கவலைகளுக்குக் காரணமான தூய்மையற்ற சம்ஸ்காரங்கள் பலவீனமாகி, தூய்மையான சம்ஸ்காரங்களுக்கு வழி விடுகின்றன. இதன் மூலம், சதா பதட்டமான, ஏக்கம் நிறைந்த எண்ணங்களுக்குப் பதிலாக அமைதியான, திட்டமிடப்பட்ட எண்ணங்களை மட்டுமே எப்போதும் கொண்டிருக்கும் நிலையை அடையமுடியும். 

விளைவு: ஆரம்பத்தில் மனத்தின் மீது நன்கு திட்டமிடப்பட்ட கட்டுப்பாடு அவசியமாக இருப்பினும், இதுவே முழுதான சுயமாற்றத்திற்கு வழிவகுக்கிறது. எனவே இது வெறுமனே வெளியிலிருந்து திணிக்கப்பட்ட சக்தியோ அல்லது ஒழுக்கக் கோட்பாடுகளோ அல்ல. அவற்றால் எமது சுபாவம் மற்றும் நடத்தைகளே மேன்மையானதாக்கப்படுகின்றன. பின்னர் ஒரு கட்டத்தில், தூய்மையானதும் மேன்மையானதுமான சந்தோசத்தினை தரக்கூடிய எண்ணங்களை மட்டுமே கொண்டிருக்ககூடிய நிலையை அடைகையில், எம்மால் பிறருக்கும் சந்தோசத்தினை கொடுக்க முடியும்.

எமது புத்தியின் விழிப்புணர்வால், ஒவ்வொரு எண்ணங்களும் மதிப்பீடு செய்யப்படுவதனால் தவறுகள் ஏற்பட முன்னரே அவை தவிர்க்கப் படுகின்றன. இதனால் எமது வாழ்வில், முன்னர் சாத்தியமில்லாததாகக் கருதப்பட்ட பல மாற்றங்கள் இலகுவில் சாத்தியமாகிறது. 

சம்ஸ்காரங்களை உருவாக்குதல்: பலகாலமாக சரீர உணர்விலேயே இருந்து விட்டதனால், 'நான் ஓர் ஆத்மா' என்ற எண்ணம் அடிக்கடி மறந்து விடுகிறது. முயற்சியால் மட்டுமே இந்த விழிப்புணர்வை தக்க வைத்துக்கொள்ள முடியும். எனவே எமக்கு நாமே கற்பித்துக்கொள்ளும் சம்ஸ்காரத்தினை முதலில் உருவாக்கிக்கொள்ள வேண்டும். எம்மைச் சுற்றியுள்ளவர்கள் எம்மை இந்த உடலாகவே பார்த்தாலும், நாம் இந்த உடல்தான் என்று சொன்னாலுமே, "நான் ஓர் அமைதியான, கட்புலனாகாத, அழிவற்ற ஆத்மா, இந்த உடலை வெறுமனே ஒரு கருவியாக உபயோகப்படுத்துகிறேன்." என்று எமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டும். இந்த மனப்பாங்கில் நிலைத்திருக்கும்வரை, நாம் முழு சுதந்திரத்தினை கொண்டிருப்போம். எமது செயல்களும் சரியானவையாகவும், சாதகமானவையாகவும் இருக்கும். 

பிறரைப் பார்க்கும்போதும், அவர்களை ஆத்மாக்களாக, சகோதரர்களாக பார்ப்பதனால், ஆளுமை மோதல்களின் விவரண குறுக்கீடுகள் எதுவுமற்ற தூய அன்பு மற்றும் நல்லிணக்கத்துடன் கூடிய உறவுமுறைகள் உருவாகின்றன. அவர்களை ஆண், பெண் என்று பௌதீகமாக பாராது, என்னைப் போலவே அவர்களும் ஆத்மாக்கள், பௌதீகமல்லாதவர்கள் என்று பார்க்கும் போதே இது சாத்தியமாகிறது. 

ஆத்ம உணர்வு நிலை என்பது: நான் ஆத்மா என்ற விழிப்புணர்விலிருந்து எனது கருவியான இந்த சரீரத்தினை விவேகத்துடன் உபயோகித்தாலும், அனைத்தையும் மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணினைக் கொண்டு பார்த்தலுமேயாகும்.







Thursday, October 16, 2014

ராஜயோக தியானம்: எமது இன்றைய நிலை


தூய்மையற்ற சம்ஸ்காரங்கள், திரும்பத் திரும்ப செய்யப்படுவதன் மூலம், தம்மை வலுவானதாக்க அனுமதிக்கப்படும் போது, உள்ளுணர்வானது படிப்படியாக பௌதீக புலன் உணர்வுகளின் வலிமையான செல்வாக்கிற்கு வழிகொடுக்கத் தொடங்குகிறது. சக்திமிக்க இப்புலன்களின் பலமான கவர்ச்சியினால், உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, எமது சொந்த புத்தியின் தீர்மானங்களையே ஒதுக்கித் தள்ளும் நிலைக்கு ஆளாகிறோம். இதன் விளைவாக, அதே சூழ்நிலை திரும்பவும் வரும்போது, ஏற்கனவே பலவீனமான மனச்சாட்சியினது செல்வாக்கு, முன்னரைவிட இப்போது இன்னும் குறைவாகவே இருக்கும். காலப்போக்கில் அது பேசுவதை முற்றாக நிறுத்திவிடுகிறது. மனச்சாட்சியானது அலட்சியம் செய்யப்படுகையில், அறியாமையின் வழிச்செல்வது தவிர்க்க முடியாததாகிறது.

இதனால், அநேக சமயங்களில் சரியானதை தவறானதிலிருந்து பிரித்தறிவதில் உறுதியற்ற அல்லது நிச்சயமற்ற நிலையை காண்கிறோம். சரி, தவற்றின் இருப்பை மறுதலிக்கக் கூட செய்கிறோம். சுயநலமான மற்றும் சுயநலமற்ற செயல்களை வேறுபடுத்திப் பார்க்கமுடியாதளவு புத்தியானது தெளிவற்று இருப்பதால், நெறிபிறழ்ந்த நிலை தழைக்கிறது.

இவ்வாறு, செயல்கள் படிப்படியாக இழிவான நிலையை அடைவதால், சந்தோசத்திற்கான தேடலும், பூர்த்தியும் அத்தகைய தாழ்ந்த நிலையிலேயே சாத்தியமாகிறது. "நான் ஓர் ஆத்மா" என்ற ஞானம் இல்லாதுவிடின், சரீர உணர்வானது சம்ஸ்காரங்களில் ஆழமாக பதியப்பட்டு, ஆத்மாவானது சந்தோசத்தினை பௌதீக மட்டத்திலேயே காண்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறது.

சுயத்தில் இருந்து மனநிறைவு காண முடியாமல், ஆத்மாவானது தனது முழு கவனத்தினையும் பௌதீக ஆதாரங்களிருந்து பெறப்படும் தற்காலிக இன்பங்களை நோக்கி திருப்புவதனால், அது விரைவில் திருப்தியின்மையையும், வெறுமையையும் அனுபவம் செய்கிறது. இத்தகைய பலவீனமான நிலையில் ஆத்மாவானது, மனதுக்கு ஆறுதலளிக்கும் எந்தவொரு ஆதாரத்தையும் இறுகப் பற்றிப் பிடித்துவிடுகிறது. நோக்கமானது தரம் தாழ்ந்து புலன் திருப்தியினை நோக்கி செல்கையில், இப் பொறிக்குள்  சிக்கிய ஆத்மா தனது திருப்தியின்மையை போக்குவதற்கு மேலும் மேலும் அதிக இன்பங்களை தேடி அலையத் தொடங்குகிறது. 

தற்காலத்தில் எமது மனமானது புலன்களிடம் முழுமையாக அடிமையாகிவிட்டதனால், எம்மால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. எவ்வளவுக்கெவ்வளவு எமது கவனத்தை சுயத்திலிருந்து விட்டு விலகுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு துன்பத்திலும் துயரத்திலும் சிக்கித் தவிக்கிறோம். இன்று உலகம் முழுவதிலும் இத்தகைய அகமுரண்பாடுகளை வெகு சாதாரணமாகக் காணமுடியும்.